வியாழன், 11 நவம்பர், 2010

ஒரு சிறு குறிப்பு....

வழக்கமான உற்சாகங்கள் ஏதுமின்றி ஒரு விடுமுறை தினமாக மட்டுமே கழிந்தது  தீபாவளி. பண்டிகைகள்,பிறந்த நாள்கள் மற்றும் ஏதாவது முக்கிய நிகழ்வுகள், நன்றாக சாலையில் ஒடிக்கொண்டிருக்கும் வாகனம் திடீரென்று நம் கட்டுப்பாட்டை மீறித் இடவலமாக திமிறும்,  நிறுத்தி பின் சக்கரத்தை உற்று நோக்கும் செயலைப் போல் வாழ்கையின் கடந்த நாள்களை நிதானித்து நோக்குவதற்கு வாய்பளிக்கிறது....

இந்த வருடப் பண்டிகை போனவருட பண்டிகையையோ அல்லது அதற்கு முந்திய எதாவது ஒரு பண்டிகையையோ நினைவுபடுத்துகிறது.

அதிலும்  தீபாவளிப் பண்டிகைகள் மிக விசேசமானைவையாகும்.. .புத்தாடை,பலகாரங்கள்  இரண்டுமோ (அ) எதாவது ஒன்றோ என ஏனைய பண்டிகைகளிலிருந்து விடுபட்டு தனித்து நிற்கும் தீபாவளியின் சிறப்பு பட்டாசுகளினால்.....

கையில் பத்துவிரல்களிருப்பதே ஆரம்பள்ளிகளின் கணக்குகள் தாண்டி பண்டிகைத் தேதியை வாரங்களாக,நாட்களாக எண்ணி மகிழத்தான்....

மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிடும் பால்ய கால தீபாவளி...ஒருமாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது விடலைத் தீபாவளி..வரப்போகும் மனைவியைப்போலவோ,வந்து நிற்கும் காதலியைப் போலவோ,அழைப்பிதழ் தந்து செல்லும் தோழியைப்போலவோ இருக்கிறது விடலை பதுங்கி, முதிர்வின் நிழல் தெரிபடத் துவங்கும் இந்த வயதுகளின் தீபாவளி...

வாழ்க்கையின்,பண்டிகைகளின் சலிப்புகள் பற்றி படராதவர்கள் பாக்கியாவான்கள்...ஆனால் எனக்கோ புத்தகம் தொடங்கி,படம்,இசையென பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது சலிப்புகளின் மேலேறி வர..

எதிலும் பங்கேற்காமல் ஒரு வேடிக்கையாளானாய் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து ரசித்து தாண்டிப் போக பழகிக்கொண்டிருக்கிறேன்.. எதிலும் பட்டுக்கொள்ளாமலும், பங்கேற்காமலும் இருப்பதென்பது அவ்வளவு சுலபமானதாகவில்லை...

ஒரு புள்ளியைச் சுற்றியுள்ள சாத்தியப்பாடுகள் அதிக ஆர்வத்தையும் தரும் அதற்கீடான சலிப்பையும் தரும்..அவரவர் மனோநிலையை பொறுத்தது இது.

 அணிந்திருக்கும் கண்ணாடிகளுக்கேற்ப மாற்றங்கள் பெறும் பிம்பங்கள் மட்டுமே எல்லா நாட்களும்...

வெள்ளி, 1 அக்டோபர், 2010

வரிக்கு வரி
அழுத்தம் திருத்தமாக
இரண்டு முறைகள்
சப்தமாக தன் கவிதையை வாசிப்பது
அவர் வழக்கம்..

நாட்களின் நகர்வில்
அவருடைய சப்தங்களே  

கவிதைகளாயின...
                ****
விசேச தினங்கள்

1)
தர நினைத்து
தரத் தயங்கி
தரயேலாமல்
நினைவாய் வைத்துக்கொள்ளும்
வாழ்த்து அட்டைகள்
வாங்குவதற்கு...

2)
வாழ்த்துக்கள் நுரைத்துப்
பொங்கும் விசேச தினங்களில்
என் விசேங்கள் நுரைப்பதோ
உன் வாழ்த்துகளில்

புதன், 1 செப்டம்பர், 2010

மொட்டை மாடியில் நின்று ரசித்த மாலைப் பொழுதுகள்......

வானம் அன்றாடமாய்

மாலை நிகழ்வுகளின் குவியம்..

பறவைகளென

சிறகு கிளைத்த எழுத்துக்கள்

கூடிப் பிரியும் வெளியில்...

சமயங்களில் வார்த்தைகளாகவும்

சமயாசமயங்களில் வரிகளாகவும்...

கவிதை மனதில் கருக்கொள்ளும்

தருணம் நினைவில் அலைமோதும்.

உயரப் பறக்கும் புள்ளினங்களெல்லாம்

கருப்பாய் தெரிவது மாயமோ

மயக்கமோ....

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....


இளைத்த எண்களில் 
விரல் படும்போதிலெல்லாம்
உதிர்ந்த இலையென
ஒட்ட இடம் தேடி அலையும் ப்ரியத்தில்
கனத்த நினைவுகள்..
*
முடிச்சவிழ்ந்த ரகசியகங்கள்
ஒவ்வொன்றும் பூமிக்கு
வருகிறது மழையென்று....
*
ஏற்ற இறக்கத்தில் 
உன் சிரிப்பைப் போலவேயிருக்கிறது
நான் அடிக்கடி கேட்கும் வயலின் இசை
பின்னான சந்திப்புகளில்
நீ சிரிக்கையில் வயலின்
இசைக்கிறதா! வயலின் இசைக்கையில்
 நீ சிரிக்கிறாயா! பூசணிக்காயைச்
சுற்றும் எறும்பென
குழப்பத்தில் வீழும் பிரக்ஞை!

சனி, 14 ஆகஸ்ட், 2010

முதல் அலைபேசியிலிருந்து.......





அரை நாழிகைக்கும் குறைவான
ஒரு ஒலி உயிர்பிக்கலாம்
ஒரு பிரியத்தை,காதலை,நட்பை...
ஒரு முழுப்பேச்சில் இழக்கவும்
நேரிடலாம் 
அதே பிரியத்தை,காதலை,நட்பை..
            
*

நீ..நானென்று முறைவைத்த
அழைப்புகளில் தளும்பிய நாட்கள் போய் 
இப்போது 
நீயா? நானா? என்று  நீள்கிறது வெறுமனே
சில்லறை விசயங்களில்
முரண்பட்டு

      *

இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த 
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை..
                     
   *   

சனி, 7 ஆகஸ்ட், 2010

முடமான நம்பிக்கை!!!

அது நிச்சயம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் விடுப்புத்தினமான ஒரு  சனிக்கிழமையாகத்தானிருக்க வேண்டும்.

நான் நூலகத்திற்கு வந்திருந்தேன். ”இளைய பாரதம்” என்ற பெயரில் நாங்கள் புதிதாகத் தொடங்கியிருந்த கையெழுத்துப்பிரதியின் அன்றைய மாதத்தின் பிரதியை நூலகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அல்லாதோர்களின் பார்வைக்கு வைந்திருந்தேன். இந்தப் பிரதியில் புதிதாக வாசிப்பவர்களின் கருத்துக்களை அறிவதற்காக  சில வெற்றுப்பக்கங்களை இதழின் பின்புறத்தில் இணைத்திருந்தோம்.

நூலகம் திறந்த (9.30) ஒரு மணி நேரம் கழிந்து (10.30) வந்த ஒருவர், எல்லாப் பத்திரிக்கைகளையும் புரட்டியபோது “இளைய பாரதம்” அவரின் பார்வையை இடறியிருக்கவேண்டும். எடுத்து சிரத்தையுடன் (இந்த வார்த்தையை நானே சேர்த்துக்கொண்டேன்) வாசிக்கத்தொடங்கினார்.வாசித்து  முடித்ததும்   வெற்றுப் பக்கத்தை உபயோகமுள்ளதாக்கினார். 

அவர் சென்று சிறிது நேரம் கழிந்தபின் என்ன எழுதியிருக்கிறார் என்ற ஆவல் மேலெழ படித்துப் பார்த்தோம்.ஆம்! அவர் வாசித்துக்கொண்டிருக்கையில் கையெழுத்துப்பிரதியின் முழுமுதல் உரிமையாளர் என்னுடன் இணைந்து கொண்டார். உங்களின் கவனம் முழுவதும் வாசிப்பவரின் மேலேயேயிருந் -ததால் நான் இதை அப்போது உங்களுக்குச் சொல்லவில்லை.

சரி விசயத்திற்கு வருவோம். அவர் அந்த கையெழுத்துப்பிரதியில் இருந்த மூட நம்பிக்கை கட்டுரையைப் பற்றித்தான் கருத்துச் சொல்லியிருந்தார். நிற்க! இந்த இடத்தில் மூடநம்பிக்கை என்று நான் எதைச் சொல்லுகிறேன் என்பதை தெரிந்துகொள்வதற்காக உங்கள் ஆவல் அதிகரிப்பது இயல்புதான். ஒரு விசயத்தை நேரிடியாக சொல்வதைக் காட்டிலும் ஒரு குட்டிக்கதை மூலமாகவோ (அ) சம்பவம் மூலமாகவோ சொல்வதுதான் சிறந்த உத்தி என்று அன்றைய பிரபல இதழ்களின் வாயிலாகவும், சில படங்கள், செய்திகள், நண்பர்கள் ,ஆசிரியர்கள் இத்தனைக்கும் மேலாக என் சுய அனுபவத்தின் வாயிலாகவும் நான் அறிந்திருந்தேன். இத்தனை இத்யாதிகளின் மூலமாக அறிந்த ஒரு விசயம் நிச்சயம் உண்மையாக இருக்கவேண்டும் அவ்வாறு இல்லையெனில் உண்மையை ஒத்திருக்க வேண்டும் தானே. சரி! விடுங்கள்! நாம் மறுபடியும் விசயத்திற்கு வருவோம்.

அந்த மூட நம்பிக்கை பற்றிய கதையைச் சொல்வதற்கு என்னை நீங்கள் அனுமதித்தால்தான்,வெற்றுத்தாளை நிரப்பிய அந்த பரிச்சையமில்லாத  நபரின் கருத்தை நீங்கள் அறிந்துகொள்ள இயலும்.உங்கள் அமைதியையே, ஆமோதிப்பாக கொண்டு கதையைத் துவக்குகிறேன்.

அதற்குமுன் நீங்கள் இரண்டு விசயங்களை உணரவேண்டும்.1) யாரும் வேண்டுமென்றே கதை சொல்வதில்லை,வேண்டும்போது சொல்கிறார்கள்.2) இடைச்செருகல் இல்லாமல் வாழ்க்கையுமாகாது, இலக்கியமுமாகாது . எனவே என் இடைச்செருகலை நீங்கள் பொறுத்துதான் ஆகவேண்டும்.

 அயர்ச்சியின் அறிகுறிகள் வெளிப்படையாகவே உங்கள்முகத்தில் தென்படுவதால் நான் கதைக்கு வருகிறேன்.

கதை இப்படி ஆரம்பிக்கும் : அந்த வீட்டில் ஒரு பிராமண தம்பதிகள் வசித்து வருகின்றனர். பிரமாணம் என்ற பதம் உங்களுக்கு நெருடலாக இருந்தால் தம்பதியர் என்று வைத்துக்கொள்ளுமாறு கோரப்படுகிறீர்கள்.அந்த  தம்பதியரில் கணவனுக்கு மட்டும் மூச்சு சம்பந்தமான ஒரு ரகசியப் பயிற்சித்  தெரியும்.

அதாவது நம் மூக்கில் இரண்டு நாசிகள் இருந்தாலும் ஒரு சமயத்தில் இடது நாசியிலோ (அ) வலது நாசியிலோ தான் காற்று வெளிச்செல்லும்.நீங்கள் உடனே மூக்கில் விரல் வைத்துப் பார்ப்பது தெரிகிறது(இதற்கு நீங்கள் உங்கள் ஆட்காடி விரலைப் பயன்படுத்தவேண்டும்). இதைப் பற்றி இன்னும் நிறைய விளக்கம் வேண்டுமானால் ஏதாவது யோகசானம் பற்றிய புத்தகத்தில் துலாவினார்களானால் கிடைக்கும். நேரத்தைக் கணக்கில் கொண்டு இப்போது நாம் கதைக்கு வருவோம்.

பொதுவாக ஒரு காரியமாக வெளியே செல்லுகையில் காற்று வலது நாசியில் வெளிவந்தால் காரியம் சித்தியாகும். அந்த பிராமணர் தேவையானபோது காற்றை வலது நாசியில்  வெளியேற்றும் பயிற்சியைக் கற்றிருந்தார்.

 மிக சிரமப்பட்டு, வேறுயாருக்கும் தான் கற்றுத் தருவதில்லை என்ற நிபந்தனையுடன் தான், தன் குருவிடமிருந்து அவர் அப்பயிற்சியைக் கற்றுக்கொண்டார். எப்படியோ இதனை மற்ற யாருக்கும் தெரியாமல் இவ்வளவு காலம் பயன்படுத்தி வந்தார்.பலன் பெற்று வந்தாரா இல்லையா என்பது பற்றித் தெரியவில்லை.

வழக்கத்தின் படி ஒரு நாள் வெளியே செல்ல வாசல் வருகையில் அவருடன் அவர் மனைவியும் வந்துவிட்டார். இவர் செல்வது  முக்கியமான காரியமாக இருந்திருக்கும் போலும். இப்போது அவர் நாடியில் கைவைத்துப் பார்க்கிறார்,காற்று இடது நாசியில் வருகிறது. எங்கே நீங்கள் சொல்லுங்கள் ஏற்கனவே நான் முன்பே கூறியது படி காரிய சித்திக்கு எந்த நாசியில் காற்று வரவேண்டும்?

ஆஹா..அப்படித்தான்.சரியாகச்சொன்னீர்கள்! வலது நாசியில்தான்!நீங்கள் கவனமுடன் படித்து வருகீறீர்கள் என்று நினைக்கிறேன்.உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் பத்து பைசா பெறாத இந்த விசயத்தை இப்படி வளைத்து வளைத்து எழுதிக்கொண்டு வருகிறேன்.
 பத்து பைசா என்றா சொன்னேன்.மன்னிக்கவும்! உடனே திருத்திக்கொள்ளு -ங்கள்   பத்து பின்னூட்டம் (அ) பத்து ஓட்டுகள் கூட பெறாத விசயம் என்று.சரி! நான் உங்களை மேலும் சோர்வுக்குள்ளாக்க விரும்பவில்லை,கதைக்குத் திரும்புகிறேன்.


எங்கே விட்டேன்.ஆங்..வலது நாசியில் காற்று வந்தால்தான் காரியம் நடக்கும். ஆனால் பிரமாணருக்கோ இடது நாசியில் காற்று வருகிறது. அவருக்குத்தான் மூச்சுப் பயிற்சித் தெரியுமே,காற்றை வலது நாசிக்கு மாற்றிக்கொண்டால் போச்சு.பிரச்சனை அதுவல்ல மனைவி பக்கத்தில் இருப்பது தான்.பயிற்சியின் போது பார்த்துவிட்டால்.சும்மாவே நோண்டி^2 க் கேட்பவள் இதையும் நோண்டி^2க் கடைசியில் நம் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்-துவிட்டால்.. அய்யோ! அப்புறம் அந்த பயிற்சிக்குண்டான பலனிருக்காது...சரி இவளை எப்படி உள்ளே அனுப்புவது..

தாகமாகயிருக்கிறது என்று தண்ணீர் கேட்டால் நிச்சயம் உள்ளே சென்றுதான் ஆகவேண்டும் (அவருக்கேன் இந்த யோசனையை வந்தது என்று நீங்கள் நினைக்கலாம்!!..ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு யோசனை என்று ஒரு உல்டாதான் நேக்குத் தோன்றது) , அதற்குள் பயிற்சியை முடித்து விடலாம்..சரியென்று தன் மனைவியிடம் தண்ணீர் கேட்டார். மனைவிக்கு குழப்பம்.உள்ளேயிருந்து தானே வருகிறார் வரும்போதே தண்ணீர் அருந்தி விட்டுத்தான் வந்தார்!!..பிறகேன் மறுபடியும் தண்ணீர் கேட்கிறார்..திடீரென்று அவளுக்கொரு யோசனை தோன்றி வாசலில் எட்டிப் பார்த்தாள்..அப்போது அவ்வழியே ஒரு கைம்பெண் வந்துகொண்டிருந்தார். கணவன் மேல் அவளுக்கு சந்தேகம் வந்ததா.. இல்லையா.. என்று தெரியவில்லை.அவளும் உள்ளே சென்று ஒரு தம்ளரில் நீர் கொண்டு வந்தாள்.சீக்கிரமாக வந்துவிட்டதால் கணவனால் பயிற்சியை முடிக்க முடியவில்லை.அதனால் ஒரு குவளை நிரம்ப (சொம்பு என்ற வார்த்தையை விவேக் முதல் பதிவர்கள் வரை குறியீடாக மாற்றிவிட்டதால் குவளை என்ற சொல் சொம்பின் பதிலி ) தண்ணீர் கொண்டு வருமாறு பணிக்கிறார்.

மனைவியின் அந்நேரத்து முகக்கோணலையும், முறைப்பையும், முனக லையும்  சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என் முகவரியைத் தேட ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதால் நான் கதையையே தொடர்கிறேன்.

உள்ளே செனற மனைவி  குவளை நிரம்ப நீர் கொண்டு வரவும் அவர் சுவாசத்தை வலது நாசிக்கு மாற்றும் பயிற்சி முடியவும் நேரம் சரியாகயிருந்தது. வந்த தண்ணீரை வேண்டாம் என்று சொன்னால் நடக்கப் போகும் விபரீதங்களைக் கற்பனை செய்து பார்த்தவர் நீரை வாங்கி ஒரு மிடறு.


இது போலவே மனைவி வாசல் வரும்போதெல்லாம் நீர் கேட்டே (ஏற்கனவே வெற்றி பெற்ற யுக்தி) சமாளித்திருக்கிறார்.ஆனால் இவர் நீர் கேட்கும்போதெல்லாம் வாசலை எட்டிப் பார்த்த மனைவிக்கு வேறு^2 விசயங்கள் கண்ணில் தென்பட்டிருக்கிறது.


 வழக்கத்தின் தொடர்ச்சியில் ஒரு முறை பிராமணர் வெளியில் செல்லும் போது மனைவியும் வாசல் வந்திருக்கிறார். இந்த தடவை பிராமணர் சற்று முன்னதாகவே மூச்சைப் பரிசோதித்துவிட்டார். வலது நாசியில்தான் வெளி யேறிக்கொண்டிருந்தது. எனவே மனைவிடயிடம் விடைப் பெற்றுக் கொண்டு வாசல் இறங்க, அதற்குள் மனைவியிடமிருந்து ஒரு அபாயக்குரல் அவரை நிற்கச்சொல்லி. கணவர் நின்று,திகைக்க, விடு^2 வென்று உள்ளே சென்று திரும்பிய மனைவியின் கையில் குவளை தழும்ப நீர்.ஆச்சரியத்துடன் இந்த முறை கணவர் வாசலைப் பார்க்கையில் தலையில் விறகுடன் ஒரு மூதாட்டி அவரை கடந்து சென்றிருக்கிறார்.”சரிதான்” மனதிற்குள் சொல்லி,வாயில் ஒரு நமுட்டுச் சிரிப்பை வைத்து வந்த தண்ணீரை வாங்கி ஒரு மிடறு..

ஆக வெளியில் செல்ல வாசல் இறங்குகையில் எதிரில் கைம்பெண், தலை விறகுச்சுமை, பூனை, எருமை போன்ற இத்யாதிகள் வரும்போது நீர் வாங்கி அருந்திச் செல்லும் வழக்கம் இவ்வாறுதான் நிலைபெற்றது. எனவே அது வெறும் மூட நம்பிக்கையே! அதை விட்டொழிப்போம் அறிவியல் தளத்தில் சிந்தித்து தெளிவு பெறுவோம்! செயலாற்றுவோம்!! என்று அந்தக் கட்டுரை முடிந்திருந்தது..

உங்களைப் போலவே, படித்தவுடன் ம்ஹிம்..இதுக்குத்தான் இந்த அலட்டலா..அட அப்படியா...உஸ் அப்பா...அட ராமா..இது நாலுவரில சொல்லியிருக்கப்படாதோ...கொய்யால இவ்வளவு நேரம் கவனமாப் படிச்சிட்டு வந்த எங்களை கேனயனாக்கிட்ட பாத்தியா- அப்படீன்னு மேலே நூலகத்தில் இந்தக் கட்டுரையைப் படிச்சவரும் பேசாம புலம்பிட்டு போயிருந்தார்னா இந்த பதிவுக்கான அவசியமோ , அதையும் நீங்க கொட்ட படிக்க வேண்டிய அவசியமோ நேர்ந்திருக்காது....

ஆனால் அவர் அன்று எழுதிவைத்துவிட்டுப்போன அந்த கருத்து ( பதிவுப் பாஷையில் பின்னூட்டம் ) பெவிக்கால் போன்று மனசில் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவர் பதிந்திருந்தது இதுதான் :

”அந்த பிராமணர் மேற்க்கொண்ட அந்த சுவாசப் பயிற்சியை எப்படி செய்வது என்று கொஞ்சம் விளக்கிச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்”- சோ & சோ ..அப்ப அனானிமஸ் அவ்வளவு புழக்கத்தில் இல்லை போலும்.



உங்களைப் போலத்தான் நானும்,இளைய பாரதத்தின் உரிமையாளரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசாமல் சின்னதாய்  ஒரு சிரிப்பை மட்டும் பறிமாறிக்கொண்டோம். ஒன்று மட்டும் உறுதிசெய்துகொண்டேன். அந்த மாதிரியான கட்டுரைகளை எழுதுவதில்லை அப்படியே எழுதினாலும் கருத்துச் சொல்லும் பக்கத்தைச் சேர்ப்பதில்லை.....நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்???..

வெள்ளி, 30 ஜூலை, 2010

கொஞ்சம் பெரிய ஒண்ணு

ஈரானுக்கு மஜீத் மஜ்டி- ன்னா இந்தியாவிற்கு பஷீர். இரண்டுபேருடைய கால கட்டங்கள் , வயது, கலாச்சாரம், வெளிப்பாட்டின் ஊடகம் இவைகளில் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் இரண்டுபேரும் இந்த உலகத்தை, வாழ்க்- கையை - அதன் வியப்பை, ஏமாற்றத்தை, பரிசை, திருப்பத்தை, கற்றுத்தரும் பாடத்தை, தன்னைச் சுற்றியுள்ளவர்களை, தன்னுடைய சுழலை என எல்லா- வற்றையும் பார்ப்பது குழந்தைகளின் வழியாகத்தான். குழந்தைகளின் வழி அவர்கள் சித்தரித்துக் காட்டும் உலகிற்கு ஈடு இணை ஏதுமில்லை.


எதனால் என்று தெரியவில்லை.நிகழ்காலம் என்னதான் இன்பமாக இருந்தாலும், கடந்த காலம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாவிடினும் மனமென்னவோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாய்ந்துகொள்வது அந்த நினைவுகளில்தான்.

பஷீரின் ”பால்யகால சகியை”ப் படிக்கையில் ஒரு டைம் மெஷினில் ( Time machine ) ஏறி என்னுடைய பால்யத்தை மறுபடியும் ஒருமுறை சென்று பார்த்து -விட்டு வந்தது போல் இருக்கிறது. இத்தனைக்கும் பாலியம் தொடர்பான பகுதிகள் இரண்டு மூன்று தான் இருக்கும்.இருப்பினும் அந்த நடையின் தொனி தொடும் தூரம் அத்தகையது. மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் ஒரு சிறு துளையி -டுவதைப் போன்றது அவருடைய நடை.போகிற போக்கில் மாட்டின் மூக்கில் மூக்குப் பொடியை தூவி விட்டுச்செல்லும் சிறுவனின் குறும்பைப் போன்ற நடை பஷீருடையது.


சுகறா,மஜீத்..பால்யகாலம் தொட்டே மிக அனுக்கமான நண்பர்கள். ஆனால் இதில் ஆர்ச்சயம் என்னவென்றால் அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த வைரீகளாக இருந்தார்களென்பதுதான்.

குழந்தைகளின் மனவோட்டத்தை, குறும்புத்தனங்களை,உடல்மொழியை மற்றும் முக்கியமாக அவர்களுடைய பரிபாஷையை அழகாகத் தந்தவர்களில் என்னளவில் என்னால் சுட்ட இயலுவது இருவரைத்தான்.ஒருவர் பஷீர், இன்னொருவர் சுரா.

பொதுவாக பாலியங்களில் நாம் பயன்படுத்தும் சில சொல்லாடல்களையும் அது சுட்டும் பொருள்களையும் நினைத்துப் பார்த்தால் மிக வேடிக்கையாக இருக்கும். சில சமயம் நம்முடைய அந்த பாலியச் சொற்களுக்கு அர்த்தமே இருக்காது.

// மஜீது வெற்றிக்களிப்புடன் அர்த்தமில்லாத ஒரு சத்தம் கொடுத்தான்,ஜீக் ஜிகு! ஜீக் ஜிகு! // பஷீரின் பெரும்பாலான கதைகளில் இந்த மாதிரி குழந்தைகளின் வெற்றிக்களிப்பு சில அர்த்தமில்லாத சொற்களைத் தான் கொண்டிருக்கும்.

// ஆகாயமும் பூமியும் அறியும்படியாக அவன் கம்பீரமாக அறிவித்தான் “எனக்கு மரம் ஏறத்தெரியுமே’’//

இந்த வரிகளுக்கு முன் இருவருக்குமிடையே ஒரு சிறு போட்டி வரும். சுகறாவை ஏதாவது ஒருவகையில் கூசிச் சிறுக்க வைக்க வேண்டும் என மஜிது, தன் வீட்டைப் பற்றி சொல்லுகிறான்,தன் தந்தையின் பணியைப் பற்றி சொல்லுகிறான்.ஆனால் சுகறாவோ எல்லாவற்றுக்கும் பளிப்பு காட்டி விடுகிறாள். இந்த இடம் கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற கதையை நினைவுபடுத்தியது.

பள்ளியில் ஒரு முறை மஜீதுக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி வருகிறது.1+1=?. மிகச்சிரமப்பட்டு ஒரு விடையை யோசிக்கிறான், கொஞ்சம் பெரிய ஒண்ணு.

இரண்டு நதிகள் ஒன்றாகச் சேர்ந்து, பெரிய நதியாக சேரும்போது இரண்டு தனித் தனி ஒன்றுகள் சேர்ந்து பெரிய ஒன்றாகத் தான் வரவேண்டுமல்லவா...


ஆனால் பஷீரின் ஆசிரியர் என்ன அத்தனை சொற்பமானவரா..மஜீதுக்கு நாலைந்து அடிகள் கொடுத்து எல்லாவற்றையும் சேர்த்து ஒரே பெரிய அடியாக நினைத்துக்கொள்ளச் சொல்லிவிடுகிறார். வாழ்க்கையும் இப்படித்தானே!! ஒரு பெரிய கோட்டை பக்கத்தில் வரைந்து ஏற்கனவேயிருக்கும் கோட்டைச் சிரிதாக செய்வது போல் , ஏதாவது ஒரு பெரிய சோகத்தை கொண்டுதானே இன்னொரு சோகத்தை சிறிதாக்கிக் கொள்ளமுடிகிறது.

பொதுவாக கலைஞர்கள் மஜிதாகயிருக்கும்போது..யதார்த்த வாழ்க்கை அவனுடைய ஆசிரியரைப் போல இருக்கிறது...

சுகறாவைக் கரைக்க மஜீது சொல்லும் அந்த வாக்கியம் எவ்வளவு அழகாக எந்த பண்டிதத்தனமும்,மேதாவித்தனமும் இல்லாமல் வெறும் குழந்தையின் குரலாகவே ஒலிக்கிறது.

//நான் ஒண்ணுமே செய்யாம இருந்தாலும்,வாப்பாவும்-உம்மாவும் சும்மா என்னை பறண்டவும்,நுள்ளவும் செய்தாங்க!சும்மா அவுகளுக்கு இது ஒரு சுகம்.இனி நான் மரிச்சுப் போனா அவுங்கா சொல்லுவாங்களா இருக்கும்.அந்த பாவப்பட்ட மஜீது இருந்தான்னா ஒரு நுள்ளாவது குடுக்கலாமென்று//

பாட்டி வீட்டுக்கென நான் கேரளம் பயனிக்கும்போதெல்லாம் எங்கள் வீட்டருகே ஒரு ஆறு ஒடும். , சிறு ஒடைப் போலத் தொடங்கி, சற்று பெரிதாகி,மறுபடியும் சிறிதாகி,மறுபடியும் பெரிதாகி கொஞ்ச தூரத்தில் ஒடையாகி..ஒரிடத்தில் தேங்கி பெரிய ஆறாக மாற்றம் பெற்று..சிற்ச் சில இடங்களில் பரந்த மணலில் நுண்ணமான ஒரு வெள்ளிக்கம்பியெனவோ, வைரக்கம்பியெனவோ மாறி இறுதியில் ஏதாவது ஒரிடத்தில் ஒரு பெரிய நீர்பெருக்குடன் கலக்கும்.

வாழ்க்கையும் , பால்ய கால சகியும் இப்படியே.

விக்ரமாதித்யன் கவிதையொன்று வரும்....

பெண்கள் என் பிரதான பலிபீடம்
நான் ஆடாய் அரிவாளாய்

பலிபீடமாய் மாறி மாறி
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

மஜீதும் கிட்டத்தட்ட அவ்வாறே..கைகூடாவிட்டாலும் கைவிட முடியாத நிலையில் பால்யால காதலின்,ப்ரியத்தின் செறிவு கொஞ்சமும் குறையாத சுகறா..அவ்வளவு வறுமையிலும் தன் மகனின் செழிப்பிற்கு வாடும், கிடைப்- பதில் முக்கால் வாசியை மகனுக்கென பங்கு வைக்கும் ,வறுமையைக் காட்டிலும் மகனின் முக வாட்டத்திற்கு வருந்தும் தாய், அண்ணனை எவ்வகை யிலாவது மகிழ்ச்சிப்படுத்த அவன் அமைக்கும் தோட்டத்திற்கு தன் கவலைகள், ஏக்கங்களை மறைத்து நீருற்றும் சகோதரிகள் என...அவனும் மாறி,மாறி வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

ஆனால் பஷீருடைய இலக்கியத்தில் வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கும்.எந்த அதி உன்னதங்களும் பஷீருடைய மாந்தர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு விதி வழியாகத்தான்.அதனால் அவருடைய கதையில் சுபங்களையெல்லாம் எதிர் பார்க்க இயலாது. எனவே வெளிநாடும் செல்லும் ஒரு அனுக்கமான நண்பனின் பிரிவு, திடீரென்று வரும் நண்பனின் மரணம் குறித்த தகவல், காதலித்தவள் வேறொருவனை கரம் பிடிக்கும்,பிடித்த நிகழ்வு , நள்ளிரவு மழைச் சப்தம்-காலையில் அதன் தடயம் என இவற்றில் ஏதாவதொரு உணர்வைத்தான் பஷீரின் கதைகளின் முடிவில் என்னால் உணர முடிகிறது.

சுகறாவுக்குப் பிறகும் தாய் மற்றும் சகோதரிக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

சற்றே பின்னகர்ந்து மஜீது மட்டும் தன்னுடைய தந்தையை சற்று அனுசரித்து இருந்தானெனில்......


காதல் மோதலில்தான் ஆரம்பிக்கும் என்று எந்த முட்டாள் சொன்னானோ எனக்கு தெரிந்த பெரும்பாலான நல்ல நட்புகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி நட்புகள் எல்லாம் மோதலில்தான் ஆரம்பித்தது. அதில் பெண் தோழிகளும் அடக்கம். யாரை நான் கல்லூரிப் பிரச்சனையின் போது முதலில் அடித்தேனோ அவனும் நானும் தான் கட்டிபிடித்து அழுதோம் கல்லூரி இறுதி வருடத்தின் கடைசி தினத்தில்...

எந்த பெண்ணை நான் காயப்படுத்தினேனோ அவளிடமிருந்துதான் முதல் ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம் என் கைக்கு வந்தது.

மன்னிக்கவும்...

தற்போது என்னிடம் கவிதை

எதுவும் இருப்பில் இல்லாததால்

நீங்களாகவே ஒன்றை கிறுக்கிகொள்ளவும் என் சார்பாக...

என்று எழுதியதைப் படித்துச் சிரித்த அந்த பரிச்சையமில்லாத தோழி இப்போது எங்கே இருக்கிறாளோ..

Be a tower,stand for ever என்று எழுதித் தந்தவள் என்ன செய்துகொண்டிருக்- கிறாளோ..

”இரு இரு உன்னை டீச்சர்கிட்ட சொல்லி என்ன செய்யறேன்னு பாரு” என்று உடைந்த வளையல்களோடு சென்றவள் புகார் செய்ததாக ஒரு முறைகூட அந்த டீச்சர் என்னை அழைத்ததேயில்லை...


வைக்கம் முகம்மது பஷீர் :

நான் இவரைப் பற்றி படித்தது மற்றும் கேள்விப்பட்டது வரையில் இவரை சில வரிகளில் சித்திரமாக்கிவிடலாம்.

தாழ்வரம் சற்றே சரிந்த வீடு..
முற்றத்தில் மங்குஷ்தான் மரம்.
அதன் நிழலில் ஒரு சாய்வு நாற்காலி..
நாற்காலியில் சாய்ந்த ஒர் உருவம்தான் பஷீர்...

ஒரு மழை நாள் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வீட்டின்பின்புறம் சென்றிருக்கிறார் பஷீர்..அப்போது வானில் மின்னல் வெட்டியதில் யாரோ தன்னை படம் பிடிக்கிறார்கள் என்று போஸ் கொடுத்தார் என்று இவரைப் பற்றி ஒரு பகடி மதராசப் பட்டினம் படம் பார்க்கையில் என் நினைவிற்கு வந்தது.இது உண்மையா (அ) இட்டுக்கட்டப்பட்ட பகடியா என்று தெரியவில்லை.


1908 ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி தலையோலப் பரம்பில் பிறந்தார். 10 ம் வகுப்பு ப்டிக்கும்போது வீட்டை விட்டு ஓடியவர்.இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப்போராட்டத்தின் ஒரு பகுதியான உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப்போராட்ட வீரர் எனும் நிலையில் மதராஸ்,கோழிக்கோடு கோட்டயம், கொல்லம் மற்றும் திருவனந்தபுர சிறைகளில் தண்டனைகளை அனுபவித்தார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச்செயல்பட்டார்.அமைப்பின் கொள்கை இதழாக உஜ்ஜீவனம் எனும் வாரப் பத்திரிக்கையும் துவங்கினார்.

பத்தாண்டு காலம் பாரதமெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்கா,அரேபியா போன்ற நாடுகளிலும் சுற்றித்திரிந்தார். இக்காலகட்டங்களில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று கூறலாம்.இந்த காலகட்டத்தில் சில ஆண்டுகள் இமயமலைச் சரிவுகளிலும்,கங்கை நதிக்கரையிலும் இந்துத்துறவியாகவும், இஸ்லாமிய சூபியாகவும் வாழ்ந்தார்.

மனைவி : பாபி பஷீர். மக்கள் : ஷாஹீனா, அனீஸ் பஷீர்.
1994 ஜீலை 5ம் தேதி காலமானார்.

”அம்மே உம்ம காந்தியை ஞான் தொட்டு ” என்று ஒடி வந்த பஷீரை “நான் பஷீரைத் தொட்டேன் தெரியுமா” என்று சுராவிடம் பகிர்ந்ததாக ஜெயமோகன் ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னை மிக கவர்ந்த எழுத்தாளர்களிர் பஷீர் மிகமுக்கியமானவர் என்று இவரைப் பற்றி ”புன்னகைகளின் பெருவெளி” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சீரிய வாசிப்பு பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டிய எழுத்தாளர் பஷீர். இவருடைய மதிலுகள் என்ற நாவல் மம்முட்டி நடித்து திரைப்படமாகவும் வந்துள்ளது.


மேலே உள்ள அவரின் வாழ்க்கை குறிப்பை கண்ணுறும்போதுதான் தெரிகிறது..
அவரும் புரட்சியாளாராக, எவற்றிலும் நிறைவுகொள்ளாதவராக எவ்வளவு தீவிரமாக திரிந்தாரோ அதை விட தீவிரமாக அமைதியாக அமர்ந்து மிகப் பெரும் படைப்புகளைத் தந்துள்ளார். அன்பில் நிறைந்தார் அதுவே பின் படைப்பாகியது.அதுவே அவரை இவ்வளவு காலம் கழிந்த பின்னும் நம்மைத் தொடுகிறது.

குளச்சல் மு. யூசுப்

இந்தக் கதையை மேற்கூறிய படி நான் உள்வாங்குவதற்கு முக்கிய காரணம் இவர்தான்,இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர். பொதுவாக மற்ற துறை -களின் மொழிபெயர்ப்பிற்கும்,இலக்கிய மொழிபெயர்ப்பிற்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. பின்னது சற்று சிரமமானது.சில சமயங்களில் அபாய -கரமானதும் கூட...பஷீரைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் புதிதாக வாசிக்கும் வாசகர்கள் பஷீரை- பஷீராகவே சென்றடைய வேண்டும்.இந்தக் கதையின் எந்த ஒரிடத்திலும் நான் பஷீரை தொலைக்கவேயில்லை. எனவே -தான் நான் இந்தக் கதையில் மீறப்பட்டிருக்கும் சமூகத்தின் நியதியையோ (அ) ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளையோ பற்றி பேசவில்லை.

காரணம் மழைக் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கும் ஆறு அதன் கரையை அதுவாகவே விரிவுபடுத்திக்கொள்கிறது. மனிதனின் முயற்சிகளனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு அதனிடம் சரணடைவதாகவே உள்ளது. வாழ்க்கை, சமூகம் அதைத்தொடர்ந்து வரும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.இதை பஷீர் அறியாதவரா என்ன?...


மு. யூசுப் - மொழிபெயர்ப்பு என்ற அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மேல் அனாசயமாக நடந்து கடந்திருக்கிறார்.

இதே புத்தகத்தைப் பற்றி அருமை நண்பர் திரு.முரளியின் பகிர்வு இங்கே..பால்யகால சகி

சனி, 24 ஜூலை, 2010

பொன்மாலைப் பொழுது ..

வெங்கட் சுவாமிநாதன் :

மகுடேசுவரனின் குரல் மிருதுவானது.பாசாங்குகள் அற்றது.பல ரூபங்களில் பல தொனிகளில் வெளிப்படுவது .

கல்யாண்ஜி :

இவருடைய கவிதைக்குரல் யாருடைய குரலையும் ஞாபகப்படுத்தாத எப்போதாவது கேட்கிற சீரியக்குரல்.

ஞானக்கூத்தன் :

இரத்தத்துடிப்புள்ளவை இவருடைய கவிதைகள்.




மேற்க்கண்ட கூற்றுகளுக்கு முற்றிலும் தகுதியான திரு.மகுடேசுவரன் அவர்கள், தொன்னூறுகளில் கனையாழியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தொடர்ந்து இன்றளவும் இயங்கிவருகிறார். ஏனெனில் கல்யாணத்திற்கு பிறகு கானாமல் போன படைப்பாளிகள் ஏராளமானோர் என்று திரு.சுந்தரராமசாமி ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு.மகுடேசுவரன் என் பக்கத்து ஊர்க்காரர்(திருப்பூர்). இவருடைய “யாரோ ஒருத்தியின் நடனம்” தான் ( 2002 ) நான் முதன் முதலில் படித்தது. (இதற்கு முன்பே “ பூக்கள் பற்றிய தகவல்கள்” “அண்மை “ என்ற இரு கவிதை தொகுதிகளும் வெளிவந்து அதன் மூலம் தமிழ் இலக்கிய சூழலில் பரவலாக அறிப்பட்டிருந்தார்) அப்போதிருந்தே இவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து, அதற்கு முயற்சித்து, ஒரிருமுறை நேரிலும் பார்த்துவிட்டேன். இது நடந்தது 2004-2005 கால கட்டங்களில்.

அப்போதெல்லாம் இலக்கிய ஆளுமைகளை, பிரபலங்களைச் சந்திப்பதில் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவன். எனவே இவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவேயில்லை.

இது எனக்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறிக்கொள்கிறேன். தமிழின் சமீபகாலத்தின் முக்கியக் கவிஞர், திரு.சுஜாதா அவர்களின் செல்லக்கவிஞர் இவருடன் நல்ல நட்பு இருந்திருந்தால் கவிதைப் பற்றிய என்னுடைய பார்வைகளில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனால் அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் திருப்பூர் வலைப்பதிவர் (சேர்தளம்) குழுமம் வரும் ஞாயிறு அன்று (25/7/10) இவருடைய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. http://tiruppur-bloggers.blogspot.com/2010/07/blog-post.html.

மேற்க்கண்ட சந்திப்பில் திருப்பூர் குழுமத்தின் ( சேர்தளம் ) உறுப்பினன் என்ற முறையில் எனக்கும் கிடைக்கும் இந்த வாயப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலிருக்கிறது.
இதைப்பற்றி திரு.பரிசல் அவர்களின் பதிவு : கவிஞருடன் ஒரு சந்திப்பு!

இவரைப் பற்றி எனக்குத் தெரிந்த சில குறிப்புகள் இங்கே :

> இவர் கவிதை மட்டுமல்ல இவரும் , இவருடைய குரலும் மிருதுவானதுதான் என்று திரு.சுப்ரபாரதி மணியன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ”கனவு” கூட்டத்தில் இவர் ஒருமுறை உரையாற்றியது போதுதான் தெரிந்தது.

> மேற்ச்சொன்ன கூற்றில் இவர் உண்மையிலேயே மிருதுவானவர்தானா!!! என்று எனக்கு ஐயம் ஏற்படுத்திய கூட்டம் : இவருடைய ”காமக்கடும் புனல்” புத்தக வெளியீட்டின் போது இருந்த இவருடைய தோற்றம்.ஏனெனில் அதற்கு முன்பு நான் அவரை சந்தித்தபோது அவருக்கு அவ்வளவு பெரிய மீசையில்லை.

இந்தக்கூட்டத்தின் இன்னொரு மறக்கமுடியாத சம்பவம் என்னுடைய இன்றைய ஆதர்சங்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான திரு.யுவன் சந்திரசேகரைச் சந்தித்தது.இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு எழுத திட்டம்.

அ.முத்துலிங்கம் ஒரு முறை பிரபலங்களுக்கு பிடித்த புத்தகம்,அது ஏன் என்ற முறையில் தொகுத்து வெளியிட்ட புத்தகம் “கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.” இது திரு.ஜெயமோகன் அவர்களால் ”மணல் கடிகை” என்ற புத்தகத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையின் தலைப்பாகும். இந்த ”மணல் கடிகை” எழுதியவர் திரு.எம்.கோபால கிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.ஆனால் இந்த புத்தக வெளியீடு நடந்தது மேற்ச்சொன்னக் ”காம கடும்புனல்” புத்தக வெளியீட்டின் போதுதான்.

> இவருடைய “யாரோ ஒருத்தியின் நடனம் “ என்ற தொகுதியில் என்னைக் கவர்ந்த சில கவிதைகள் :



கடைசிவரைத் தொடர்வேன்
என்பது ஐயமே
வளைவுகளிலும் சந்துகளிலும்
புகுந்துசெல்லும் உன்னை
*

இந்த மழையில்
குளிர குளிர நனைகிறேன்
வராமலே போகலாம்
இன்னொரு மழை
*

பொருட்படுத்தாதீர்கள்
தனது அறைச் சாளரத்தை
அகலத் திறந்து வைக்காதவன்
கூறும் அபிப்ராயங்களை
*
அடிவானம் தெரியாத சந்தில்
ஒரு பூச்செடியும்
இல்லாத வீட்டில்
ஒருவன் வசிக்க நேர்ந்தால்
அதைச் சாபம் என்க

*

முல்லையின் அமில மணமும்
மூத்திரத்தின் கார நெடியும்
கலந்த வாசனை
புணர்ச்சியின் வாசனை
அது நிறத்தால் நெருப்பு
குணத்தால் தண்ணீர்.
*

புணர்ந்து வெளியேறியவர்கள்
தாம் புத்தரும் சித்தரும்
*

புணர்ச்சிக்குப் பின்பு
சுருங்குகிறது கனிவு
தடிக்கிறது உத்தரவு

*

சமூக விதி இதுதான்
புணர்ந்து விட்டால்
மணந்துகொள் அல்லது
மணந்து கொண்டு
புணர்ந்துகொள்

*

நல்லறுவை செய்த
நனிமாது நண்பா கேள்
கள்ளக் கலவிக்குத் தோது

*

கள்ளப்புணர்ச்சி ஒன்று
ஊரறிந்துவிட்டது
சந்திப்பின் மறைவிடங்களில்
தேம்பி அழுகிறது
அவர்கள் விட்டுச் சென்ற
அன்பு

*

உறங்கும் குழந்தை
சிணுங்கி எழுந்து
முடித்துவைக்கட்டும்
கருத்தரிப்பில் முடியாத
மலட்டுத் தம்பதியரின்
புணர்ச்சி நாடகத்தை

*

வியாழன், 22 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

நாயொன்றின் மீது
பிரியம்...வீட்டினுள் என்பதால்
உயர்சாதியே தேர்வாகிறது..
முதலில் உணவு, பிறகு
உங்களின் மொழியென பழக்குகிறீர்கள்....
நாயும்  தவழ்கிறது நன்றாகத் தரையில்
கூட நாவில்.....
நாயும் பெரிசாச்சு..
வீட்டுக்கு காவலாச்சு ...
தெருவை மிரட்டலாச்சு...
கதவை நீக்கும் போதே குரைக்க,
நுழைந்த பின் முகர்ந்து பார்க்க,
வால் குழைத்து சினுங்க,
ஒலிக்குறிப்பிற்கேற்ப அமர,ஆர்பரிக்க
தோள்களில் முன்னங்கால்களை வைக்க
என நாயும் பழக்கிக்கொண்டது

தட்டுச்சோற்றுக்கும்,வயிற்றுப்பாட்டுக்கும்...

அவ்வப்போது கண்ணில் இடறியதால்
நீக்கியாகிவிட்டது வாலையும்...
இப்பொழுதும் இறக்கை கட்டுகிறது உங்கள்
பேச்சு நாய்கள் மேலான உங்கள் பிரியம் சுட்டி..

நின்று  முகர்ந்து,வெரித்து
”நாய்கள் ஜாக்கிரதையை”
ஈரமாக்கிவிட்டுப்போகும்
இன்னும் சுயம் திரியாத
நாயொன்று...

வியாழன், 15 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து

என் வீட்டருகே இரண்டு மரம்.
ஒன்று நெட்டைப் பாவாடைப் போட்ட
குட்டைபெண்னென...
எல்லா நிழலையும் இழுத்து இழுத்து
தன் காலடியிலேயே நிறுத்தி வைத்திருக்கும்.


மற்றது குட்டைப் பாவாடைப்போட்ட நெட்டைப்
பெண்னென..
கைக்குட்டையளவு நிழலில் ஒற்றைக் காலையூன்றி
எத்தி் நின்றவாறிருக்கும்...

சனி, 10 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து..
















கனவுகள் கலைந்து போகும்...

பளிச்சென மின்னலாய் வெட்டும்

மறுப்பின் நொடி..

இடிக்கத் தொடங்கும

இல்லாமல் போன இந்நிமிடங்கள்..

சட்டென தொடங்கும் ஞாபகமழை

நனையத்தொடங்கும்

மனம்..

ஈரத்தில் நனைந்த நிமிடங்கள்

வெடவெடக்கும் கடிகாரத்தில்..

நமுத்துப்போய்க் கிடக்கும்

ஆற்றாமைகள்..

தவறிய விரல் மீண்டு வாய்வருவதற்குள்

பிரளயத்தை புரட்டும் குழந்தையென

எல்லாமும் நிகழ்த்திவிட்டு்

மெல்ல திரை விலகும் நேரம்

கனுக்காலிலிருந்து

ஊமைக் கண் சிமிட்டும்...

உன்னை மட்டுமே ஞாபகமூட்டும்

பக்கத்துவீட்டுப் பெண்ணின்

கொலுசொலி..

சனி, 3 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

விரிவின் எல்லைக்கே

சாத்தியப்படும் கவிதையின்

திறப்பு போல

தினமும் உன் இதழ்கள்

மொட்டவிழ்க்கும்

ஒரு புன்னகையை

எனக்கென்று



*********************************


வெள்ளியில் மினுங்கும் மேகம்..

நீலத்தில் நிறையும் வானம்...

அந்தியில் கவிழும் ஏகாந்தம் (அ) துக்கம்...

இரகசியத்தின் இரைச்சலில் துவங்கும் இரவு..

மின்மினிகளாய் இரைந்து கிடக்கும் பூமியின் பொய்கள்...

வயிற்றுப்பாட்டுக்காரனின் வட்டிலாய் நிலா...

சூரியப் பூவிதழ்கள் அவிழும் காலை....

ஒற்றைக் கண்ணில் எல்லாமும் படம் பிடித்து மூலையில்

முடங்கும்...

பிரதிகள் தாவும் நாற்புறமும் இறக்கைகள் இன்றி

இரண்டு கண்களில் வியந்து,

முகரும் பாதைவழி விரையும் நாயாய்

அன்றையத் தேவைகளை இருத்தி நகரத்துவங்கும் வாழ்வு..

நேர்கண்டு இரசிக்க இருக்கிறது மூப்பென

அவ்வப்போது எழும் ஆசைகளையும்

கரையொதுக்கி போகும் புத்திஜீவிதம்...

*************

வெள்ளி, 2 ஜூலை, 2010

இழப்பின் வலி




A place you leave is a place that lives forever.

மேல இருக்கறது இந்தப் படத்தோட ஒரிஜனல் கேப்சன்.ஆனா நான் இந்தப் படத்திறகு வேறொரு கேப்சன் ரொம்பப் பொருத்தமா இருக்குனு நினைக்கிறேன்.

”காதல் என்றால் உயிரையும் தருவேன்.சுதந்திரமென்றால் நான் காதலையே தருவேன்”. சொன்னவருடைய பேரு சட்டுனு ஞாபகத்திறகு வரலை.இந்த கேப்சனுக்கு ரொம்பவே பொருத்தமான படம் தான் “ THE LOST CITY”.

கதை நிகழும் இடம் கீயூபா.புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் பிடல்காஸ்டோரோ அதைத் தக்க வைப்பதற்கான சில கண்டிப்பான நடவடிக்களை மேற்கொள்ளும்போது,அதனால் சிதைவிற்குள்ளாகும் ஒரு அழகான குடும்பத்தை பற்றிய கதையிது.

பொதுவாக நம் உலகத்தில், எல்லாருக்கும் நல்லவனாகவோ,எல்லோருக்கும் நன்மைத் தரக்கூடிய செயல்னோ எவரையும்,எதையும் சொல்ல முடியாது. அதனால்தான் மாபெரும் இலக்கியங்கள, நிகழ்வுகள் அதனூடான மனிதர்களின் அலைகழிவுகள் என அவற்றைப் பற்றி மட்டுமே பேசுகிறதே ஒழிய தீர்வுகளைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாருக்குமான ஒன்றை எவராலும் சொல்ல முடியாது என்பதே உண்மையாகப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் நன்மைக்காக ஒருவனை பலி கொடுக்கலாம்,ஒரு ஊரின் நன்மைக்காக ஒரு குடும்பத்தை பலிகொடுக்கலாம்,ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரையே பலி கொடுக்கலாம் அப்படீனு சொன்னார் காந்தி.

ஆனால் தனியொருமனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் அப்படிங்கிறாரு பாரதியார்.

எதனால் இந்த வித்தியாசம்.என் அபிப்ராயப்படி,முன்னவர் ஆண்மீகத்தின் பாதையில் இருந்தவர்.பின்னவர் இலக்கியத்தின் பாதையில் இருந்தவர்.


பொதுவாக கலை எப்போதுமே பெரிதும் பேசுவது மனிதர்களையும், மனிதத்தையும்,இதற்கிடையில் ஊடாடும் அவர்களின் உணர்வுகளையுமே...

மனிதர்களையும்,அவர்களுடைய உண்ர்வுகளையும் நிராகரிக்கிற எதுவுமே கலையாகாது.

கலில் கிப்ரான் ஒருமுறை தன் காதலியிடம் : கடவுள் திடீரென்று உன் முன்னால் வந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாமே மறந்து போகப் போகுது..கடைசியா 5 வார்த்தைகள் மட்டும் உன்னோட ஞாபகத்தில் இருக்கும்,உனக்கு விருப்பமான வார்த்தைகளைக்கூறு அப்படீன்னு சொன்னா நீ சொல்லும் 5 வார்த்தைகள் என்ன? என்கிறார்.

கலில் கிஃப்ரானின் காதலி : வானம்,காற்று,பூமி..ம்ம் மீதி..அப்படீன்னு யோசிக்கிறப்ப கிப்ரான் டக்னு சொல்றார் நீ மற்றும் நான். ஏன்னா இந்த இரண்டும் இல்லைன்னா மேலே நீ சொன்ன மூன்று வார்த்தைகளுக்கும் அர்த்தமில்லை.

எவ்வளவு உயர்வானதெனினும்,எவ்வளவு பிரம்மாண்டமெனினும் அதை அதை அவ்வாறு உணர ஒரு உயிர் இருக்கும்போது மட்டுமே அது அர்த்தம் பெறுகிறது.

அதுபோலத்தான் நம்மில் ஆன்மா என்ற ஒன்றை இழந்துவிடும்பொழுதில் நம்மைச் சுற்றியுள்ளவற்றுக்கும் நமக்கும் அர்ததமில்லாமல் ஆகிறது.

அப்படிப்பட்ட அந்த ஆன்மாவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்தப் படத்தின் நாயகன் என்னன்னவற்றையெல்லாம் இழக்கிறான்.பெற்றோர்,வீடு,உறவு,தொழில்,நண்பர்கள்,வளர்ந்த இடம் என..தான் நேசித்த பழைமையுடனும்,உயிர்துடிப்பான இசையுடனும் திகழந்த நகரமில்லை,இப்போது தான் வாழ்ந்துகொண்டிருப்பது. தன்னுடைய தனித்துவத்தை இழந்து வரும் அந்த நகரில் நசுங்கிடப்பதைவிட தன்னுள் எல்லா அழகுடன் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையும்,அதனோடு ஒன்றியிருக்கும் தன் ஆன்மாவையும் உயிரோட்டத்துடன் வைத்திருப்பதற்காக அந்த நகரைவிட்டு வெளியேறுவதே சிறந்தது என்ற முடிவிற்கு வந்து அதனை செயல்படுத்துவதே கதைச்சுருக்கும்.

ஆண்டி கார்சியா( Andy García ): இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் நாயகன்.அவருடைய பதினாறு ஆண்டுகளின் கனவாம் இந்தப்படம்.





இனி படத்தில் என்னைக் கவர்ந்த சிலக் காட்சிகள் :

> ஹீரோவோட கிளப்பை அதிகாரிகள் மூட வருவார்கள்.அந்த சமயத்தில் ஹீரோவுக்கும்,அதிகாரிகளுக்கும் நிகழும் உரையாடலின் போது கிளப்பை மூடுவதற்கான காரணங்களில் அவர்கள் கையில் வைத்திருக்கும் சாக்ஸஸ் போனும் ஒரு காரணமாகிறது.(Castro, has declared the saxophone to be an imperialist instrument and forbids its use)

> கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஹீரோ அப்பா-அம்மாவிடம் விடைபெறும் காட்சி.தந்தைக்கும் மகனுக்குமான இடையிலான அந்த காட்சி அவ்வளவு நேர்த்தி.

> நீங்க ரொம்ப வருசமா ஆசை ஆசையா வளர்த்த அல்லது சொந்த மகன்/மகளுக்கு மேல நினைக்கிற ஒன்னை திடீர்னு ஒரு நொடியில் ஒருத்தர் உங்க முன்னாடி வந்து இனிமே இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமில்லே..இனிமே அது எனக்குமட்டுமே சொந்தம்னு சொன்னா உங்களுக்கு எப்படியிருக்கும்.அப்படித்தான் கரும்புத்தோட்டத்தில் தன் மாமாவிடம் ஹீரோவோட சகோதரன் சொல்ற காட்சி..அதுக்கப்பறம் நேரும் மரணம்..அதனால் உண்டாகும் குற்ற உணர்வு...

> அமெரிக்காவில் ஒட்டல் தொடங்கறதப் பத்தி தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வேலையைப் பற்றி அவர் சொல்ற காட்சி...

> சில வருடங்களுக்குப் பிறகு அதே ஓட்டலில் தரையை சுத்தம் செய்திகிட்டிருக்கிறப்போ, அவருடைய காதலி அவரைப் பார்க்க வர்ர அந்த காட்சி..அந்த சமயத்தில் அவங்களுக்குள்ளாற ஏற்படற அந்த உணர்வுகள்.. காதலியாக மட்டும் அறிமுகமானவள் இன்று அரசியலில் முக்கியபுள்ளி, நெடு நாள் இடை வெளி வேற.. அவகிட்ட எப்படி பழையபடி அதே அன்னியோன்னியமா நெருங்கிறது..மறுபடியும் காதலியின் அழைப்பு..மறுபடியும் இவரோட மறுப்பு..எந்த ஒரு பிரச்சனையும் இல்லை..இப்ப நினைச்சாக்கூட தன் காதலியோட புறப்பட்டுப் போய் அவளின் மூலமா ஒரு அதிகாரத்துடன் கூடிய ஆடம்பரமான வாழ்க்கையை வாழமுடியும்,எந்த தடையுமில்லை.ஆனாலும் காதலியைக் காட்டிலும் தான் தானாகவே இருக்கறதுதான் முக்கியம் அப்படீன்னு தன் காதலியின் அழைப்பை மறுபடி ஒருமுறை நிராகரிக்கிற அந்தக் காட்சி...ரொம்ப அபூர்வமான மனிதர்களால் மட்டும்தான் இது முடியும்.

இந்தக் காட்சியைப் பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் இந்தக்கருத்து எனக்கு மிக ப் பிடித்தால அதை அப்படியே இங்கே தருகிறேன-He(ஹீரோ) now realizes that Aurora(ஹீரோயின் பேரு) is Cuba: beautiful, alluring, but ultimately unattainable

> கடைசியா கையில் ஒரு ரோஜாவை வச்சுட்டு அப்படியே ஒவ்வொரு படியா ஹீரோ மேல ஏறரப்ப அந்த காட்சியின் பின்புலத்தில் ஒரு பாட்டுவரும்,அந்த பாட்டு..அதுக்கு அவர் கொடுக்கற அந்தச் சின்ன பேஸ் எக்பிரஸ்னோட கூடிய அந்த மூவ்மெண்ட்... அந்த காட்சிக்காவே படத்தை எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்...


>தனக்குப்பிரியமான அப்பவோட கைக்கடிகாரத்தைக்கூட எடுத்துப்போக அனுமதிக்காத கீயூபாவின் அதிகாரிகளை கோபமாகவும்,வாட்சை ஏக்கமாகவும் பார்க்கிற காட்சி..

மொத்தத்தில் என்னை மிகவும் கவர்ந்த,இம்சித்த மற்றும் சிலவற்றை யோசிக்க வைத்த படங்களில் இதுவுமொன்று.

வியாழன், 24 ஜூன், 2010

Simple but complicated...

ஒரு ஜென் துறவி தினமும் காலையில் எழுந்தவுடன் அழ ஆரம்பித்துவிடுகிறார்.அதுவும் நீண்ட நேரத்திற்கு.பல பேர் எல்லா விதமாகவும் கேட்டுப் பார்த்தும் அவரிடமிருந்து அழுகைக்கான காரணத்தை அறிய முடியவில்லை.

ஒரு நாள் மிக நீண்ட நேரம் அழுதுகொண்டிருக்கிறார்.இந்த முறை அங்கிருந்தவர்கள் அவரை விடுவதாயில்லை. மிகவும் வற்புறுத்தி கேட்டபின் ஒருவாறு அந்தத் துறவி வாய் திறக்கிறார்.இல்லை என் கனவில் நான் தினமும் ஒரு பட்டாம்பூச்சியாக சிறகடித்து எங்கெங்கோ பறக்கிறேன் என்கிறார்.

எல்லோருக்கும் ஆச்சரியம் இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது? கனவுதானே! அதிலும் அழகான கனவு.

அதற்குத் துறவி முதலில் எது கனவு, நான் மனிதனாக இருந்து பட்டாம் பூச்சியாக மாறுகிறேனே அதுவா? அல்லது பட்டாம் பூச்சியாக இருந்து மனிதனாக வாழ்வதாக உணர்கிறேனே இது கனவா?


ஜென் ஒரு அற்புதமான,எளிமையான ஆண்மீக வழி. இதற்கு இப்படித்தான்,இதுதான் என்று வழிமுறையோ கோட்பாடோ கிடையாது. நீங்கள் ஜென்னைத் தழுவ நினைத்தால் உங்களுக்கு ஒரு தேநீர் விருந்து நடக்கும்.

அந்த தேநீரை நீங்கள் எவ்வாறு சுவைக்கவேண்டுமென்பதை ஜென் குரு உங்களுக்கு காட்டுவார்.அந்த தேநீரைப் பருகுவது போல வாழ்கையைத் துளி துளியாக பருகுவதே ஜென்.

ஜென் கதைகள்,கவிதைகள்,தத்துவங்கள் மிகச் சிறியது.பனித்துளிப் போல.ஆனால் அது உள்ளே பொத்தி வைத்திருக்கும் அர்த்தமோ,பனித்துளி பிரதிபலிக்கும் சூரியனைப் போல,பிரபஞ்சத்தைப் போல எதார்த்தத்தில் பிரம்மாண்டம் கொள்ளும்.

ஜென் கருத்து ஒன்று :”ஒரு ஆற்றில் ஒரு முறைதான் கால் வைக்க முடியும்”.

மேலே உள்ளக்கருத்தில் நீங்கள் ஆற்றை ஆறாக வைத்துக்கொண்டாலும் சரி,இல்லை ஆற்றுக்குப் பதிலாக காலம்,வாழ்கை என உங்கள் விரிவிற்கேற்றவாறு மாற்றிக் கொண்டாலும் சரி இந்தக் கருத்து நன்றாகப் பொருந்தும்.



குரு சீடனிடம் : இலை விழுகிறது, இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் : இலை விழுந்தது, இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் : இலை விழும், இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் :போதும்.நீ ஞானம் அடைந்து விட்டாய்.இனி உன் பாதையில் செல்.

ஹைக்கூ என்ற ஒரு கவிதை வடிவம் ஜென்னிலிருந்து வந்ததுதான். முற்றிலும் இயற்கையை மட்டுமே பாடுபொருளாக கொண்டது.இதன் சிறிய வடிவமே இதன் தனி சிறப்பு.

ஒரு ஜென் துறவி தன் வாழ்நாளில குறைந்த பட்சம் ஒரு ஹக்கூ படைப்பதே சாதனையாக கொள்ளப் படுகிறது.

மூன்று,நான்கு என்பது உச்சபச்ச சாதனை.பாஷோ என்ற ஜென் துறவியே அதிக ஹக்கூக்களை எழுதியவர் ஆவார்.

ஒரு பருந்துப் பார்வையில் அவதானிப்பதெனில் சிறிய,எளிய என்பதே பொதுவாக ஜப்பானிற்கு வாழ்வாக இருந்து வந்திருக்கிறது.தொட்டியில் வீட்டினுள் வைத்து வளர்க்கப்படும் போன்சாய் கூட ஜப்பானிலிருந்து வந்ததென என கேள்வி.


ஒரு துறவி ஒரு ஹக்கூ படைத்து அது எவ்வாறு வந்திருக்கிறதென தன் குருவிடம் காட்டுகிறார்.

சில்வண்டின் இரு
சிறகுகளை நீக்கினால் அது
குங்கமச்சிமிழ்.

என்று பொருள்வரும்படி எழுதுகிறார்.ஆனால் குருவோ அந்த ஹைக்கூவை பின் வருமாறு மாற்றுகிறார்.

குங்கமச் சிமிழிற்கு இரு
சிறகுகளை வத்தால்
அது சில்வண்டு.

அதில் ஒரு பிரம்மாண்டமே புரட்டப்பட்டிருக்கிறது.

உண்மையில் நாம் இப்போது வாழும் உலகம் சில்வண்டின் சிறகுகளை நீக்கிக் கொண்டிடுக்கிறது.

செவ்வாய், 22 ஜூன், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

மாவிலைத் தட்டி

திறந்த கதவிடுக்கில்

ஆருயிர் நண்பனாய்

ஆரத்தழுவி நுழைந்த காற்று

இருக்கை,தொலைக்காட்சி,மேசை,

உள் அறை,அடுப்படியென அலைந்து

நிலைத்தது

கவிதைக் குறிப்புகளின்

பக்கங்கள் புரட்டி...

நிமிடங்களில் ஆசுவாசிக்கலாமென

அமருந்தருணம்,அறையெங்கும் நிறைந்தது

புழுக்கம்..

நண்பர்களின் வழியறியுமோ காற்றும்...

*******************************************************

கேள்விக்குறியென

மூப்பில் வளைந்து

கையில் பற்றிய கழியில்

இடறும் ஆச்சரியக்குறி

நெடுக்கச் செல்லும் சாலையை

குறுக்காக கடந்ததை பார்த்தன்

சாட்சியாய் மூவர்...

நான்..அந்த தவிட்டு  நிறக்குருவி

நீங்கள்...

மீள்....

படிச்சி ரொம்ப நாள் ஆன இலக்கியத்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக சில பேர் மறுபடியும் ஒரு முறை வாசிப்பதுண்டு. இதை மீள் வாசிப்பு அப்படீன்னு சொல்வாங்க..இதுவே பதிவுலகில் பரவலாக மீள்பதிவு அப்படீன்னு போட்டுவிடுவார்கள். ஆனா பொதுவா என்னோட அபிப்ராயம் மீள் பதிவு போன்றதல்ல மீள் வாசிப்பும், பார்வையும்.

மீள் வாசிப்பும், பார்வையும் ஏற்கனவே படித்த,பார்த்த ஒரு படைப்பை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு புதிதாக  ஏற்ப்பட்ட அனுபவங்கள், கிடைத்த தகவல்கள், படிப்பினைகள், புரிதல்கள்,  வரித்துக்கொண்ட புதிய் கருத்துகள் இவைகளைக் கொண்டு வாசிக்கும் நிலையில் அந்த படைப்பானது ஒன்று நம்மை ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச்செல்லலாம், முன்பிருந்தை விட சற்று பின் நகரலாம், புரிதலில் ஏதாவது நடக்கலாம் அல்லது இவையெதுவுமே இல்லாமல் இருக்கலாம்.

ஆக மீள் வாசிப்பு என்பது மருத்துவ துறையில் இப்போது பரவலாக கூறப்படும் முழு உடல் பரிசோதனை எனபது போல நம் நம்பிக்கைகள், தத்துவங்கள், புரிதல்கள் ஆகியவற்றை கொண்டு அந்தப் படைப்பை  மறு பரிசோதனை செய்வது ஆகும்.

நிற்க...மேலே சொல்லவர்ரது வச்சிட்டு நான் ஏதோ  படத்தை விமர்ச்சனம் செய்யப் போறிங்கன்னு நினைச்சா சோ சாரி...

எப்பவோ சரியாக கவனிக்காமல்,கவனத்திற்கு வராமல் போன சில பாடல்களை இப்போது கேட்கையில் ரொம்ப நாள் கழிச்சு வானவில்லை பார்த்த மாதிரி இருக்கிறது.

அதைப் பற்றிய பகிர்வே இது...

1. புத்தும் புது காலை...பொன்னிற வேளை....என் வாழ்விலே...

ஆபிஸ் வேலையா ஒரு சமயம் காரில் போனபோது கேட்ட பாடல்.இசை கண்டிப்பா மேஸ்ட்ரோவாகத்தானிருக்கும். ஒரு காலை நேரத்தில்தான் இந்த பாடல் கேட்டேன்.அன்றைய நாளே அற்புதமாக இருந்தது. unforgettable song...

2. சிறு சிறு மழைத்துளி மனதுக்குள் விழுகிறதே...

படம் : அரசாட்சி,அர்ஜீன் நடிச்சது.இந்தப படத்தில் ரெண்டு பாட்டு நல்லாருயிருந்தது. ஒன்னு மேல சொன்ன பாட்டும்.இன்னொன்னு “ நான் இருபது வயது ஆர்வக்கோளாறு..என்னை ஆசைப்படாதவன் பார்வைக்கோளாறு...

சிறு சிறு மழைத்துளி எனக்கு ஒரளவு பிடித்த பாடல்தான் எனினும் ரொம்ப நாள் இடைவெளிவிட்டு ,ஒரு தொலைதூர பேருந்து பயணத்தில் தூக்கத்-திலிருந்து கொஞ்சமா முளிப்பு வந்த போது, வெளியிலிருந்து ஜில்லுனு சாரல காத்து. எல்லோரும் நல்லா ஆழ்ந்து தூங்கிட்டு இருக்காங்க..பஸ் அப்படியே ஒரு ரிதத்தில் போய்ட்டு இருக்கு. அப்ப இந்த பாட்டை கேட்க நேர்ந்தது. யப்பா..எல்லாத்துக்குமே ஒரு குறிப்பட்ட தருணம்,மனநிலை இருந்தா ரசிக்கமுடியாததுன்னு எதுவேமேயில்லை.


3. அதிகாலை நிலவே... அலங்காரச் சிலையே....புதுப்பாடல் நீ பாடவா...

இது அனுபவிக்க வேண்டிய பாட்டு...ஆராயக்கூடாது..பாட்டுல ஒரு வரி வரும் ”இசை தேவன் இசையில் ” அப்படீன்னு...நிச்சயமா பாடல் அவருடையதாகத்தானிருக்கும்.

4. மல்லிகையே..மல்லிகையே தூதாகப் போ..கொஞ்சிவரும் தென்றலையே நீ சேர்த்துப் போ....

படம் : கும்பக்கரை தங்கைய்யா என்று நினைக்கிறேன்...அப்படியே வார்த்தைகளை வருடித்தருவது போன்ற இசை....

5. சிரிப்பினில் உன் சிரிப்பினில்..மனதின் பாதியும் போக...

படம் : ப.கி.மு.சரம். இசை : ஹேரிஷ் ஜெயராஜ். இந்த படம் வந்ததிலிருந்து இந்தப் படத்தில் இந்த பாட்டுதான் என்னோட பேவரிட். கேக்கும்போதெல்லாம் மனம் அப்படியே பஞ்சுமாதிரி  லேசாயிரும். அதுவும் ஆண்குரலில் பாடல் துவங்கும்போது காதுக்குள்ள பாடறமாதிரி அவ்வளவு மெனமையாக இருக்கும். “முதல் நாளில் பார்த்த வனப்பு இன்னும் குறையவில்லை உனக்கு.” போன்ற வரிகள்  பாடலில் நம்மை லயிக்கச்செய்துவிடும்..

6. மான் கண்டேன்..மான் கண்டேன் மானே தான் நான் கண்டே...

பாடியவர் ஜேசுதாஸ் என்பதைத் தவிர வேறொன்றும் அறியேன். ஆனால் அடிக்கடி என்னையுமறியாமல், இந்த பாடலை திடீரென்று வாய் முனுமுனுக்க ஆரம்பித்துவிடுகிறது.


7. ஓம் முருகா ஓம் முருகா உனக்கு நன்றி சொல்வேன்...

ஸ்ரீகாந்தின் இந்தப்பாட்டின் படமும்,இசையும் ஞாபகத்தில் இல்லை.பாஸ்ட் பீட்.சரணத்தில் சாதரணமா இருக்கற, பாட்டு பல்லவி தொடங்கியவுடன் புளுங்கற வீட்டுல ஜன்னலை திறந்து விட்ட மாதிரியிருக்கும்.

8. வான் நிலா..இமைத்தது....

காதல் வைரஸ் படத்தில் இடம்பெற்றப் பாடல்.கதிரை இதயம் காரணமாக மிகுந்த அளவில் நேசிக்க ஆரம்பித்திருந்தேன்.ஆனால் ஒவ்வொரு படமும் வெளி வர வர என்னை விட்டு விலகிக் கொண்டேயிருந்தார். இதயத்திற்கு பிறகு  உழவன் மட்டுமே நெஞ்சில் நிறைந்தது. எனினும் அவர் படத்தின் பாடல்கள் ஏமாற்றியதில்லை. இந்தப் பாடல் முதலில் கேட்டைதை விட  இப்போது கேட்கும்போது நன்றாக இருக்கிறது.சற்று சிரமமான பாடலும் கூட.பாடிய தொனி என்னை மிகவும் கவர்கிறது. பாடல் வரிகளும் அருமை.

இந்தப் படத்தில் இன்னொரு நல்ல பாடல் “ என்ன ஆச்சு உனக்கு..புதுசா இந்த பார்வை எதற்கு.” ஆனா என்னா இப்ப இருக்கற டிரெண்டுக்கு பசங்க இந்தப் பாட்டை பாடினாத்தான் பொருத்தமா இருக்கும்.

நேரமின்மை காரணமாக என்னால் இன்று இவ்வளவே பகிர முடிந்தது.மீதி அடுத்த பதிவுகளில்..

வெள்ளி, 11 ஜூன், 2010

ஞாபகவெளியில்...

”மதியெனும் மனிதனின் மரணம் குறித்து” - ஆசிரியர் இரா.நடராசன்(பெயரில் சிறிது ஐயமுண்டு).

சிறுகதை தொகுப்பு.

சில படங்களும்,புத்தகங்களும் ஏற்படுத்தும் பாதிப்புகளென்பது ஆறிய காயங்களின் தழும்பை போன்றது. என்ன செய்தாலும் சில தழும்புகள் மறையவே மறையாது.

அந்த தழும்புகளை பார்க்கும் பொழுதும்,தடவும் பொழுதும் மனசில் மெல்ல காயம்,வலி என நினைவுகள் பூக்கத்தொடங்கும்.அது ஒரு சுகம்.

(வலி என்றவுடன் எனக்கு திரு.ஜெயமோகனும், சாருவும் நினைவுக்கு வருகிறார்கள்.2008 அக்டோபர் மாதம். நீண்ட காலத்திற்கு பிறகு குற்றாலம் பதிவுகள் சந்திப்பிற்க்கான அழைப்பிதல் உயிர்மையில் வந்திருந்தது.


முக்கிய எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பில் திரு.ஜெயமோகன் அவர்களைக் கருத்தில் கொண்டு நானும் அச்சந்திப்பிற்கு சென்றேன்.இரண்டு நாட்கள் நடக்கும் சந்திப்பில் முதல் நாள் உணவு இடைவேளையின் போது திரு.ஜெ.மோ. விடம் என்னைப் பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டு, அப்போதைய அளவில் நான் படித்திருந்த கன்னியாகுமரி( நாவல்) ,ஆயிரம்கால் மண்டபம்( சிறுகதைத்தொகுதி) பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது சாருவிடமிருந்து,ஜெ.மோ.க்கு ஒரு குறுஞ்செய்தி.


தனக்கு ”பைபாஸ் சர்ஜரி” முடிந்து மருத்துவமனையில் இருப்பதால் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை எனவும், வலி அதிகமாக இருக்கிறதெனவும்.


பதிலுக்கு ஜெ.மோ. வலியைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அது கூட ஆண்மீகம் தான்.


இதைப் பற்றி சாரு பிறகொரு பதிவில் எழுதினார். ஜெ.மோக்கு வலி கூட ஆண்மீகம். எனக்கு ஆண்மீகமே வலி என்று.)

படித்து பல ஆண்டுகள் ஆனாலும் அந்தத் தொகுதியில் உள்ள சில சிறுகதைகள் இன்றளவிலும் என்னை மனதளவில் இம்சித்து வருகிறது.அதைப் பற்றிய பகிர்வே இது.

முதல் கதையின் பெயரே இந்த புத்தகத்தின் தலைப்பாகும்.

1.மதியெனும் மனிதனின் மரணம் குறித்து :

இது திருநங்கையாக வாழ்ந்த மனிதன் எதிர்கொண்ட பிரச்சனைகள் எப்படி அவரை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது என்பது பற்றிய கதையாகும். போஸ்ட் மார்ட்டம் ரிப்போட் பாணியில் எழுதப்பட்டிருக்கும் உத்திதான் இந்த கதையின் பெரிய பலம். ஒரு சாதாரண விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்வது போன்றளவில் தொடங்கும் கதையை படித்த முடித்தவுடன் ,குற்றணர்விற்கு ஆட்படாமல் இருந்தால் கண்டிப்பாக நம்முடைய இதயப் பகுதியை ஸ்கேனிங் செய்துகொள்வது உத்தமம். 

சக மனிதனை அவனுடைய அனைத்துப் பலவீனங்களையும் தாண்டி நேசித்தலே உண்மையான மனிதமும்,ஆண்மீகமும் ஆகும். இந்தக் கதையின் சாரம் இதுவென்றே நினைக்கிறேன்.

2. இரத்தத்தின் வண்ணத்தில் :

சூழ்நிலைக்காரணிகளால் விலைமாதாக வாழ நேர்ந்த பெண்,தன் தாய்க்கு எழுதும் கடிதமே இந்தக் கதை.

இதில் உண்மைச் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பேர் என்று கூறி,  ஒரு கல்லூரி விடுதிக்கு வரவழைக்-கப்பட்ட விலைமாதுவை சுமார் 30பேர் சேர்ந்து கொடுமைப்படுத்திய நிகழ்வொன்று மிகுந்த அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது.அதில் பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிப் போராடியவர் இந்த ஆசிரியர். அந்த பெண்ணின் வலியை ஒரு ஆண் கூட உணரக்கூடிய அளவில் இந்தக் கதையில் பதிவுசெய்திருக்கிறார்.

கல்கி படத்தில் ஒரு பாடல் வரும் “ எழுதுகிறேன் ஒரு கடிதம்” என்று.அந்த பாட்டை கேக்கும்போதிலெல்லாம் எனக்கு இந்த கதையே உடனடியாக ஞாபகத்திற்கு வரும்.


3. ஆயிஷா

இந்த தொகுப்பில் வரும் மற்றுமொரு முக்கியமான கதை. இந்தக் கதை குறும்படமாக எடுக்கப்பட்டு,பல பள்ளிகளில் ஒலிபரப்பப்பட்டு பரவலாக எல்லோருடைய கவனத்தையும் ,பாராட்டையும் பெற்றப்படம்.

நான் பார்த்த பெரும்பாலான ஆசிரியர்களிடம் இந்த வழக்கமிருக்கிறது. வகுப்பில் நன்றாக படிக்கும் பிள்ளையிடத்தே மட்டும் அதிக கவனம் காட்டுவது, அவர்களுக்கென்று குறிப்பிட்ட சில சலுகைகளை அளிப்பது,அவர்களை அவர்களறியாமலே மற்ற படிக்காத பிள்ளைகளிடமிருந்து அப்புறப்படுத்துவது என்று. அதே மாதிரி சில குழந்தைகளிடத்தில் இயல்பாய் மிளிரும் புத்திச்சாலித்தனங்களை அலட்சியப்படுத்துவது,அது பற்றி கேலி செய்வதென..

அப்படி புறகணிப்புக்குள்ளாகும் ஒரு புத்திசாலிப்பிள்ளையின் பரிதாப சாவைப் பற்றியது இந்தக் கதை.

4. விளையாட்டின் அகதிகள் :

அம்மை,காலரா போன்ற வியாதிகளை விட அதிகமாக தமிழ் நாட்டின் குக்கிராமங்களில் கூட  பரவியிருக்கும் கிரிக்கெட்டினால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் கதை. ஒரு உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடும் கிரிக்கெட் வீரருக்கு கிடைக்கும் முக்கியத்துவம், சர்வதேச அளவில் விளையாடும் மற்றத்துறையைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை.அந்த விளையாட்டினால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஒரு மாறுபட்ட அனுகுமுறையில் சொல்லியிருக்கும் கதை.

5. தலைப்பு ஞாபகத்தில் இல்லை:

 ஒரு நரிக்குறவனும்,அவன் சமூகமும் சந்திக்கும் வாழ்க்கை பிரச்சனைகள் பற்றி அந்த  நரிக்குறவனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைப் போல எழுதப்பட்டிருக்கும்.

இவர்கள் மேல் எனக்கும் எப்போதும் ஒரு வியப்பு உண்டு.


1. நாடோடி வாழ்க்கை முறை.


2.இன்னும் நவீன யுகத்திற்கு அவ்வளவாக தங்களை ஒப்புக்கொடுக்காதது.


3.வியாதியென்று  மருத்துவமனை வாசல்களில் இவர்கள் பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை
 
4.மரணத்தை இவர்கள் எதிர்கொள்ளும் விதம். இவர்களின் சமூகத்தில் நேர்ந்த ஒரு இறப்பைக்கூட இதுவரை நான் கண்டதில்லை.

5. அவர்களுடைய குழந்தை வளர்ப்புமுறை.
6. குழந்தைகள் தூங்கும் போது ஏதாவது இரும்போ (அ) துடைப்பக்குச்சியையோ தொட்டிலின் அடியில் போட்டுவைப்பது நம்முடைய வழக்கம்.குழந்தைகளை காத்து,கருப்பு எதுவும் அண்டக்கூடாது என்பதற்காக.ஆனால் இவர்களின் குழந்தைகள் புளியமரத்தில் ஊஞ்சல் கட்டி  ஆட்டுவதற்கு கூட ஆளின்றி காற்றிலும்,புழுதியிலும் தனியாக கிடக்கும்.

இந்தத் தொகுப்பில் இந்தக் கதை மட்டுமே ஒரு நகைச்சுவை யோட்டத்திலிருக்கும்.

மேற்கூறிய தொகுப்பில், என் ஞாபக வெளியில் உலவிக்கொண்டிருக்கும் கதைகளைப் பற்றியே பேசியுள்ளேன். மேலும் சில கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.அவை மறதியெனும் பாசியில் வழுக்கி விழுந்து விட்டது.

நூலகப்புத்தகம்,படித்தும் பல ஆண்டுகளாகிவிட்டது. மேலும் புத்தகத்தை வாசிக்கையில் இது போல பதிவெழுதுவேன் என்று நான் கருதியிருக்கவில்லை. எனவே புத்தகத்தைப் பற்றி மேலதிகத் தகவல்கள் தர இயலவில்லை. இருப்பினும் சற்று முயற்ச்சித்தால் கோவை விஜயா பதிப்பகத்தில்  கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


--------------------------------------------------------------------------------------

திரு.சேஷய்யா ரவி இவரைப் பற்றி எவ்வளவு பேருக்கும் தெரியும் என்று தெரியவில்லை. இவர்  சன் தொலைக்காட்சியில் சன் செய்திக்களுக்காக --------லிருந்து சேஷய்யா ரவி என்று எதாவது ஒரு ஊரின் பெயரையோ,இடத்தின் பெயரையோ கோடிட்ட இடத்தில் நிரப்பி சொல்லுவார். இப்போதும் அதில்தான் பணிபுரிகிறாரா என்று தெரியவில்லை.

விசயம் இதுதான்.இவர் எழுதிய ஒரு சிறு கதை தொகுதியையும், கவிதைத் தொகுதியையும் வாசித்திருக்கிறேன்.  தலைப்பு ஞாபகத்தில் இல்லை.

கவிதைகள் அவ்வளவாக என்னை கவரவில்லை.ஆனால் சிறுகதைகள் நன்றாகவேயிருந்தது. அதிலும் குறிப்பாக சுபாவம் என்றொரு சிறுகதை.

மழை நாட்களில் வாய்க்கால் உடைப்பு ஏற்ப்பட்டு ஊருக்குள் புகுந்துகொள்ளும் தண்ணீரோடு சில மீன்களும் வரும். அதை பிடிக்க சிறு வயது பையன்கள் முதல் பெரியவர்கள் வரையென்று, அந்த ஊரில் போட்டி நிலவும். ஒரு பெரிய மீனை பிடிக்க கதையில் வரும்  சிறுவன் முயல அது அவன் பிடிக்குள் சிக்காமல் தப்பி, அவன் நினைவுகளில் நீந்திவந்து பயமுறுத்தும். தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போகும் நிலையிலிருக்கும்போது, எப்படியோ அந்த மீன் இவன் கையில் கிடைக்கும்.அதை தரையில் அடித்துக்கொல்வான் சிறுவன். அவனுடைய மனம் சார்ந்து விரியும் இந்தக் கதையை அழகான,கச்சிதமான நடையில் எழுதியிருப்பார்.

அதே போல இவருடைய குடி பற்றிய வர்ணனை இந்தக் கதைகளில் நிறைய இடத்தில் இடம்பெறும். மதுவின் ஒரு மிடறு உள்ளிரங்கும்போது ஒரு சிறிய எரிமலை உருண்டை தொண்டையிலிருந்து வயிற்றுக்குச் செல்வதை விவரிக்கும் பகுதி சிறப்பாக இருக்கும். இவருடைய புத்தகத்தைப் படித்த பிறகு,இவரைப் பார்க்க நினைத்தேன்.ஆனால் இவர் பற்றிய ஒரு தகவலுமே கிடைக்கவில்லை இன்றுவரையிலும் கூட...

செவ்வாய், 8 ஜூன், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...

--------------------------------------------------------------

உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்..

-------------------------------------------------------------

பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்...

--------------------------------------------------------------------

my days got colors by your dresses...
my pages got fragrance by your pedals...

---------------------------------------------------------------------

மருமகன் வழி மான்மியம்???

சமீபத்தில்,அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிபவரின் திருமணத்தை ஒட்டி தூத்துக்குடி செல்ல நேர்ந்தது. .

திருமணம் 24ம் தேதி,திங்கட்கிழமை. எனவே ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ளதாக கழிக்கும் எண்ணத்தில் சனி இரவன்றே கிழம்பியாகிவிட்டது.

திருப்பூரில் வாரக்கடைசியிலும்,முக்கியமான  மூகூர்த்த தினங்கள் தமிழ்பண்டிகை தினங்களில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென்காசி போன்ற ஊர்களுக்குச் செல்வதற்கு பேருந்து பிடிப்பதில் உள்ள சிரமத்தை தனி பதிவாகவே எழுதலாம்.

பெயர்பலகையில்லாமல் வரும் பேருந்தில் கூட இடம்பிடிக்க அடிதடியாகயிருக்கும்.வண்டி கிளம்பும்போது மட்டுமே அந்த பேருந்து எந்த ஊருக்குச் செல்லும் என்று தெரியும்.

 டிப்போவைத் தாண்டியதுமே பயணிகள் நிரம்புவது மதுரைப் பேருந்தில் மட்டும்தான்!

ஒருவழியாக பேருந்தில் இடம்பிடித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் கால்வைத்தேன்.

காலை 5மணிக்குகூட தூத்துக்குடியின் வெப்பத்தை நன்றாகவே உணரமுடிந்தது.

காலை- திருச்செந்தூர்

மதியம் - ஒட்டப்பிடாரம்

இரவு      -  மணமகன் இல்லம்.

மேலே சொன்ன(கா,ம)நிகழ்ச்சி நிரல்களும் இனிதே கழிந்து, இரவு நிகழ்ச்சி நிரலான மணமகன் இல்லம் சேர்ந்தோம்.

பிரம்மச்சாரியின் கடைசித் தின உற்சாகம் கொப்பளிக்க ஒரு வித நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் மணமகன் வரவேற்றார்.

வழக்கமான வரவேற்பிற்கு பிறகு மணமகனுடன் அவர்களுடைய திருமணச்சடங்குகள் பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தேன்.

 நான் கேள்விப்பட்ட திருமணவழக்கத்திலிருந்து இவருடையது சற்று மாறுபட்டது. பொதுவாக பெண்ணெடுக்கும் முறைதான் - அதாவது மணமான பிறகு பெண் தன் பெற்றோரைப் பிரிந்து கணவனுடன் அவனுடைய இல்லத்திற்கு செல்லவேண்டும்.அதன் பிறகு அவள் முழுவதுமாக கணவனுடைய உறவிற்கும்,உறவுகளுக்கும் மட்டுமே பாத்திரமானவள். குழந்தை பேற்றிற்கும்( நகரமாகயிருந்தால்) ஏதாதவது வைபவங்களுக்கும் மட்டுமே தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல முடியும்.

ஆனால் மேற்சொன்ன நபரின் திருமணத்தில், இது அப்படியே தலை கீழ்.
இங்கு மாப்பிள்ளை எடுக்கும் வழக்கத்திலுள்ளது. திருமணத்திற்கு பிறகு மணமகன் தன்னுடைய மனைவியின் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். ஒன்று இவர் தன் மனைவியின் பெற்றோருடனோ (அ) அவர்களால் வழங்கப்படும் வீட்டிலோ தான் வசிக்க வேண்டும். ஏதாவது வைபவங்களுக்கு மட்டுமே தன் பிறந்தகம் செல்ல இயலும். இதுவே இவர்களின் சமூக வழக்கமாம்!!!.

சனி, 5 ஜூன், 2010

Pearl Harbour.

Pearl harbour - ஆங்கிலப் படத்தைப் பற்றிய பதிவல்ல இது. இந்த பெயருக்கு முற்றிலும் தகுதியான துறைமுகம் தூத்துக்குடி.ஏனெனில் இங்கு அரசர்களின் காலம் முதற்கொண்டே முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவின் முத்துக்குளிக்கும் துறைமுகம் தூக்குடியே.

இங்கிருந்து சுமார் அரைமணி நேர பயணத்தில் (டவுன் பஸ்ஸில்)  அமைந்திருக்கும் ஊர் ஒட்டபிடாரம்.தமிழக அரசின் 5ம் வகுப்பு பாடத்திட்டத்தை (90-களில்) பயின்ற யாராலும் மறக்க முடியாத ஊர் ஒட்டபிடாரம்.

ஆம்! கப்பல் ஓட்டிய தமிழன்,செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊர். ”வந்தால் கப்பலோடு வருவேன்; இல்லையேல் கடலில் வீழ்ந்து மாய்வேன்” என்று சொல்லி அயல்நாடு சென்று பொருள் திரட்டி இந்தியர்களுக்கென்று முதன் முறையாக(!) வாணிபக் கப்பல் வாங்கி  வந்தவர்.

இந்த ஊரிலிருந்து சுமார் 2.கி.மீ. தொலைவில்தான் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய கோட்டை அமைந்துள்ளது. வெள்ளையர்களின் தாக்குதலினால் சிதைந்து கிடந்த இந்த இடத்தில், 1971ம் ஆண்டு திரு.கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.அதில் திரு.வீரபாண்டிய கட்டபொம்மனுடைய ஒரே கல்லால் ஆன முழு உருவச்சிலையும், அவரைப்பற்றிய தகவல்களையும் ஒவியங்களாக வரைந்து வைத்துள்ளனர்.


மேலே உள்ள படங்களில் உள்ள திரு.வீர பாண்டிய கட்டபொம்மனுடைய ஒரே கல்லால் ஆன இந்த சிலையின் எடை 6டண்.சிலையைச் சுற்றியுள்ள மண்டபத்தின் நான்கு தூண்களும் ஒரே கல்லால் ( தனிதனியாக) ஆனவையாகும்.இதன் எடை முறையே 1டண்.

ஆந்திராவிலிருந்து தமிழகத்தின் இந்தப் பகுதிக்கு பிழைப்புத்தேடி வந்த ஒரு குழுவினர் அப்போது அங்கு பொது மக்களுக்கும், அரசிற்கும் பெரும் பிரச்சனையாக இருந்த வழிப்பறிகொள்ளையர்களை பிடித்து அரசிடம் ஒப்படைக்கின்றனர்.

அவர்களுடைய வீரச்செயலைப் பாராட்டிய அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை பரிசாக வழங்குகிறது.அந்த நிலப்பகுதியை ஆட்சிசெய்து வரும் இவர்கள் ஒரு முறை வேட்டைக்குச்செல்கின்றனர். அப்போது இவர்களுடைய வேட்டை நாய் ஒரு முயலைத் துரத்த,நாய்க்குப் பயந்து ஒடிக்கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் திடீரென்று திரும்பி அந்த நாயை எதிர்க்கிறது. இதைக் கண்டு வியந்த அவர்கள் இந்த மண்ணை மிதித்தவுடன் தான் முயலுக்கு வீரம் வந்திருக்கிறது,முயலுக்கே இவ்வளவு வீரமென்றால்!! எனவே இயற்கையிலேயே வீரம் நிறைந்த அந்த மண்ணில் தனது கோட்டையை அமைத்து அங்கிருந்தே ஆட்சி புரிவது என்ற முடிவிற்கு வருகின்றனர்.

அப்படி அமையபெற்ற கோட்டையில் நான்காவதாக ஆட்சிப்பொறுப் பேற்றவர் தான் திரு.வீரபாண்டிய கட்டபொம்மன். கிட்டத்தட்ட 96கிராமங்கள் இவருடைய ஆளுகையின் கீழிருந்ததாக சொல்லப்படுகிறது.
இங்கிருந்து சுமார் 70-80கி.மீ துரத்தில் அமையபெற்றுள்ள ஊர் திருச்செந்தூர். இங்குள்ள முருகனுடைய தளத்தில் காலைப் பூசை முடிந்த பிறகே தன்னுடைய அன்றாட அலுவல்களை துவக்குவதை வழக்கமாக கொண்ட திரு.வீ.பா.க. ,இதற்கென்று கோட்டை - திருசெந்தூருக்குக் கிடையில் நிறைய மணி மண்டபங்களை (Bell tower) அமைத்திருந்தார்.

திருச்செந்தூரில் நடக்கும் விழாவொன்றில் இவர் பங்கேற்கச் சென்றதை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், இவரில்லாத நேரம் பார்த்து இவருடைய கோட்டையைக் கைப்பற்றி அதை முற்றிலும் சிதைத்து விடுகின்றனர். தஞ்சமென்று புகுந்த இடத்தில்  எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டு தன்னுடைய 37ம் வயதில் கயத்தாறு எனுமிடத்தில் தூக்கிலடப்படுகிறார். (வரலாற்றில்  மாவீரர்கள் என வர்ணிக்கப் படுபவர்கள், பெரும்பாலும் நாற்பது வயதை தாண்டுவதில்லையோ!!!).

அந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்ட இவருடைய சகோதரரான திரு.ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பி தன்னுடைய ஆதரவாளர்கள் சுமார் 7,000ம் பேர்களின் துணையுடன் வெறும் களிமண் சாந்து மற்றும்  சில பொருட்களைக் கொண்டு மூன்றே  நாட்களில் ஒரு வலிமை வாய்ந்த கோட்டையை பழைய சிதைந்த கோட்டையிருந்த இடத்த்திலேயே மீண்டும் நிர்மாணிக்கிறார். இந்தக் கோட்டையின் வலிமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை ஜிப்ரால்டர் கோட்டை என்று வர்ணிக்கிறார்கள். இந்த கோட்டையும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு மீண்டும் முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது.

இந்த சிதைவில் எஞ்சிய திரு.வீரபாண்டினுடைய குலத்தெய்வ கோவில் மட்டும் கோட்டையின் சில பகுதிகளைக் கொண்டுதான்,சுமார் 36ஏக்கர் பரப்பளவிற்கு தற்போதுள்ள நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள தகவல்களைக் கூறுவதற்கென்றே அரசால் நியமிக்கப்பட்ட நபர் ஒருவர் இங்குள்ளார்.

இவ்வளவு ஆண்டுகளாகியும் கூட இந்த ஊரின் வளர்ச்சியளவு ஒன்றும் பெரிய அளவில் இல்லையென்றே தோன்றுகிறது. இப்போது இந்த கோட்டையுள்ள இடத்தில் சுமார் 500குடும்பங்களே வசிப்பதாகத் தகவல். இந்த இடத்திற்கான பேருந்து வசதியும், சாலை வசதியும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. பொதுவாக வரலாற்றின் புகழ் நம் வாய்களிலும், ஏடுகளிலும் மட்டுமே.

கொஞ்சம் சிரத்தையெடுத்தால் இந்த இடத்தை ஒரு வரலாற்று பாரம்பரியமான சுற்றுத்தளமாக மாற்றலாம். இவ்விடத்தை எல்லோரும் அறிவதற்கேற்றவகையில் இதனுடன் (வரலாற்றுடன்) சம்மந்தமுள்ள ஏதாவது ஒரு துறையை இங்கு நிறுவலாம்.

சம்மந்தமில்லாமல் ஏதோ ஒரு  புத்தகத்தில் படித்த கவிதையொன்று நினைவிற்கு வருகிறது.


டால்ஸ்டாயின் எழுதுகோல் இங்குண்டு

ஆனால் அது எழுதிய அன்பு இங்கில்லை..

காந்தியின் கண்ணாடியும்,காலனியும் இங்குண்டு..

ஆனால் அது பார்த்த ஆழங்களோ,கடந்த தொலைவுகளோ

இங்கில்லை.....

திங்கள், 31 மே, 2010

சில மின்னல்கள்...

அருவி நீர் போல் வாழ்வின் கணங்கள் அத்தனை வேகமாக கடந்து போகிறது. விழும் ஒவ்வொரும் நீரும் புதிது.அருவிக் குளியலின் அனுபவத்தை என்னால் நிமிடத்துளிகளாக வர்ணிக்க இயலாது. மொத்த துளிகளையும்  மணிநேரமாக தொகுத்து கூறவே இயலும்.


ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நினைவு கூறப்படும் வாழ்வும் அங்கனமே உள்ளுமோ.


பதிவுகள் மட்டுமே வாழ்க்கையாகும் காலம் வரும். நினைவூஞ்சலாடி பின்னுக்குப் பதிவில் போய், முன்னுக்கு நிகழ்வில் போய், எங்கு நிறுத்த என்று அறியாமல் அரிக்கும் நரையின் கரை சேராதவர்களின் மரணம் இனிதே....




கவிதையும்,வாழ்வும் எவ்வளவு சிறியாக உள்ளதோ அவ்வளவு அழகாக இருக்கும். சான்றுகளுண்டு நிறைய...இருப்பினும் ஒப்புக்கொள்ளாது மனம்..எனக்கு அது வாய்க்கும்வரையில்...


வானவில் போல வந்து வண்ணங்களாகி நிறையும் மனிதர்களை,என் ஞாபகக் கூட்டிற்குள் பொத்திவைத்தல் என்பது தவிர்க்க இயலாத வழக்கமாகிவிட்டது எனக்கு.


ஆசானின் வார்த்தையைப் போல் சரியையும்,உண்மையையும் சொல்வதல்ல என் எழுத்து,நான் சரியென நம்புவதையும்,உண்மையென எனக்குப்படுவதையும் கூறுவதே.


அதே போல் எனக்குப் பிடித்தவைகளைப் பகிர்வதிலேயே எனக்கு மகிழ்ச்சி.


கண்களினால் சிரிப்பவர்களின் முகங்களை மறப்பதோ அல்லது அவர்களின் பிரியங்களைத் தவிர்ப்பதோ அத்தனை எளிதான காரியமல்ல..


அத்தகைய ஒரு மனிதர்தான் திரு.ரகுவரன். ”இது ஒரு மனிதனின் கதை” என்ற அவருடைய தூர்தர்ஷன் தொடர் முதல் சமீபத்தில் கடைசியாக அவர் நடித்த அல்லது நான் கடைசியாகப் பார்த்த “யாரடி நீ மோகினி” வரையில் நான் அவரைத் தொடர்ந்திருக்கிறேன்.


 ஒரு கதாபாத்திரமாக வெளித்தெரியாமல், அந்த கதாபத்திரமாகவே தன்னை  மாற்றிக்கொள்கிறவனே  நல்ல நடிகன்.


அதுபோல எந்த கள்ள கபடமுமின்றி தொடங்கும் வாழ்க்கை காற்றின் திசைக்கேற்ப அலைகழிக்கப்படும் பாய்மர படகென சூழ்நிலை அலைகழிப்புகளால் மாற்றம் பெறும் வாழ்கைதான் “ இது ஒரு மனிதனின் கதை”.


அந்த தொடரில் அவருடைய குடிகார வேடம்   புகைப்படகருவியை  அவருடைய வீட்டில் ஒளித்துவைத்து படம் பிடித்தது போன்று   இயல்பாகயிருந்தது.


அந்தத் தொடரிலிருந்துதான் நான் அவரின் அபிமானியானேன்.


சுமார் 13 பக்களவிலான வசனத்தை வெறும் ஒற்றை ஆங்கிலச் சொல்லாக(I KNOW-புரியாத புதிர்) மாற்றி,  ஏற்ற இறக்கங்களோடு (modulation??) வெவ்வேறு முகபாவங்களோடு, உண்மையான உளவியல் கோளாறு உள்ளவனின் சிரிப்போடு அந்த பாத்திரத்தை நம் கண் படைத்துக்காட்டிய அந்த கலைஞனை அவ்வளவு சுலபமாக மறப்பதற்கியலுமா..


எந்த ஒரு சிறிய பாத்திரமெனினும் முதல் படத்தைப் போன்ற சிரத்தை அவருடைய தனிக்குணாம்சம்.


யாருடைய தழுவலையும் போலன்றி, தனக்கு வழங்கப்படும் எந்த ஒரு பாத்திரத்தையும் தன்னிலிருந்து மலரச்செய்யும் இவருடைய உழைப்பு வியப்பிற்குரிய ஒன்று.இன்று எல்லாராலும் அனிச்சைசெயல் போல் உச்சரிக்கப்படும் “ஹோம் ஒர்க்” என்ற சொல்லை இவர் மூலமே நான் முதலில கேட்டறிந்தேன்.சிவாஜியிடம் நான் கேட்ட  சொல்  கூட ஒத்திகையென்பதே.அது அவருடைய மரபு வழித் தொடர்ச்சி.


படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முதல் நாளும்,படப்பிடிப்பின் அதிகாலை-யிலும்  கடற்கரைக்குச் சென்று தன் மனவார்ப்பை ஒரு முறை பரிசோதித்துக்கொள்ளல் என்பது இவருடைய வழக்கம் என்று நேர்காணலில் ஒருமுறை குறிப்பிட்டார்....


தனக்கு முன் தடம்பதித்தவர்களை விட்டு விலகி மற்றாருடைய பாதிப்புமின்றி தனக்கென ஒரு தடம் வகுத்துக்கொள்ளல் அத்தனை எளிதான காரியமல்ல...உலகநாயகனிடத்தில் கூட பாலச்சந்தர்,நாகேஷ் மற்றும் நடிகர்திலகத்தின் சாயல் ஏதேனும் ஒரு மூலையில் வெளிப்படவே செய்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.


என் சிற்றறிவுக்கெட்டிய வரையில் இவருடைய நடிப்பில் நான் யாருடைய பாதிப்பையும் கண்ணுற்றதில்லை.


இவருடைய புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் நளினம் பார்த்து இன்னும் அந்த பழக்கம் என்க்கு ஒட்டிக்கொள்ளாதது வியப்பே.செயல் தவறெனினும் செய்நேர்த்தி சில சம்யம் நம்மை நெக்குருக வைத்துவிடுகிறது.


பெரிய மற்றும் வித்தியாசமான ஒப்பனைகள்,பேச்சு வழக்கில் மாற்றம் ஏதுமின்றி வெறும் உடல்மொழியாலேயே தன்னுடைய கதாபாத்திரங்களை துலங்கச் செய்திடுவதில் அவருக்கு நிகர் அவரே.


புரியாத புதிர்,பூவிழி வாசலிலே,என் பொம்முக்குட்டியம்மாவுக்கு, அஞ்சலி, சம்சாரம் அது மின்சாரம், ஆஹா,கூட்டுப்புழுக்கள்,முதல்வன்,துள்ளித்திரிந்த காலம்,கன்னுக்குள் நிலவு,முதல் உதயம்,காதலும் கற்று மற   முதலானவகள் என் ஞாபகவெளியில் இப்போதைக்குத் தெறிக்கும் சில படங்களாகும்.


பொதுவாகவே மம்முட்டியைப் போலவே தன்னுடைய ஆளுமையை கம்பீரமாகவே நிறுவிக்கொண்டவர்.


அவருடைய அந்தக் கம்பீரமான நடிப்பிற்காகவே பிடித்து சில,பிடிக்காமல் பல படங்கள் பார்த்திருக்கிறேன்.


“BROKEN AERROW" என்ற படத்தில் ஜான் டிரவோல்டா (JHON TRAVOLATA) ஒரு ஸ்டைலிஷ் ஆன வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவ்வளவு ஸ்டைலிஷ் ஆன  நடிகர் தமிழில்  யாரென்று யோசித்தால் என் கண்முன்னே உடனே நிழலாடுவது இவருடைய முகமே. அவ்வளவு அருமையான நடிகர்.


என்னை அதிகம் கவர்ந்தது அவருடைய அந்த உயரமும், அற்புமான அந்த சிரிப்பும்.வில்லத்தனத்திறக்கென்று ஒரு சிரிப்பும், வில்லங்கமில்லாதனத்-திற்கு என்று  ஒரு சிரிப்பும் என நிறபேதங்களுடன் கூடியது அவ்ருடைய சிரிப்பு.


”என் சுவாசக் காற்றே” என்ற படத்தில் ரகுவரனுக்கும், பிரகாஷ் ராஜ்க்கு-மிடையேயான காட்சிகளின் சுவராஷ்யம் அத்தனை அலாதியானது. விழியில் நீர் வர யோசித்து யோசித்து நானும் என் நன்பனும் நகைத்த காட்சிகள் நிறைய உண்டு.


ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட ஒரு சாதரன மனிதன் என்ற நிலையிலும் எனக்கவர் மிகுந்த விருப்பத்திற்கும், நேசத்திற்குரிய- வருமாகவே இருக்கிறார்.


அவருக்குள்ளும் ஒரு காதல் சோகமுண்டு. காதலைப் பற்றி அவருடைய சில வரிகள் என்னைக் கவர்ந்தது...அவை:


’மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை ஆரதிக்கிறதுக்குப் பேர்தான் லவ்.நம்மை மாதிரி பசங்களுக்குத் தேவையான ஆறுதல்,ஆதரவு,அன்பு எல்லாமே ஒரே ஒரு பொன்னுகிட்டே கிடைச்சடறது (அ) கிடைச்சதா நாம பீல் பன்றதுதான் லவ்.


இருபது வயசுப் பையன் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தைப் பற்றி யோசிக்கிறதவிட இன்னிக்கு என்ன பூ பூக்குன்னுதான் பார்ப்பான். எனக்கப்போ இருபது வயசு.


அவளை நேர்ல பார்க்கும்போது எதுனா கிறுக்கிட்டு இருக்கப் பிடிக்கும்.ஆனா ஒரு நாள் பார்க்கலைனாக் கூட கிறுக்குப் பிடிக்கும்’


கடைசியா தன்னோட காதல் தோல்வியை பதிவு செய்யற விதம் :


நான் ஒரு பறவையை நேசிச்சேன்.எனக்கு அது உயிர் மாதிரி.அதுக்காக அதை ஒரு கூண்டுக்குள்ள அடச்சுவச்சுப் பார்க்கிறதுல அதுக்கே சம்மதமில்லை.நான் அதை நேசிச்சேன்.எங்கோ வானத்துல அது சிறகடிச்சுப் பறக்குதுங்கற நினைப்பே போதும்.பறவயை நேசிக்கிறவன் அதுதான் செய்வான்.”


இதற்கப்புறம்தான் இவருடைய திரைப்பட பிரவேசமே நடந்தது.


ரோகினியை காதல் மனைவியாக கைப்பிடித்தார்.அன்பின் நிறைவாய் ஒரு மகன். ரகுவரன் தீவிர சாய்பாபா பக்தனாகவும் இருந்திருக்கிறார்.


சில விசயங்களுக்கு காரணம் சொல்ல முடியாததுபோல அல்லது சில விஷயங்களின் அடர்த்தியை அளவிட நமது வாழ்பனுவம் போதாது போல்
அவர் தன் காதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.

அவர் அடிக்கடி தனிமைப் படும்போதெல்லாம் அவரை ஒரு சிலர் (விஜ்ய் கூட) மீட்டிடுக்கிறார்கள்.

அவருடைய தளர்ச்சியை நான் க்ண்கூடாக கண்டது “யாரடி நீ மோகினி” படத்தில்தான்.நிச்சயமாக அது வழக்கமான ரகுவரனில்லை. அதில் எந்த இடத்திலும் அவருடைய கண் சிரிக்கவேயில்லை.தனகுகு மட்டும் பில் கிளிண்டனுடைய சிரிப்பு மட்டுமிருந்தால் போதும் இந்த உலகையே வென்று காட்டுவேன் என்று ஒரு நேர்காணலில் அவர் சொன்னது இன்றுமெனக்கு நினைவிலிருக்கிறது.

பெருமழைகள் ஒயும்போது உண்டாகும்  அமைதியை  வெறும்  வார்த்தை-களைக் கொண்டு நிரப்பிட முடியாது. திரு.ரகுவரனுடைய மரணமும் அப்படித்தான்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.ரோகினி சொல்லியிருக்கிறார் “ "எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" ஆகவே ஒரு நல்ல கணவனாகவும்,கலைஞனாகவும்,மனிதனாகவும் அவர் ஒரு நிறை வாழ்க்கை வாழ்திருக்கிறார் என்றே கொள்கிறேன்.

சனி, 29 மே, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

அன்னார்ந்து பார்க்கையில்
மலைப்பாயிருக்கும்,
துவக்கத்தை போலல்லாமல் சீரற்று இருக்கும்,
கரடுமுரடாய் கால் கிழிக்கும்,மறைந்தும் கிடக்கும்
மூச்சுவாங்கும்,துவழும்
வியர்வை ஊற்றெடுக்கும்
சறுக்கலாம்,காரணிகள் மட்டுப்படுத்தலாம்
ஒதுங்க விழைந்தால் குழு பிரியும்

நீரோடைக்கருகில் நா வரண்டால்
கடவுள் பிழைப்பார்...
மூச்சுமுட்டிக்கொண்டோலா ஐயத்திற்கு
ஆட்படுவார்....

வழித்துணைகள் உண்டென்றாலும்
இறுதிவரையென்பது அறுதியில்லை...

முக்கிமுனகி தவழ்ந்து ஏகினால்..
சுற்றியுள்ளவைகளை சிறிதாக்கி
அழகாக்கும்...
குளிர்மேகம் முகத்திலறையும்....
முக்தி இதுவென்று மனம் துள்ளும்..
இன்னுமிருப்பவைகளை அறியாது...

--------------------------------------------------------

கடந்தகாலம் கல்வெட்டு...

சான்றென நீ...

-------------------------------------------------------

நிலவில் சப்தம்

உனக்கென் காதல்..

------------------------------------------------------------

மறக்க முடியாத சில குரல்கள்...

நாம் பெரிதாக பெரிதாக நம்முடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்குதோன்னு தோனுது.

நாலா வகுப்பும் அஞ்சா வகுப்பு படிக்கிறப்ப நம்மையாராவது நீ பெரிசான என்ன ஆவன்னு கேட்பாங்க...

உடனே நாமளும் டாக்டர்,இன்ஞினியர் அப்படீன்னு சொல்வோம்..

அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரிசானதும் வக்கீல்,கலைக்டர் இல்லைன்னா ஸ்போர்ட்ஸ் மேன் அப்படீன்னு சொல்வோம்...

அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரிசானுதும் கரெக்டா சில படிப்புகளின் பெயரைச்சொல்லி IPS,IAS,IFS,MBA,IT,MA,Msc,P.HD..இப்படீன்னு சொல்லுவோம்..

இதில் எத்தனை பேர் தான் நினைத்தைச் சாதித்திருக்கிறார்கள் என்பது எண்ணிக்கையில் அடங்கிவிடும்.

எதாவது ஒரு சூழலியியல் காரணங்களுக்காக தங்கள் கனவை பலிகொடுத்தவர்கள் அனேகம் பேர்.

வாழ்கையில் இவர்கள் இருவர் சந்திக்கும் புள்ளியில் நிச்சயம் ஒருவர் மற்றவரின் முடிவே புத்திசாலித்தான முடிவு என்று கூறுவதும் உண்டு.

கல்லுரியில் ஆசிரியர் கேட்கும்போது விளையாட்டாக ” நாங்க என்னாவோம்னு எங்களுக்கே தெரியாது” என்று கூறுவதுமுண்டு.  அது உண்மையும் கூட.  வாழ்க்கை ஆதாரத்திற்காக பிடிக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டியுள்ளது.அவ்வளவே..

நமக்கான பெரும்பாலானவைகள் இந்த வேலைக்கு வெளியேதான் உள்ளது.அவற்றின் உயிரோட்டமே இந்த வேலைகளில் நம்மை நீடிக்கச்செய்கிறது....

மேலே சொன்னவைகள் எதற்கு எனில்  எல்லோருமே அவரவர்களின் பாலியத்தையும் பதின்மத்தையுமே பெரிதாகச் சொல்லுகிறார்கள். அது எவ்வளவு கசப்பெனினும்.....

ஏனெனில் வடுக்கள் ஏந்தாத உடலைப்போலனாது,அவரவர்களின் பதின்மமும் பாலியமும். வடுக்கள் விழ ஆரம்பித்துமே நமக்குள்ளான அழகியலும் மனிதமும் தொலைய ஆரம்பித்துவிடுகிறது. கணக்குகூட்டல்களும் எதிர்கால திட்டங்களுமென இல்லாத ஒரு காலத்தில் வாழ பழகுகிறோம்....

தனுஸ்கோடி தொடங்கி,குஜராத்,சுனாமி என வாழ்வின் அபத்தங்களையும்,நிலையாமையையும் இயற்கை எவ்வளவுதான் எடுத்து இயம்பினாலும் செக்கு மாட்டு வாழ்க்கையை விட முடிவதில்லை..

எனவே ஆசுவாசிக்கவும்,சிறிது தலைசாய்க்கவும் எல்லோரும் திரும்புவது பதின்மத்திற்கும்,பாலியத்திற்குமே....

பதினமத்தின் ஆழப்பதிவே ஒரு மனிதனின் முழுவாழ்க்கையுமே ஆக்கிரமிக்கிறது. எனவே பதின்ம நினைவுகள் எல்லோருக்குமே முக்கியமானதுதான்....

என் பதின்மங்களில் எங்களுரில் ஒரு விசேச பழக்கமுண்டு. மின்மினிப் பூச்சியைப் ( உங்கள் புரிதலுக்காக- வழங்கல் பெயர்-பொன்னாம்பூச்சி)  பிடித்து சாமண்டரி பாக்ஸில் வைத்துக்கொள்வோம். அந்த பாக்ஸின் உள்ளே அதற்கான உணவாக இலைகளை இட்டு நிரப்புவோம்.தினமும் அது முட்டையிடுகிறதா...எத்தனை முட்டைகள்..எப்போது குஞ்சு பொறிக்கும் என ஆவலாகப்பார்போம்.காலையில் கண் திறக்கும்போதே அந்த பாக்ஸ் கையிலிருக்கும். இரவு படுக்கப் போகும்போதே காலையைப் பற்றிய நினைப்பிலேயே படுப்போம்...

இன்றும் அது போலவே என் பதின்ம,பாலிய நினைவுகளை என் மனப்பெட்டியில் இட்டு பத்திரப்படுத்தியிருக்கிறேன்..இபோது அது முட்டைகளை ஈனுகிறது..இன்னும் சில நாட்களில் முட்டைகள் சினையாகும்,பிறகு அது பொறியும்.உள்ளிருந்து வரும் குஞ்சுகள் பறக்குமென்றே நம்புகிறேன்..

என் பதின்மத்தில் கேட்ட சில குரல்கள் என் மனக்குளத்தில் கூழாக்கற்களைப் போல இன்றளவும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

1. முதல் குரல் - ஆகாசவானி..மாநில செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயண சுவாமி. என்ன குரல்..சத்தியமாக சாகிறவரைக்கும் மறக்காது அந்தக்குரல்..இந்த குரல்தான் அடையாளம்..இந்த குரலை கேட்டதுக்கப்புறமும் படுக்கையிலே படுத்துட்டுருந்தா அடிதான் கிடைக்கும்.எனவே இந்தக் குரலைக் கேட்டவுடன் படுக்கையைவிட்டு எந்திரிச்சரனும்.

இந்தக்குரல் எங்களுக்கு ஒரு ஆதர்சம்.இந்த குரல் +  ஒரு டம்மி செய்தியறிக்கை +  ஒரு அப்பு கமல் வேசம். இந்த மூனையும் வச்சுதான் PRS ல் நடந்த NCC பயிற்சி வகுப்பு கலைநிகழ்ச்சிகளில் முதல் பரிசை நவிட்டினோம்.

டம்மி செய்தியறிக்கை இப்படித் தொடங்கும் : ஆகாசாவனி..ஆத்தா வழிக்கும் சானி..செய்திகள் வாசிப்பது அடாமூக்கன் தம்பி கொடாமூக்கன்..

2. திரு.வரதராஜனுடைய குரல் : வயலும் வாழ்வும் மற்றும் செய்திகள் இது ரெண்டுமே தடைசெய்யப்பட்டிருந்த என் காதுகளில் இவருடைய குரலைக் கேட்ட பிறகே செய்திகள் மட்டும் நுழைய அனுமதித்தேன்.

 இன்னைக்கு செய்திகள் யாரு வரதராஜனா? அப்படீன்னு சப்தத்தை வைத்தே தின்னையில் இருக்கும் பெரிசுகள் சொல்லிவிடும்.தேவையான இடத்தில் அழுத்தங்கள்,தேவையான முகபாவங்களுடன் ( இன்னைக்கு மாதிரி விமான விபத்தைப் பற்றி பேசும்போது பெப்சோடன்ட் விளம்பரம் மாதிரி சிரித்துக்கொண்டல்ல)  கொடுத்து வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே.

இவர் K.பாலச்சந்தரோட சீரியல்களில் கூட கொஞ்ச நாள் தலைகாட்டினார்.

இதே வகையில் செய்திகளுக்காவே என் மனதில் இடம்பிடித்தவர்கள் என்று ஷோபனா ரவி,நிஜந்தன்,பாத்திமா போன்றோர்களைக்கூறலாம்.

3. சூலூர் கணேஷ் : அப்படியே அவருடைய குரலிலேயே நம்மைத் தூக்கி தன்னோட கையில் பொத்தி வச்சுக்குவார். சனிக்கிழமை காலைகளில் 8.30க்கு கோயமுத்தூர் வானொலி நிலையத்தில் வாரம் ஒரு நாடகம் ஒலிபரப்புவார்கள். அதில் பெரும்பாலும் ஒரு குரலாக அல்லது குறைந்தளவான எண்ணிக்கையுள்ள குரல்களே இடம்பெறும்.இந்த ஒரு குரல் மற்றும் குறைந்தளவு எண்ணிகையுள்ள குரல்களில் இரண்டு மூன்று குரல்களை சூலூர் கணேசே பேசுவார். அந்த குரலில் முழு நாடகத்தையும் அவர் வாசிக்கும் விதத்தை நாள் பூராவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அதுவும் சில சமயங்களில் ஒரு சில வசனங்களுக்கிடையில் இளையராஜாவோட புல்லாங்குழலிசையை பயன்படுத்துவார்கள். மோர் சாதத்திற்கு கடிச்சுக்கிட்ட பச்சமிளகாய் மாதிரி அவ்வளவு பொருத்தமாக இருக்கும். அதெல்லாம் நம்ம சின்ன வயசு போட்டாவை பார்க்கிறமாதிரி அத்தனை பரவசமானது.

4. தென்கச்சி கோ.சுவாமிநாதன் : இவரைப் பற்றி நான் பெரிசா சொல்ல வேண்டியதில்லை.அனேக பேருக்கு பாட்டிமார்கள் இல்லையென்ற குறையை நீக்கியவர்.அவ்வளவு கதைகள் சொல்பவர். சிரிக்காமல் இவர் சொல்லும் கதையைக்கேட்டு நம்மால் சிரிக்காமல் இருக்கவே முடியாது.

இவருடைய குரல் பழம்பெரும் நடிகர் திரு.தங்கவேல்(பேருக்கு முன்னாடி டமால் னோ டனார் னோ வரும்) அவர்களின் குரல் போலவே இருக்கும். திரு.தங்கவேல் இறந்த சமயத்தில் அவர் நடித்த படத்தில் “டப்பிங்” வேலை மட்டும் பாக்கியிருந்தது. அப்போது திரு.தென்கச்சியை வைத்துத்தான் அதை முடித்தார்கள்.

5. திரு. நாகூர் ஹணிபா : மிக கனமான குரல் அது.அதை உச்சஸ்தாயில் செவிக்கினிமையாக கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே.

சில குரல்களை என்னால் பெயரளவில் அல்லாமல் பாட்டளவில் மட்டுமே நினைவில் இருத்த முடிந்தது. அவை:

தட்டுங்கள் திறக்கப்படும்;கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கிடைக்குமென்றார். ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார்..எனக்குப் பொதுவாக கிறிஸ்துவ பாடல்கள் பிடிப்பதில்லை. சிறப்புக் காரணம் ஏதுமில்லை.ஆனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் பாடியவரின் குரலே. இந்தக் குரலை என்னால் very unique voice என்று மட்டுமே வர்ணிக்க இயலும்.

6.சீர்காழி சிவசிதம்பரம் : ஒரு அழுத்தமான எளிதில் கடந்து செல்ல இயலாமல் கட்டிப்போடும் குரல்.

தாமரை மலர்கள் ஆறு; அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு இந்தப் பாட்டை இவர் பாடினாரா இல்லை சீர்காழியா என்று அடிக்கடி குழப்பம் வரும்.

7. கிருபானந்த வாரியார் : இவரைப் பற்றி நான் என்ன சொல்றது.அதியெல்லாம் கேக்கிறதுக்கு கொடுத்து வெச்சிருக்கனும். சின்ன வயசில் நான் இமிடேட் பன்னிய ஒரே குரல் இவருடையதுதான். யார் வேனா ரொம்ப சுலபமா இவருடைய குரலை இமிடேட் பன்னலாம்.ஆனால் அவருடைய சொற்பொழிவுகள்,கருத்துகள்??.


8.ஷாகுல் அமீது ( ஹமீது ) : இந்த பெயரில் மொத்தம் ரெண்டுபேர்.

ஒருத்தர் சிலோன் ரேடியா மூலமா பிரபலமானவர்.எனக்கு இவர் சன் தொலைக்காட்சியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு மூலமே அறிமுகம். எளிதில் மறக்கமுடியாத குரல்.

இன்னொருவர் அதே சன் தொலைக்காட்சியில் வரும் “சென்ற வார உலகம்” என்ற நிகழ்ச்சியில் வருபவர்.ரொம்பவும் மென்மையான குரல். பூகம்பே வந்தாலும் இவர் சொல்ற விதத்தில் அது பூமாதிரி ஆகிற அளவுக்கு மென்மையான குரல்.

9. மு.க.முத்து : இவர் பாடின ஒரு பாட்டு ”எல்லோரும் கொண்டாடுவோம்”
 என்ற பாட்டு.இந்த குரலை அடையாளம் சொன்னவர் என் தந்தை. நல்ல வளமான குரல்.இவருடைய தந்தையின் சாயலில்லாத குரல். இவர் தமிழ் நாட்டின் அரசியல் உள்ளமட்டும் மறக்க முடியாதவரின் மகன்.

 மேலே சொன்னவையல்லாம் நான் பதின்மத்தில் கேட்ட குரல்கள். இப்போது சொல்வதெனில் இன்னும் இன்னுமென்று நிறைய உள்ளது.