வெள்ளி, 2 ஜூலை, 2010

இழப்பின் வலி




A place you leave is a place that lives forever.

மேல இருக்கறது இந்தப் படத்தோட ஒரிஜனல் கேப்சன்.ஆனா நான் இந்தப் படத்திறகு வேறொரு கேப்சன் ரொம்பப் பொருத்தமா இருக்குனு நினைக்கிறேன்.

”காதல் என்றால் உயிரையும் தருவேன்.சுதந்திரமென்றால் நான் காதலையே தருவேன்”. சொன்னவருடைய பேரு சட்டுனு ஞாபகத்திறகு வரலை.இந்த கேப்சனுக்கு ரொம்பவே பொருத்தமான படம் தான் “ THE LOST CITY”.

கதை நிகழும் இடம் கீயூபா.புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் பிடல்காஸ்டோரோ அதைத் தக்க வைப்பதற்கான சில கண்டிப்பான நடவடிக்களை மேற்கொள்ளும்போது,அதனால் சிதைவிற்குள்ளாகும் ஒரு அழகான குடும்பத்தை பற்றிய கதையிது.

பொதுவாக நம் உலகத்தில், எல்லாருக்கும் நல்லவனாகவோ,எல்லோருக்கும் நன்மைத் தரக்கூடிய செயல்னோ எவரையும்,எதையும் சொல்ல முடியாது. அதனால்தான் மாபெரும் இலக்கியங்கள, நிகழ்வுகள் அதனூடான மனிதர்களின் அலைகழிவுகள் என அவற்றைப் பற்றி மட்டுமே பேசுகிறதே ஒழிய தீர்வுகளைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாருக்குமான ஒன்றை எவராலும் சொல்ல முடியாது என்பதே உண்மையாகப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் நன்மைக்காக ஒருவனை பலி கொடுக்கலாம்,ஒரு ஊரின் நன்மைக்காக ஒரு குடும்பத்தை பலிகொடுக்கலாம்,ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரையே பலி கொடுக்கலாம் அப்படீனு சொன்னார் காந்தி.

ஆனால் தனியொருமனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் அப்படிங்கிறாரு பாரதியார்.

எதனால் இந்த வித்தியாசம்.என் அபிப்ராயப்படி,முன்னவர் ஆண்மீகத்தின் பாதையில் இருந்தவர்.பின்னவர் இலக்கியத்தின் பாதையில் இருந்தவர்.


பொதுவாக கலை எப்போதுமே பெரிதும் பேசுவது மனிதர்களையும், மனிதத்தையும்,இதற்கிடையில் ஊடாடும் அவர்களின் உணர்வுகளையுமே...

மனிதர்களையும்,அவர்களுடைய உண்ர்வுகளையும் நிராகரிக்கிற எதுவுமே கலையாகாது.

கலில் கிப்ரான் ஒருமுறை தன் காதலியிடம் : கடவுள் திடீரென்று உன் முன்னால் வந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாமே மறந்து போகப் போகுது..கடைசியா 5 வார்த்தைகள் மட்டும் உன்னோட ஞாபகத்தில் இருக்கும்,உனக்கு விருப்பமான வார்த்தைகளைக்கூறு அப்படீன்னு சொன்னா நீ சொல்லும் 5 வார்த்தைகள் என்ன? என்கிறார்.

கலில் கிஃப்ரானின் காதலி : வானம்,காற்று,பூமி..ம்ம் மீதி..அப்படீன்னு யோசிக்கிறப்ப கிப்ரான் டக்னு சொல்றார் நீ மற்றும் நான். ஏன்னா இந்த இரண்டும் இல்லைன்னா மேலே நீ சொன்ன மூன்று வார்த்தைகளுக்கும் அர்த்தமில்லை.

எவ்வளவு உயர்வானதெனினும்,எவ்வளவு பிரம்மாண்டமெனினும் அதை அதை அவ்வாறு உணர ஒரு உயிர் இருக்கும்போது மட்டுமே அது அர்த்தம் பெறுகிறது.

அதுபோலத்தான் நம்மில் ஆன்மா என்ற ஒன்றை இழந்துவிடும்பொழுதில் நம்மைச் சுற்றியுள்ளவற்றுக்கும் நமக்கும் அர்ததமில்லாமல் ஆகிறது.

அப்படிப்பட்ட அந்த ஆன்மாவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்தப் படத்தின் நாயகன் என்னன்னவற்றையெல்லாம் இழக்கிறான்.பெற்றோர்,வீடு,உறவு,தொழில்,நண்பர்கள்,வளர்ந்த இடம் என..தான் நேசித்த பழைமையுடனும்,உயிர்துடிப்பான இசையுடனும் திகழந்த நகரமில்லை,இப்போது தான் வாழ்ந்துகொண்டிருப்பது. தன்னுடைய தனித்துவத்தை இழந்து வரும் அந்த நகரில் நசுங்கிடப்பதைவிட தன்னுள் எல்லா அழகுடன் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையும்,அதனோடு ஒன்றியிருக்கும் தன் ஆன்மாவையும் உயிரோட்டத்துடன் வைத்திருப்பதற்காக அந்த நகரைவிட்டு வெளியேறுவதே சிறந்தது என்ற முடிவிற்கு வந்து அதனை செயல்படுத்துவதே கதைச்சுருக்கும்.

ஆண்டி கார்சியா( Andy García ): இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் நாயகன்.அவருடைய பதினாறு ஆண்டுகளின் கனவாம் இந்தப்படம்.





இனி படத்தில் என்னைக் கவர்ந்த சிலக் காட்சிகள் :

> ஹீரோவோட கிளப்பை அதிகாரிகள் மூட வருவார்கள்.அந்த சமயத்தில் ஹீரோவுக்கும்,அதிகாரிகளுக்கும் நிகழும் உரையாடலின் போது கிளப்பை மூடுவதற்கான காரணங்களில் அவர்கள் கையில் வைத்திருக்கும் சாக்ஸஸ் போனும் ஒரு காரணமாகிறது.(Castro, has declared the saxophone to be an imperialist instrument and forbids its use)

> கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஹீரோ அப்பா-அம்மாவிடம் விடைபெறும் காட்சி.தந்தைக்கும் மகனுக்குமான இடையிலான அந்த காட்சி அவ்வளவு நேர்த்தி.

> நீங்க ரொம்ப வருசமா ஆசை ஆசையா வளர்த்த அல்லது சொந்த மகன்/மகளுக்கு மேல நினைக்கிற ஒன்னை திடீர்னு ஒரு நொடியில் ஒருத்தர் உங்க முன்னாடி வந்து இனிமே இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமில்லே..இனிமே அது எனக்குமட்டுமே சொந்தம்னு சொன்னா உங்களுக்கு எப்படியிருக்கும்.அப்படித்தான் கரும்புத்தோட்டத்தில் தன் மாமாவிடம் ஹீரோவோட சகோதரன் சொல்ற காட்சி..அதுக்கப்பறம் நேரும் மரணம்..அதனால் உண்டாகும் குற்ற உணர்வு...

> அமெரிக்காவில் ஒட்டல் தொடங்கறதப் பத்தி தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வேலையைப் பற்றி அவர் சொல்ற காட்சி...

> சில வருடங்களுக்குப் பிறகு அதே ஓட்டலில் தரையை சுத்தம் செய்திகிட்டிருக்கிறப்போ, அவருடைய காதலி அவரைப் பார்க்க வர்ர அந்த காட்சி..அந்த சமயத்தில் அவங்களுக்குள்ளாற ஏற்படற அந்த உணர்வுகள்.. காதலியாக மட்டும் அறிமுகமானவள் இன்று அரசியலில் முக்கியபுள்ளி, நெடு நாள் இடை வெளி வேற.. அவகிட்ட எப்படி பழையபடி அதே அன்னியோன்னியமா நெருங்கிறது..மறுபடியும் காதலியின் அழைப்பு..மறுபடியும் இவரோட மறுப்பு..எந்த ஒரு பிரச்சனையும் இல்லை..இப்ப நினைச்சாக்கூட தன் காதலியோட புறப்பட்டுப் போய் அவளின் மூலமா ஒரு அதிகாரத்துடன் கூடிய ஆடம்பரமான வாழ்க்கையை வாழமுடியும்,எந்த தடையுமில்லை.ஆனாலும் காதலியைக் காட்டிலும் தான் தானாகவே இருக்கறதுதான் முக்கியம் அப்படீன்னு தன் காதலியின் அழைப்பை மறுபடி ஒருமுறை நிராகரிக்கிற அந்தக் காட்சி...ரொம்ப அபூர்வமான மனிதர்களால் மட்டும்தான் இது முடியும்.

இந்தக் காட்சியைப் பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் இந்தக்கருத்து எனக்கு மிக ப் பிடித்தால அதை அப்படியே இங்கே தருகிறேன-He(ஹீரோ) now realizes that Aurora(ஹீரோயின் பேரு) is Cuba: beautiful, alluring, but ultimately unattainable

> கடைசியா கையில் ஒரு ரோஜாவை வச்சுட்டு அப்படியே ஒவ்வொரு படியா ஹீரோ மேல ஏறரப்ப அந்த காட்சியின் பின்புலத்தில் ஒரு பாட்டுவரும்,அந்த பாட்டு..அதுக்கு அவர் கொடுக்கற அந்தச் சின்ன பேஸ் எக்பிரஸ்னோட கூடிய அந்த மூவ்மெண்ட்... அந்த காட்சிக்காவே படத்தை எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்...


>தனக்குப்பிரியமான அப்பவோட கைக்கடிகாரத்தைக்கூட எடுத்துப்போக அனுமதிக்காத கீயூபாவின் அதிகாரிகளை கோபமாகவும்,வாட்சை ஏக்கமாகவும் பார்க்கிற காட்சி..

மொத்தத்தில் என்னை மிகவும் கவர்ந்த,இம்சித்த மற்றும் சிலவற்றை யோசிக்க வைத்த படங்களில் இதுவுமொன்று.

1 கருத்து:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை.....

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்......