சனி, 11 ஜூன், 2011

நினைவுகள்



சிறகொடுக்க
வெட்டவெளியில்
அலையும் பறவைகள்

புழக்கமிழந்த

கட்டிடத்தில்
நுழைந்தவன்
முகத்தில் முட்டிமோதும்
வௌவ்வாள்கள்

கலக்கிய நீரையும்
துப்பிய எச்சிலையும்
மொய்க்கும் குளத்துமீன்கள்

காற்றின் திசைக்கு
ஒப்புக்கொடுக்கும்
மேகங்கள்

சந்தியில் கூடடையும் குரல்கள்

காற்றுலுக்கும் இலைகள்

கரையொதுங்கும் வண்டல்

காலடியில் கரையும் மணல்

போத்தல்களிலிருந்து பொங்கும் நுரை

உலரும் கரையீரம்

கல்லெறிந்த தேன்கூடு



வியாழன், 9 ஜூன், 2011

கோடிட்ட இடம்


அது அப்படித்தான் நிகழ்திருக்க வேண்டும்
நோக்கத்தினாலேயேப் பிழைத்த நோக்கமென
நிசப்தங்களே சப்தங்களாகிடும் இரவுகளென
காயம்பட்டுக்கொண்டோம்

காயப்படுத்திவிடக்கூடாதென
எல்லைகளில் நின்றுகொண்டோம்
மீறி விடக்கூடாதென
இடைவெளி நீட்டித்தோம் அழைப்புகள்
இடைஞ்சலாகிவிடக்கூடாதென
முகங்கள் மறைத்தோம் கள்ளத்தனங்கள்
கட்டவிழ்ந்துவிடக்கூடாதென
தவறுதலாகப் பிடித்திழுத்த
முனைக்கயிறுகளென

நம் உறவு
ஒரு
வாழ்த்தைக் கூட
பறிமாறிக்
கொள்ள முடியாமல்
தவறிக்கூட வந்துவிடாதா
உன் அழைப்பு
குழாயைத் திருகி
காத்திருக்கும் குழந்தையாய்..
பூர்திக்கு சொல்லொன்று எஞ்சியிருக்கும்
கவிதையாய்...