செவ்வாய், 8 ஜூன், 2010

மருமகன் வழி மான்மியம்???

சமீபத்தில்,அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிபவரின் திருமணத்தை ஒட்டி தூத்துக்குடி செல்ல நேர்ந்தது. .

திருமணம் 24ம் தேதி,திங்கட்கிழமை. எனவே ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ளதாக கழிக்கும் எண்ணத்தில் சனி இரவன்றே கிழம்பியாகிவிட்டது.

திருப்பூரில் வாரக்கடைசியிலும்,முக்கியமான  மூகூர்த்த தினங்கள் தமிழ்பண்டிகை தினங்களில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென்காசி போன்ற ஊர்களுக்குச் செல்வதற்கு பேருந்து பிடிப்பதில் உள்ள சிரமத்தை தனி பதிவாகவே எழுதலாம்.

பெயர்பலகையில்லாமல் வரும் பேருந்தில் கூட இடம்பிடிக்க அடிதடியாகயிருக்கும்.வண்டி கிளம்பும்போது மட்டுமே அந்த பேருந்து எந்த ஊருக்குச் செல்லும் என்று தெரியும்.

 டிப்போவைத் தாண்டியதுமே பயணிகள் நிரம்புவது மதுரைப் பேருந்தில் மட்டும்தான்!

ஒருவழியாக பேருந்தில் இடம்பிடித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் கால்வைத்தேன்.

காலை 5மணிக்குகூட தூத்துக்குடியின் வெப்பத்தை நன்றாகவே உணரமுடிந்தது.

காலை- திருச்செந்தூர்

மதியம் - ஒட்டப்பிடாரம்

இரவு      -  மணமகன் இல்லம்.

மேலே சொன்ன(கா,ம)நிகழ்ச்சி நிரல்களும் இனிதே கழிந்து, இரவு நிகழ்ச்சி நிரலான மணமகன் இல்லம் சேர்ந்தோம்.

பிரம்மச்சாரியின் கடைசித் தின உற்சாகம் கொப்பளிக்க ஒரு வித நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் மணமகன் வரவேற்றார்.

வழக்கமான வரவேற்பிற்கு பிறகு மணமகனுடன் அவர்களுடைய திருமணச்சடங்குகள் பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தேன்.

 நான் கேள்விப்பட்ட திருமணவழக்கத்திலிருந்து இவருடையது சற்று மாறுபட்டது. பொதுவாக பெண்ணெடுக்கும் முறைதான் - அதாவது மணமான பிறகு பெண் தன் பெற்றோரைப் பிரிந்து கணவனுடன் அவனுடைய இல்லத்திற்கு செல்லவேண்டும்.அதன் பிறகு அவள் முழுவதுமாக கணவனுடைய உறவிற்கும்,உறவுகளுக்கும் மட்டுமே பாத்திரமானவள். குழந்தை பேற்றிற்கும்( நகரமாகயிருந்தால்) ஏதாதவது வைபவங்களுக்கும் மட்டுமே தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல முடியும்.

ஆனால் மேற்சொன்ன நபரின் திருமணத்தில், இது அப்படியே தலை கீழ்.
இங்கு மாப்பிள்ளை எடுக்கும் வழக்கத்திலுள்ளது. திருமணத்திற்கு பிறகு மணமகன் தன்னுடைய மனைவியின் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். ஒன்று இவர் தன் மனைவியின் பெற்றோருடனோ (அ) அவர்களால் வழங்கப்படும் வீட்டிலோ தான் வசிக்க வேண்டும். ஏதாவது வைபவங்களுக்கு மட்டுமே தன் பிறந்தகம் செல்ல இயலும். இதுவே இவர்களின் சமூக வழக்கமாம்!!!.

கருத்துகள் இல்லை: