வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தேசாந்திரியுடன் ஒரு மாலை



வாசிப்பின் கைப்பிடித்து நடந்ததில் கற்றுக்கொண்டது, கொண்டிருப்பது நிறைய ஆயினும் வாசிக்க இன்னும் இருக்கிறது என்ற எண்ணமே சமயங்களில் உற்சாகமாகவும், பதட்டமாகவுமிருக்கிறது. பாலியங்களில் பற்றி எரிந்து மத்திமம் துவங்குவதற்கு முன்பே அணைந்த நெஞ்சின் கங்குகளில், இன்னும் அணையாமல் காட்டுத் தீ போல அவ்வப்போது பற்றிக்கொள்வது வாசிப்பும் அதனொட்டி வரும் தேடலும்தான்.வாசிப்பில் திறக்கும் தருணங்களைப் போல அலாதியானது வேறெதுவுமில்லை. இது மட்டுமே என்னை காதல் முதலான விசமங்கள் தீண்டாமல் பள்ளி காலம் தொட்டு இன்று வரையிலும் கவசமாயிருந்து காத்துக்கொண்டிருக்கிறது.

வாசிப்பின் படிப்படியான கட்டங்களிலும் அதன் வளர்ச்சியிலும் எனை ஆகர்ஸித்தவர்கள் நிறைய..அவர்களில் ஒருவரும் முக்கியாமானவரும் எஸ்.ரா. இவர் எனக்கு விகடன் தேசாந்திரி தொடர்கள் மூலமாகத்தான் அறிமுகம். ஆனால் படித்த சில நாட்களிலேயே நினைவில் நன்றாக பதிந்துவிட்டார். அந்த கால கட்டங்களிலிருந்து சமீபம் வரையில் அதிகமும், மகிழ்வுமாக படித்தது அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளுமே.

நியூட்டன் முன்னால் விழுந்த ஆப்பிள் போல, சில நண்பர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. தங்களிடமிருக்கும் படித்த புத்தகங்களை ஒரிடத்தில் பகிர்ந்து முறைப்படுத்தினால் ஒரு நல்ல நூலகம் கிட்டுவதுடன், எப்போதும் ஒரு புத்தகம் என்பதற்கு வாய்ப்பும், வசதியும் எளிதாகுமென்றார்கள். வழக்கம் போலவே முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒசி என்றால் எனக்கு ஒன்னு..எங்க அண்ணனுக்கு ஒன்று என்று வங்கிக்காசளார் கை புழங்கும் பணம் போல, நூலகத்தை கைப்பற்றிக் கொண்டேன். வாய்ப்பு நேரும் போது வாசிக்க வேண்டிய புத்தங்கள் என்று என்னிடம் எப்போதும் இருக்கும் பட்டியலில் இருந்த பெரும்பாலான புத்தங்கங்ள் இங்கிருந்தே எனக்கு கிடைத்துவருகிறது. (இது பற்றி நல்லொரு அறிமுகம் இங்கே

முதலிரண்டுப் புத்தகளுக்குப் பிறகு ஆரம்பித்தது எஸ்.ராவின் நாவல் வரிசை. நெடுங்குருதி, உப பாண்டவம், துயில் மற்றும் யாமம் என என்னை முழுமையாக உள்வாங்கிக்கொண்டது எஸ்.ராவின் நாவல் ஆளுமையே. வாசித்த இந்த நான்கு நாவலும் அதனதன் சாரத்தில் நிச்சயம் தீவிர வாசிப்பார்வமுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டியவை. கட்டுரைகளிளோ..சிறுகதைகளிளோ காணப்படும் எஸ்.ரா அல்ல நாவலில். அவர் எழுத்தில் தவறாமல் தொடர்ந்து வரும் காந்தலைப்போல அவரும் நம்முடனே வந்து கொண்டிருப்பார்.

உப பாண்டவம்: என்னை மிக அதிகம் கவர்ந்த நாவல் உப பாண்டவமே. மகாபாரதம் என்ற ஒரு இலக்கியம் போதும். சமுத்திரம் பார்ப்புதும் பாரதம் படிப்பதும் நிச்சயம் வேறுவேறு அனுபமல்ல. உப பாண்டவம் ஒரு ஒடம். அது மகாபாரத்தின் சில முக்கியத் தீவுகளை எளிதான வார்த்தைகளில் ஆழ்ந்த புரிதலில் நமக்கு அறிமுகப்படுத்தும். பாரதத்தை இலக்கியம் சார்ந்து அணுக உப பாண்டவம் நுழைவாயில். எனக்குத்தெரிந்து துரியோதனின் சகோதரர்கள் நூறு பேர்களின் பெயர்களையும் இதில்தான் நான் பார்த்தேன். ஆழ்ந்த புரிதலும், வாசிப்புமட்டுமல்ல,இரண்டும் இயைந்த மனவிரிவும், கடும் உழைப்புமிருந்தால் மட்டுமே உபபாண்டவம் மாதிரியான ஒரு இலக்கியம் சாத்தியப்படும். ஏனெனில் எண்ணிக்கையற்று பல தலைமுறைகளில் பிறவித்தொடர்பு போல வாய்வழியாக செவிவழியாக தொடர்ந்து வரும் பாரதத்தில் முற்றிலும் புதிய இடங்களை தொட்டுணரச்செய்வது அத்தனைக்கத்தனை எளிய காரியமல்ல.

நெடுங்குருதி- விளையாட்டுப் பருவத்தில் நாம் ஆசையாக அள்ளித்தின்ற மண்ணை, தலைமுடியிழுத்து முரட்டுத்தனமாக அழுத்திப்பிடித்து இந்த வயதில் திணிப்பதுபோல மூச்சு முட்டுகிறது அவர் மொழி விரியும் இந்நாவலின் காட்சிகளில். மூர்ககம்,பிடிவாதம் மட்டுமே ஒரு வாழ்க்கையாக விரிந்து கிடக்கிறது இந்நாவல். புதைகுழி போல மனிதர்களை உள்ளிழுத்து அதன் சுவடே தெரியாமல் விரிந்து கிடக்கும் வீதியும், அதனூடே நுழையும் அனல்காற்றின் மூச்சும் நம்மை திணறடிக்காமல் இருந்தால் நிச்சயம் நம் அனுபவ சேகாரத்தில் விட்டுப்போன ஒரு பகுதியிருக்கிறது

துயில்- நோய்மை,குணம் என விரியும் நாவல் பேசுவது உடல் நோய்மை அதன் குணம் பற்றிமட்டுமல்ல. நோய்மையென்றே அறியப்படாத ஏராள விசயங்களும் அதன் விளைவுகளின் உக்கிரங்களும். இரண்டு புள்ளிகள் மீது லாவகமாக மொழியிழுத்துவரும் அனுபவங்களின் உக்கிரங்களை எந்த விருப்பு, வெறுப்புமின்றி சன்னல் வழி காட்சியாய் விரித்துகொண்டே போகும். நம்மால் எளிதாக கடந்து வர முடியாத விசயங்களில் சிக்க வைத்துவிட்டு தள்ளி நின்று கொள்ளும் மொழி இவருடையது.

யாமம்- வாசனைத்திரவியத்தின் பெயர்.எல்லோர் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் வியாப்பித்திருக்கும் ஒரு வெற்றிடம் போன்றது இந்த யாமம். இந்நாவலை படிக்கையில் இருள் ஒரு துளியாய் ஆகும் ஒரு காட்சி ஒயாமல் மனதில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இப்போதும் கூட யாமம் என்ற நாவல் என்னளவில் ஒரு துளி இருளின் படிமாகவே என்னுள் தங்கியிருக்கிறது. இதை என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.இதில் யாமம் ஒரு ஊடு பா..மொழி நெய்ததை புரிந்துகொள்ள முடியாமல அலைமோதிக் கொண்டிருக்கிறேன். ஜெ.மோ மீபொருண்மை என்று இந்நாவல் பற்றி ஒரு பெரிய கட்டுரையை எழுதுகிறார். அனேக விசயங்களில் விமலாதித்த மாமல்லனிடமிருந்து நான் மாறுபட்டாலும் அவர் சொன்னதுபோல ஜெ.மோ கட்டுரையை வாசிப்பதைக் காட்டிலும் யாமம் நாவல் வாசித்தது எளிதாகவேயிருந்தது.

தீவிர எழுத்தாளர்கள் ஒரு காலத்தில் உக்கிரமாக தொடங்கி அதே உக்கிரத்தோடே கைவிடப்படும் சிறு பத்திரிக்கை பற்றி எஸ்.ரா '' சிறு பத்திரிக்கை நடத்தாவன் முழுமையான எழுத்தாளராக முடியாது என்று ஒரு தொல்நம்பிக்கை தமிழ் இலக்கியத்தில் எப்போதும் உண்டு'' இதன் படி தன் முன்னோடிகள் வழி எஸ்.ரா அட்சரம் என்ற இதழை ஆரம்பித்து சுமார் 5 ஆண்டுகாலம் தமிழுக்கும், தீவிர இலக்கியத்திற்கும் தன்னால் இயன்ற பங்களிப்பை அளித்துள்ளார். இதற்கு முன்னரே இவர் கோணங்கியோடு சேர்ந்து ''கல்குதிரை'' என்ற என்ற இதழையும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். அனேகமாக தமிழ் இலக்கிய உலகில் நானறிந்த வரையில் கோண்ங்கியோடு அதிக நெருக்கமுள்ளவர் எஸ்.ரா. என்றே அறிகிறேன். நிறைய இடங்களில் கோணங்கியோடு கழிந்த பொழுதுகளை இவர் பகிர்ந்துள்ளார்.வாழ்வின் உக்கிரத்தருணங்களில் வெடிச்சிரிப்புகள் வரவழைக்க கூடியதுமானது இருவரும் இணைந்திருந்த நாட்கள்.

தமிழ் இலக்கிய உலகில் தேசாந்திரி என்ற சொல் இவருக்கே நன்கு பொருந்தும்போலும். அவ்வள்வு பயணங்கள் பகிர்தல்கள். ஜெ.மோ.வின் பயணமெல்லாம் பெரும்பாலும் ஒரு தீவிர நோக்கம் கொண்டதாகவே இருக்கும். ஆனால் எஸ்.ராவுக்கோ பயணம் மட்டுமே தீவிர நோக்கமாக இருக்கும் போல.
கவிதை தவிர இலக்கியத்தின் அனைத்து பங்களிப்புகள் சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படம், திரைப்பட நூல், குழந்தைகள் நூல், நாடகத்தொகுப்பு, நேர்காணல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு, தொகை நூல் என்று கால மாற்றத்திற்கேற்ப தற்போது இணையத்திலும் செயல்பட்டு மிக பரவலான கவனம் பெற்றவர். இவருடைய பரவலான பிரபலத்திற்கும், புகழுக்கும் மற்றொரு முக்கிய காரணமாக நான் அவதானிப்பது விமர்சனம் என்ற ஒரு துறையை கவனமாக யாரும் கவனிக்கா வண்ணம் இவர் தவிர்த்து வருவதும் கூட என்பது என் அவதானிப்பு

மேற்கண்ட என் சிறு குறிப்புகள் கண்ணைக் கட்டிக்கொண்டு கையால் எதையும் தொட்டுணர்வது போலவே. ஆனால் கையால் தொட்டுண்ர்வதை காதுக்கருகில் ஒருவர் நின்றுகொண்டு சொன்னால் இன்னும் எளிதாக உள்வாங்கலமல்லவா..ஆம் சேர்தளம் நண்பர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வை நான் அவ்வாறே உணர்கிறேன். வாய்ப்பிருக்கும் அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை இனிதாக்க வேண்டுமென சேர்தளம் நண்பர்கள் சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.


சனி, 11 ஜூன், 2011

நினைவுகள்



சிறகொடுக்க
வெட்டவெளியில்
அலையும் பறவைகள்

புழக்கமிழந்த

கட்டிடத்தில்
நுழைந்தவன்
முகத்தில் முட்டிமோதும்
வௌவ்வாள்கள்

கலக்கிய நீரையும்
துப்பிய எச்சிலையும்
மொய்க்கும் குளத்துமீன்கள்

காற்றின் திசைக்கு
ஒப்புக்கொடுக்கும்
மேகங்கள்

சந்தியில் கூடடையும் குரல்கள்

காற்றுலுக்கும் இலைகள்

கரையொதுங்கும் வண்டல்

காலடியில் கரையும் மணல்

போத்தல்களிலிருந்து பொங்கும் நுரை

உலரும் கரையீரம்

கல்லெறிந்த தேன்கூடு



வியாழன், 9 ஜூன், 2011

கோடிட்ட இடம்


அது அப்படித்தான் நிகழ்திருக்க வேண்டும்
நோக்கத்தினாலேயேப் பிழைத்த நோக்கமென
நிசப்தங்களே சப்தங்களாகிடும் இரவுகளென
காயம்பட்டுக்கொண்டோம்

காயப்படுத்திவிடக்கூடாதென
எல்லைகளில் நின்றுகொண்டோம்
மீறி விடக்கூடாதென
இடைவெளி நீட்டித்தோம் அழைப்புகள்
இடைஞ்சலாகிவிடக்கூடாதென
முகங்கள் மறைத்தோம் கள்ளத்தனங்கள்
கட்டவிழ்ந்துவிடக்கூடாதென
தவறுதலாகப் பிடித்திழுத்த
முனைக்கயிறுகளென

நம் உறவு
ஒரு
வாழ்த்தைக் கூட
பறிமாறிக்
கொள்ள முடியாமல்
தவறிக்கூட வந்துவிடாதா
உன் அழைப்பு
குழாயைத் திருகி
காத்திருக்கும் குழந்தையாய்..
பூர்திக்கு சொல்லொன்று எஞ்சியிருக்கும்
கவிதையாய்...

செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஒரு மொக்கை....

சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு :

டேய் ஊரு வுட்டு ஊரு வந்த உனக்கே இவ்வளவு இருந்தா, இந்த ஊர்க்காரன் எனக்கு எவ்வளவு இருக்கும்.நீங்க வந்து அதை இதையும் பண்ணி பொன்னை ஏமாத்தி கூட்டிப்போய் கல்யாணம் பன்னீபீங்க..நாங் அப்படியே கையை ----------வச்சு வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போன்னு நினைச்சிட்டியா..நீ மட்டும் ஒரு அப்பனுக்கு,அம்மாவுக்குப் பொறந்திருந்தா கூட்டிப் போடா பார்க்கலாம்..

டேய் இவ்வளவு தூரம் வந்ததுக்கப்பறம் நான் இனி விடறதா இல்லை..உன்னோடத் தங்கச்சியா நான் கட்டறண்டா உன்னால ஆனதைப் பார்த்துக்கோ....

சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு :

இந்த ஊர்ல தான் அண்ணன்,தங்கச்சியா பழகனாக் கூட தப்பா நினைக்றாங்கக்கா..சரஸ்வதியக்கா அம்மாகிட்ட  பாத்திரம் கழுவிகிட்டே சொல்லிட்டிருந்தாங்க.....

சம்பவத்தன்று :

காலையில் :

ஊரே பரபரப்பா இருந்துச்சு..சுரேஷ் அண்ணன் சொன்னது மாதிரியே சரஸ்வதியக்காவை கூட்டிட்டு ஒடிப்போயிட்டராம்...அந்தக்கவோட சொந்தக் காரங்கெல்லாம் ஆளுக்கொரு பக்கம் தேடிட்டுருக்கறாங்க....

முற்பகல் :

 ஒடுனவுங்களை புடுச்சுட்டாங்களாம்..திருமூர்த்தி மலைக்குத்தான் போயிருக்கறாங்க...சரஸ்வதியக்காவோட அண்ணனுக்கும் இடம் தேரிஞ்சு போச்சு..மொத்தமா அந்தக்காவோட ஊர்காறங்க எல்லோரும் வேன் எடுத்துட்டு அங்க போயிருக்கறாங்க....

பிற்பகல் :

சுரேஸ் அண்ணன் தாலி கட்டிடாராமா.. ஆனா சரஸ்வதியக்காவோட அண்ணன் அதை அத்து வீசிட்டு எல்லோரும் சேர்ந்து சுரேஸ்-ஐ போட்டு அடி பின்னி எடுத்துட்டாங்க...போலிஸ் ஸ்டேசன்ல வேற பொன்னை சுரேஸ் அண்ணனும் அவரோட பிரண்சும் சேர்ந்துதான் தூக்கிட்டுப் போயிட்டாங்க, அப்படீன்ன்னு கம்ளெய்ன் கொடுத்திட்டாங்க...

மாலை :

ரெண்டுப்பேரையும் போலிஸ் டேசனுக்கு கூட்டிட்டுப் போய்டாங்க..சுரேஸ் அண்ணனை மட்டும் டேசன்ல வெச்சுட்டு சரஸ்வதி அக்காவை அவங்க அண்ண்னோட அனுப்பிச்சுட்டுங்களாம்...

சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து:

சுரேஷ் அண்ணன் குடியிருந்த வீட்டுமுன்னாடி வந்து நின்ன ஆட்டோவிலிருந்து அவரை இரண்டு பேரு கைத்தாங்கலா இறக்கி கூட்டிட்டிப் போனாங்க..முகம் பூராவும் அங்கங்க கருப்பு ,கருப்பா கந்திப் போய் மாம்பழத்துல வண்டு போட்ட ஒட்ட மாதிரி.

சம்பவத்திற்கு பிறகு மறுபடியும் இரண்டு நாள் கழித்து :

 ஆட்டோ சுரேஸ் அண்ணன் வீட்டு முன்னாடி வந்து நின்னுது.  அதிலிருந்து ஒரு ஏட்டையா எறங்கி, அண்ணனை வெளில வரச் சொன்னார். அண்ணன் வெறும் மேலோடயே வெளியே வந்தப்பதான் அவரோட உடம்புல வரி வரி சிவந்துகிடந்தது தெரிஞ்சது...

டேய்! போய் சட்டையை போட்டுட்டு வா...போலாம்..

எங்ககீங்க...

மாமியார் வீட்டுக்கு...

பொன்னையும் வரச்சொல்லுங்க...

டேய்...த்தா நான் என்னை மாமா வேலையா பார்க்கிறேன்..ஒழுங்கா டேசனுக்கு வந்து ஒரு கையெழுத்தைப் போட்டுட்டு வந்துரு...

ஏங்க என்னை மட்டும் கூட்டிட்டுப் போயி கையெழுத்து வாங்கிறீங்க.. பொன்னும்  ஆசைப்பட்டுதான் எங்கூட ஒடி வந்துச்சு..அதையும் வரச் சொல்லுங்க...

அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..இப்ப நீயி ஒழுக்கமா ஆட்டோல வந்து ஏற்றய்ய...இல்ல அடிச்சி இழுத்துட்டுப் போகட்டுமா...

பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் தைரியப்படுத்த அண்ணன் பேசமா போய் ஆட்டோல ஏறிட்டார்....

அதே நாளின் மாலை :

ஆட்டோல சுரேஸ் அண்ணன் திரும்பி வந்தார். அடுத்த நாள் காலைல அவரை ஊருக்கு அனுப்பி வச்சுட்டாங்க..பொன்னையும் அவங்க சொந்தக்காரங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க.....

அதுக்கப்பறம் ஒரு வாரம் ஊர்ல எங்கத் திரும்புனாலும்  இதைப் பத்தியே பேசிட்டிருந்தாங்க...அப்புறம் அப்டியே வேர வேர பிரச்சனை வர இதை மறந்துட்டாங்க...

கொஞ்ச நாளைக்கப்பறம் சரஸ்வதியக்காவுக்கு கல்யாணம் அப்படீன்னு கேள்விப்பட்டேன்....

 இரண்டு வருசத்துக்கப்பறம் சுரேஸ் அண்ணனுக்கு வேறொரு பொன்னைப் பார்த்துக் கட்டி வச்சுட்டாங்க...அப்படீன்னும் சொன்னாங்க....

அதுக்கப்பறம் ஒருவருசம் கழிச்சு புருசனும் பொண்டாட்டியுமா சுரேஸ் அண்ணன் எங்க ஊருக்கு மறுபடியும் வந்தார்.அந்தக்காவும் நல்லத்தான் இருந்தாங்க..இருந்தாலும் சரஸ்வதியக்கா மாதிரி இல்லை....

சுரேஷ் அண்ணனும் பழைய மாதிரி இல்லை.முதல்ல இருந்ததைவிட  ரொம்ப இளைச்சுப்போயிருந்தார்.பழைய உற்சாகம்,சுறுசுறுப்பு இல்லை.ஒழுங்கா வேலைக்குப் போறதில்லை.மொத்தத்தில் ஒப்புக்கு வாழ்ந்துட்டிருக்கிறது மாதிரியிருந்தார்.

சரஸ்வதியக்காவோட வாழ்க்கையும் ஒன்னும் சரியில்லைன்னு..அவங்க புருசன வுட்டுட்டு வேற யார்கூடவோ இருக்கறதாவும் கேள்விப்பட்டேன்..

இவங்களைப் பிரிச்சுவச்சவங்க அதுக்கப்பறம் இதைப் பத்தியெல்லாம் கவலப்படாம அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்கப் போயிட்டாங்க...

ஆனா இந்த பிரச்சனைக்கப்பறமும் ஒடிப் போ(ற)னவங்க எண்னிக்கையும் மட்டும் குறையவில்லை...என்ன அவங்களோட பெத்தவங்க அப்புறம் சொந்தக்காரங்க அவங்களோட அணுகுமுறை மட்டும் ரொம்ப மாறிருச்சு...

அதுக்கான காரணங்கள் பின்வருமாறு....

1.ஒடிப்போனவங்கள தேடிக்கண்டுபிடிச்சுக் கூட்டிவந்து போலிசார் மூலியுமா பிரிக்கறதுக்கு ஆகுற செலவுகள் ( சிம்பிளா ஒரு கல்யாணத்தையே நடத்திரலாம்)

2.பொன்னோட குடும்பச்சூழல்,பையோனோட கூடுதல் விசயங்கள்

3. ஏற்கனவே நடந்த மாதிரி இவங்களைப் பிரிச்சு புதுவாழ்க்கையை அமைச்சுக்கொடுத்து அது நல்ல போகும்ங்கிறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னொன்னு அவங்களாத் தேடிக்கிற வாழ்க்கைகிறதனாலா கணவன் மனைவிக்குள்ள இருக்கற அன்னியோன்யமும்,வாழ்ந்துகாட்டனும் அப்படீன்னு ஒரு வெறியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்குது.

4.சமயத்துல மானம் போயிடக்கூடாது அப்படீங்கறதுனால பெத்தவங்களே அரசல்,புரசலாக் கேள்விப்படற விசயத்தை வச்சு பிள்ளைகளுக்கு மொறையா கல்யாணத்தை பன்னிவச்சாறாங்க...

5.பெத்தவங்க வெறுத்துப் போயிடராங்க..அபூர்வமா சில பெத்தவங்க புரிஞ்சுக்கிறாங்க...

என்ன சொல்றது..

மகற் தந்தைக்கு ஆற்றும்நன்றி தானாகவே
 துணை தேடிக் கொளல்

வியாழன், 20 ஜனவரி, 2011

ஒரு பகல் பொழுது..

ஆகாயம்:

காகிதத் துனுக்குகளில்
சவரக்கத்தியில் வளித்த
நுரை பொதி மேகங்கள்...

ஜன்னல் வழி:

குனிந்து குனிந்து
வளர்ந்து...வளர வளர
குனியும்
 ஊசியிலை நெடுமரம்.......


அறை :

வாசனைத்திரவியமாய்
வியாபித்திருக்கும் வெளிச்சம்


அறைக்கு பின்புறம்:

ஞாபக வெளியைத் துலாவும்
பறவையின் குரல்


தெரு:

விமோச்சனமில்லாத சாபம்
தந்தவன் நினைவில் படும்பொழுதெல்லாம்
குரைக்கும் நாய்....


மனம்:

எதாவது ஒன்றைத் தொட்டு 
அறுந்தும், தொட்டுத் தொடர்ந்தும்
இருக்கும்  யோசனைகள்

வியாழன், 11 நவம்பர், 2010

ஒரு சிறு குறிப்பு....

வழக்கமான உற்சாகங்கள் ஏதுமின்றி ஒரு விடுமுறை தினமாக மட்டுமே கழிந்தது  தீபாவளி. பண்டிகைகள்,பிறந்த நாள்கள் மற்றும் ஏதாவது முக்கிய நிகழ்வுகள், நன்றாக சாலையில் ஒடிக்கொண்டிருக்கும் வாகனம் திடீரென்று நம் கட்டுப்பாட்டை மீறித் இடவலமாக திமிறும்,  நிறுத்தி பின் சக்கரத்தை உற்று நோக்கும் செயலைப் போல் வாழ்கையின் கடந்த நாள்களை நிதானித்து நோக்குவதற்கு வாய்பளிக்கிறது....

இந்த வருடப் பண்டிகை போனவருட பண்டிகையையோ அல்லது அதற்கு முந்திய எதாவது ஒரு பண்டிகையையோ நினைவுபடுத்துகிறது.

அதிலும்  தீபாவளிப் பண்டிகைகள் மிக விசேசமானைவையாகும்.. .புத்தாடை,பலகாரங்கள்  இரண்டுமோ (அ) எதாவது ஒன்றோ என ஏனைய பண்டிகைகளிலிருந்து விடுபட்டு தனித்து நிற்கும் தீபாவளியின் சிறப்பு பட்டாசுகளினால்.....

கையில் பத்துவிரல்களிருப்பதே ஆரம்பள்ளிகளின் கணக்குகள் தாண்டி பண்டிகைத் தேதியை வாரங்களாக,நாட்களாக எண்ணி மகிழத்தான்....

மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிடும் பால்ய கால தீபாவளி...ஒருமாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது விடலைத் தீபாவளி..வரப்போகும் மனைவியைப்போலவோ,வந்து நிற்கும் காதலியைப் போலவோ,அழைப்பிதழ் தந்து செல்லும் தோழியைப்போலவோ இருக்கிறது விடலை பதுங்கி, முதிர்வின் நிழல் தெரிபடத் துவங்கும் இந்த வயதுகளின் தீபாவளி...

வாழ்க்கையின்,பண்டிகைகளின் சலிப்புகள் பற்றி படராதவர்கள் பாக்கியாவான்கள்...ஆனால் எனக்கோ புத்தகம் தொடங்கி,படம்,இசையென பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது சலிப்புகளின் மேலேறி வர..

எதிலும் பங்கேற்காமல் ஒரு வேடிக்கையாளானாய் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து ரசித்து தாண்டிப் போக பழகிக்கொண்டிருக்கிறேன்.. எதிலும் பட்டுக்கொள்ளாமலும், பங்கேற்காமலும் இருப்பதென்பது அவ்வளவு சுலபமானதாகவில்லை...

ஒரு புள்ளியைச் சுற்றியுள்ள சாத்தியப்பாடுகள் அதிக ஆர்வத்தையும் தரும் அதற்கீடான சலிப்பையும் தரும்..அவரவர் மனோநிலையை பொறுத்தது இது.

 அணிந்திருக்கும் கண்ணாடிகளுக்கேற்ப மாற்றங்கள் பெறும் பிம்பங்கள் மட்டுமே எல்லா நாட்களும்...

வெள்ளி, 1 அக்டோபர், 2010

வரிக்கு வரி
அழுத்தம் திருத்தமாக
இரண்டு முறைகள்
சப்தமாக தன் கவிதையை வாசிப்பது
அவர் வழக்கம்..

நாட்களின் நகர்வில்
அவருடைய சப்தங்களே  

கவிதைகளாயின...
                ****
விசேச தினங்கள்

1)
தர நினைத்து
தரத் தயங்கி
தரயேலாமல்
நினைவாய் வைத்துக்கொள்ளும்
வாழ்த்து அட்டைகள்
வாங்குவதற்கு...

2)
வாழ்த்துக்கள் நுரைத்துப்
பொங்கும் விசேச தினங்களில்
என் விசேங்கள் நுரைப்பதோ
உன் வாழ்த்துகளில்

புதன், 1 செப்டம்பர், 2010

மொட்டை மாடியில் நின்று ரசித்த மாலைப் பொழுதுகள்......

வானம் அன்றாடமாய்

மாலை நிகழ்வுகளின் குவியம்..

பறவைகளென

சிறகு கிளைத்த எழுத்துக்கள்

கூடிப் பிரியும் வெளியில்...

சமயங்களில் வார்த்தைகளாகவும்

சமயாசமயங்களில் வரிகளாகவும்...

கவிதை மனதில் கருக்கொள்ளும்

தருணம் நினைவில் அலைமோதும்.

உயரப் பறக்கும் புள்ளினங்களெல்லாம்

கருப்பாய் தெரிவது மாயமோ

மயக்கமோ....

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....


இளைத்த எண்களில் 
விரல் படும்போதிலெல்லாம்
உதிர்ந்த இலையென
ஒட்ட இடம் தேடி அலையும் ப்ரியத்தில்
கனத்த நினைவுகள்..
*
முடிச்சவிழ்ந்த ரகசியகங்கள்
ஒவ்வொன்றும் பூமிக்கு
வருகிறது மழையென்று....
*
ஏற்ற இறக்கத்தில் 
உன் சிரிப்பைப் போலவேயிருக்கிறது
நான் அடிக்கடி கேட்கும் வயலின் இசை
பின்னான சந்திப்புகளில்
நீ சிரிக்கையில் வயலின்
இசைக்கிறதா! வயலின் இசைக்கையில்
 நீ சிரிக்கிறாயா! பூசணிக்காயைச்
சுற்றும் எறும்பென
குழப்பத்தில் வீழும் பிரக்ஞை!

சனி, 14 ஆகஸ்ட், 2010

முதல் அலைபேசியிலிருந்து.......





அரை நாழிகைக்கும் குறைவான
ஒரு ஒலி உயிர்பிக்கலாம்
ஒரு பிரியத்தை,காதலை,நட்பை...
ஒரு முழுப்பேச்சில் இழக்கவும்
நேரிடலாம் 
அதே பிரியத்தை,காதலை,நட்பை..
            
*

நீ..நானென்று முறைவைத்த
அழைப்புகளில் தளும்பிய நாட்கள் போய் 
இப்போது 
நீயா? நானா? என்று  நீள்கிறது வெறுமனே
சில்லறை விசயங்களில்
முரண்பட்டு

      *

இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த 
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை..
                     
   *   

சனி, 7 ஆகஸ்ட், 2010

முடமான நம்பிக்கை!!!

அது நிச்சயம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் விடுப்புத்தினமான ஒரு  சனிக்கிழமையாகத்தானிருக்க வேண்டும்.

நான் நூலகத்திற்கு வந்திருந்தேன். ”இளைய பாரதம்” என்ற பெயரில் நாங்கள் புதிதாகத் தொடங்கியிருந்த கையெழுத்துப்பிரதியின் அன்றைய மாதத்தின் பிரதியை நூலகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அல்லாதோர்களின் பார்வைக்கு வைந்திருந்தேன். இந்தப் பிரதியில் புதிதாக வாசிப்பவர்களின் கருத்துக்களை அறிவதற்காக  சில வெற்றுப்பக்கங்களை இதழின் பின்புறத்தில் இணைத்திருந்தோம்.

நூலகம் திறந்த (9.30) ஒரு மணி நேரம் கழிந்து (10.30) வந்த ஒருவர், எல்லாப் பத்திரிக்கைகளையும் புரட்டியபோது “இளைய பாரதம்” அவரின் பார்வையை இடறியிருக்கவேண்டும். எடுத்து சிரத்தையுடன் (இந்த வார்த்தையை நானே சேர்த்துக்கொண்டேன்) வாசிக்கத்தொடங்கினார்.வாசித்து  முடித்ததும்   வெற்றுப் பக்கத்தை உபயோகமுள்ளதாக்கினார். 

அவர் சென்று சிறிது நேரம் கழிந்தபின் என்ன எழுதியிருக்கிறார் என்ற ஆவல் மேலெழ படித்துப் பார்த்தோம்.ஆம்! அவர் வாசித்துக்கொண்டிருக்கையில் கையெழுத்துப்பிரதியின் முழுமுதல் உரிமையாளர் என்னுடன் இணைந்து கொண்டார். உங்களின் கவனம் முழுவதும் வாசிப்பவரின் மேலேயேயிருந் -ததால் நான் இதை அப்போது உங்களுக்குச் சொல்லவில்லை.

சரி விசயத்திற்கு வருவோம். அவர் அந்த கையெழுத்துப்பிரதியில் இருந்த மூட நம்பிக்கை கட்டுரையைப் பற்றித்தான் கருத்துச் சொல்லியிருந்தார். நிற்க! இந்த இடத்தில் மூடநம்பிக்கை என்று நான் எதைச் சொல்லுகிறேன் என்பதை தெரிந்துகொள்வதற்காக உங்கள் ஆவல் அதிகரிப்பது இயல்புதான். ஒரு விசயத்தை நேரிடியாக சொல்வதைக் காட்டிலும் ஒரு குட்டிக்கதை மூலமாகவோ (அ) சம்பவம் மூலமாகவோ சொல்வதுதான் சிறந்த உத்தி என்று அன்றைய பிரபல இதழ்களின் வாயிலாகவும், சில படங்கள், செய்திகள், நண்பர்கள் ,ஆசிரியர்கள் இத்தனைக்கும் மேலாக என் சுய அனுபவத்தின் வாயிலாகவும் நான் அறிந்திருந்தேன். இத்தனை இத்யாதிகளின் மூலமாக அறிந்த ஒரு விசயம் நிச்சயம் உண்மையாக இருக்கவேண்டும் அவ்வாறு இல்லையெனில் உண்மையை ஒத்திருக்க வேண்டும் தானே. சரி! விடுங்கள்! நாம் மறுபடியும் விசயத்திற்கு வருவோம்.

அந்த மூட நம்பிக்கை பற்றிய கதையைச் சொல்வதற்கு என்னை நீங்கள் அனுமதித்தால்தான்,வெற்றுத்தாளை நிரப்பிய அந்த பரிச்சையமில்லாத  நபரின் கருத்தை நீங்கள் அறிந்துகொள்ள இயலும்.உங்கள் அமைதியையே, ஆமோதிப்பாக கொண்டு கதையைத் துவக்குகிறேன்.

அதற்குமுன் நீங்கள் இரண்டு விசயங்களை உணரவேண்டும்.1) யாரும் வேண்டுமென்றே கதை சொல்வதில்லை,வேண்டும்போது சொல்கிறார்கள்.2) இடைச்செருகல் இல்லாமல் வாழ்க்கையுமாகாது, இலக்கியமுமாகாது . எனவே என் இடைச்செருகலை நீங்கள் பொறுத்துதான் ஆகவேண்டும்.

 அயர்ச்சியின் அறிகுறிகள் வெளிப்படையாகவே உங்கள்முகத்தில் தென்படுவதால் நான் கதைக்கு வருகிறேன்.

கதை இப்படி ஆரம்பிக்கும் : அந்த வீட்டில் ஒரு பிராமண தம்பதிகள் வசித்து வருகின்றனர். பிரமாணம் என்ற பதம் உங்களுக்கு நெருடலாக இருந்தால் தம்பதியர் என்று வைத்துக்கொள்ளுமாறு கோரப்படுகிறீர்கள்.அந்த  தம்பதியரில் கணவனுக்கு மட்டும் மூச்சு சம்பந்தமான ஒரு ரகசியப் பயிற்சித்  தெரியும்.

அதாவது நம் மூக்கில் இரண்டு நாசிகள் இருந்தாலும் ஒரு சமயத்தில் இடது நாசியிலோ (அ) வலது நாசியிலோ தான் காற்று வெளிச்செல்லும்.நீங்கள் உடனே மூக்கில் விரல் வைத்துப் பார்ப்பது தெரிகிறது(இதற்கு நீங்கள் உங்கள் ஆட்காடி விரலைப் பயன்படுத்தவேண்டும்). இதைப் பற்றி இன்னும் நிறைய விளக்கம் வேண்டுமானால் ஏதாவது யோகசானம் பற்றிய புத்தகத்தில் துலாவினார்களானால் கிடைக்கும். நேரத்தைக் கணக்கில் கொண்டு இப்போது நாம் கதைக்கு வருவோம்.

பொதுவாக ஒரு காரியமாக வெளியே செல்லுகையில் காற்று வலது நாசியில் வெளிவந்தால் காரியம் சித்தியாகும். அந்த பிராமணர் தேவையானபோது காற்றை வலது நாசியில்  வெளியேற்றும் பயிற்சியைக் கற்றிருந்தார்.

 மிக சிரமப்பட்டு, வேறுயாருக்கும் தான் கற்றுத் தருவதில்லை என்ற நிபந்தனையுடன் தான், தன் குருவிடமிருந்து அவர் அப்பயிற்சியைக் கற்றுக்கொண்டார். எப்படியோ இதனை மற்ற யாருக்கும் தெரியாமல் இவ்வளவு காலம் பயன்படுத்தி வந்தார்.பலன் பெற்று வந்தாரா இல்லையா என்பது பற்றித் தெரியவில்லை.

வழக்கத்தின் படி ஒரு நாள் வெளியே செல்ல வாசல் வருகையில் அவருடன் அவர் மனைவியும் வந்துவிட்டார். இவர் செல்வது  முக்கியமான காரியமாக இருந்திருக்கும் போலும். இப்போது அவர் நாடியில் கைவைத்துப் பார்க்கிறார்,காற்று இடது நாசியில் வருகிறது. எங்கே நீங்கள் சொல்லுங்கள் ஏற்கனவே நான் முன்பே கூறியது படி காரிய சித்திக்கு எந்த நாசியில் காற்று வரவேண்டும்?

ஆஹா..அப்படித்தான்.சரியாகச்சொன்னீர்கள்! வலது நாசியில்தான்!நீங்கள் கவனமுடன் படித்து வருகீறீர்கள் என்று நினைக்கிறேன்.உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் பத்து பைசா பெறாத இந்த விசயத்தை இப்படி வளைத்து வளைத்து எழுதிக்கொண்டு வருகிறேன்.
 பத்து பைசா என்றா சொன்னேன்.மன்னிக்கவும்! உடனே திருத்திக்கொள்ளு -ங்கள்   பத்து பின்னூட்டம் (அ) பத்து ஓட்டுகள் கூட பெறாத விசயம் என்று.சரி! நான் உங்களை மேலும் சோர்வுக்குள்ளாக்க விரும்பவில்லை,கதைக்குத் திரும்புகிறேன்.


எங்கே விட்டேன்.ஆங்..வலது நாசியில் காற்று வந்தால்தான் காரியம் நடக்கும். ஆனால் பிரமாணருக்கோ இடது நாசியில் காற்று வருகிறது. அவருக்குத்தான் மூச்சுப் பயிற்சித் தெரியுமே,காற்றை வலது நாசிக்கு மாற்றிக்கொண்டால் போச்சு.பிரச்சனை அதுவல்ல மனைவி பக்கத்தில் இருப்பது தான்.பயிற்சியின் போது பார்த்துவிட்டால்.சும்மாவே நோண்டி^2 க் கேட்பவள் இதையும் நோண்டி^2க் கடைசியில் நம் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்-துவிட்டால்.. அய்யோ! அப்புறம் அந்த பயிற்சிக்குண்டான பலனிருக்காது...சரி இவளை எப்படி உள்ளே அனுப்புவது..

தாகமாகயிருக்கிறது என்று தண்ணீர் கேட்டால் நிச்சயம் உள்ளே சென்றுதான் ஆகவேண்டும் (அவருக்கேன் இந்த யோசனையை வந்தது என்று நீங்கள் நினைக்கலாம்!!..ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு யோசனை என்று ஒரு உல்டாதான் நேக்குத் தோன்றது) , அதற்குள் பயிற்சியை முடித்து விடலாம்..சரியென்று தன் மனைவியிடம் தண்ணீர் கேட்டார். மனைவிக்கு குழப்பம்.உள்ளேயிருந்து தானே வருகிறார் வரும்போதே தண்ணீர் அருந்தி விட்டுத்தான் வந்தார்!!..பிறகேன் மறுபடியும் தண்ணீர் கேட்கிறார்..திடீரென்று அவளுக்கொரு யோசனை தோன்றி வாசலில் எட்டிப் பார்த்தாள்..அப்போது அவ்வழியே ஒரு கைம்பெண் வந்துகொண்டிருந்தார். கணவன் மேல் அவளுக்கு சந்தேகம் வந்ததா.. இல்லையா.. என்று தெரியவில்லை.அவளும் உள்ளே சென்று ஒரு தம்ளரில் நீர் கொண்டு வந்தாள்.சீக்கிரமாக வந்துவிட்டதால் கணவனால் பயிற்சியை முடிக்க முடியவில்லை.அதனால் ஒரு குவளை நிரம்ப (சொம்பு என்ற வார்த்தையை விவேக் முதல் பதிவர்கள் வரை குறியீடாக மாற்றிவிட்டதால் குவளை என்ற சொல் சொம்பின் பதிலி ) தண்ணீர் கொண்டு வருமாறு பணிக்கிறார்.

மனைவியின் அந்நேரத்து முகக்கோணலையும், முறைப்பையும், முனக லையும்  சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என் முகவரியைத் தேட ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதால் நான் கதையையே தொடர்கிறேன்.

உள்ளே செனற மனைவி  குவளை நிரம்ப நீர் கொண்டு வரவும் அவர் சுவாசத்தை வலது நாசிக்கு மாற்றும் பயிற்சி முடியவும் நேரம் சரியாகயிருந்தது. வந்த தண்ணீரை வேண்டாம் என்று சொன்னால் நடக்கப் போகும் விபரீதங்களைக் கற்பனை செய்து பார்த்தவர் நீரை வாங்கி ஒரு மிடறு.


இது போலவே மனைவி வாசல் வரும்போதெல்லாம் நீர் கேட்டே (ஏற்கனவே வெற்றி பெற்ற யுக்தி) சமாளித்திருக்கிறார்.ஆனால் இவர் நீர் கேட்கும்போதெல்லாம் வாசலை எட்டிப் பார்த்த மனைவிக்கு வேறு^2 விசயங்கள் கண்ணில் தென்பட்டிருக்கிறது.


 வழக்கத்தின் தொடர்ச்சியில் ஒரு முறை பிராமணர் வெளியில் செல்லும் போது மனைவியும் வாசல் வந்திருக்கிறார். இந்த தடவை பிராமணர் சற்று முன்னதாகவே மூச்சைப் பரிசோதித்துவிட்டார். வலது நாசியில்தான் வெளி யேறிக்கொண்டிருந்தது. எனவே மனைவிடயிடம் விடைப் பெற்றுக் கொண்டு வாசல் இறங்க, அதற்குள் மனைவியிடமிருந்து ஒரு அபாயக்குரல் அவரை நிற்கச்சொல்லி. கணவர் நின்று,திகைக்க, விடு^2 வென்று உள்ளே சென்று திரும்பிய மனைவியின் கையில் குவளை தழும்ப நீர்.ஆச்சரியத்துடன் இந்த முறை கணவர் வாசலைப் பார்க்கையில் தலையில் விறகுடன் ஒரு மூதாட்டி அவரை கடந்து சென்றிருக்கிறார்.”சரிதான்” மனதிற்குள் சொல்லி,வாயில் ஒரு நமுட்டுச் சிரிப்பை வைத்து வந்த தண்ணீரை வாங்கி ஒரு மிடறு..

ஆக வெளியில் செல்ல வாசல் இறங்குகையில் எதிரில் கைம்பெண், தலை விறகுச்சுமை, பூனை, எருமை போன்ற இத்யாதிகள் வரும்போது நீர் வாங்கி அருந்திச் செல்லும் வழக்கம் இவ்வாறுதான் நிலைபெற்றது. எனவே அது வெறும் மூட நம்பிக்கையே! அதை விட்டொழிப்போம் அறிவியல் தளத்தில் சிந்தித்து தெளிவு பெறுவோம்! செயலாற்றுவோம்!! என்று அந்தக் கட்டுரை முடிந்திருந்தது..

உங்களைப் போலவே, படித்தவுடன் ம்ஹிம்..இதுக்குத்தான் இந்த அலட்டலா..அட அப்படியா...உஸ் அப்பா...அட ராமா..இது நாலுவரில சொல்லியிருக்கப்படாதோ...கொய்யால இவ்வளவு நேரம் கவனமாப் படிச்சிட்டு வந்த எங்களை கேனயனாக்கிட்ட பாத்தியா- அப்படீன்னு மேலே நூலகத்தில் இந்தக் கட்டுரையைப் படிச்சவரும் பேசாம புலம்பிட்டு போயிருந்தார்னா இந்த பதிவுக்கான அவசியமோ , அதையும் நீங்க கொட்ட படிக்க வேண்டிய அவசியமோ நேர்ந்திருக்காது....

ஆனால் அவர் அன்று எழுதிவைத்துவிட்டுப்போன அந்த கருத்து ( பதிவுப் பாஷையில் பின்னூட்டம் ) பெவிக்கால் போன்று மனசில் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவர் பதிந்திருந்தது இதுதான் :

”அந்த பிராமணர் மேற்க்கொண்ட அந்த சுவாசப் பயிற்சியை எப்படி செய்வது என்று கொஞ்சம் விளக்கிச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்”- சோ & சோ ..அப்ப அனானிமஸ் அவ்வளவு புழக்கத்தில் இல்லை போலும்.



உங்களைப் போலத்தான் நானும்,இளைய பாரதத்தின் உரிமையாளரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசாமல் சின்னதாய்  ஒரு சிரிப்பை மட்டும் பறிமாறிக்கொண்டோம். ஒன்று மட்டும் உறுதிசெய்துகொண்டேன். அந்த மாதிரியான கட்டுரைகளை எழுதுவதில்லை அப்படியே எழுதினாலும் கருத்துச் சொல்லும் பக்கத்தைச் சேர்ப்பதில்லை.....நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்???..

வெள்ளி, 30 ஜூலை, 2010

கொஞ்சம் பெரிய ஒண்ணு

ஈரானுக்கு மஜீத் மஜ்டி- ன்னா இந்தியாவிற்கு பஷீர். இரண்டுபேருடைய கால கட்டங்கள் , வயது, கலாச்சாரம், வெளிப்பாட்டின் ஊடகம் இவைகளில் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் இரண்டுபேரும் இந்த உலகத்தை, வாழ்க்- கையை - அதன் வியப்பை, ஏமாற்றத்தை, பரிசை, திருப்பத்தை, கற்றுத்தரும் பாடத்தை, தன்னைச் சுற்றியுள்ளவர்களை, தன்னுடைய சுழலை என எல்லா- வற்றையும் பார்ப்பது குழந்தைகளின் வழியாகத்தான். குழந்தைகளின் வழி அவர்கள் சித்தரித்துக் காட்டும் உலகிற்கு ஈடு இணை ஏதுமில்லை.


எதனால் என்று தெரியவில்லை.நிகழ்காலம் என்னதான் இன்பமாக இருந்தாலும், கடந்த காலம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாவிடினும் மனமென்னவோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாய்ந்துகொள்வது அந்த நினைவுகளில்தான்.

பஷீரின் ”பால்யகால சகியை”ப் படிக்கையில் ஒரு டைம் மெஷினில் ( Time machine ) ஏறி என்னுடைய பால்யத்தை மறுபடியும் ஒருமுறை சென்று பார்த்து -விட்டு வந்தது போல் இருக்கிறது. இத்தனைக்கும் பாலியம் தொடர்பான பகுதிகள் இரண்டு மூன்று தான் இருக்கும்.இருப்பினும் அந்த நடையின் தொனி தொடும் தூரம் அத்தகையது. மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் ஒரு சிறு துளையி -டுவதைப் போன்றது அவருடைய நடை.போகிற போக்கில் மாட்டின் மூக்கில் மூக்குப் பொடியை தூவி விட்டுச்செல்லும் சிறுவனின் குறும்பைப் போன்ற நடை பஷீருடையது.


சுகறா,மஜீத்..பால்யகாலம் தொட்டே மிக அனுக்கமான நண்பர்கள். ஆனால் இதில் ஆர்ச்சயம் என்னவென்றால் அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த வைரீகளாக இருந்தார்களென்பதுதான்.

குழந்தைகளின் மனவோட்டத்தை, குறும்புத்தனங்களை,உடல்மொழியை மற்றும் முக்கியமாக அவர்களுடைய பரிபாஷையை அழகாகத் தந்தவர்களில் என்னளவில் என்னால் சுட்ட இயலுவது இருவரைத்தான்.ஒருவர் பஷீர், இன்னொருவர் சுரா.

பொதுவாக பாலியங்களில் நாம் பயன்படுத்தும் சில சொல்லாடல்களையும் அது சுட்டும் பொருள்களையும் நினைத்துப் பார்த்தால் மிக வேடிக்கையாக இருக்கும். சில சமயம் நம்முடைய அந்த பாலியச் சொற்களுக்கு அர்த்தமே இருக்காது.

// மஜீது வெற்றிக்களிப்புடன் அர்த்தமில்லாத ஒரு சத்தம் கொடுத்தான்,ஜீக் ஜிகு! ஜீக் ஜிகு! // பஷீரின் பெரும்பாலான கதைகளில் இந்த மாதிரி குழந்தைகளின் வெற்றிக்களிப்பு சில அர்த்தமில்லாத சொற்களைத் தான் கொண்டிருக்கும்.

// ஆகாயமும் பூமியும் அறியும்படியாக அவன் கம்பீரமாக அறிவித்தான் “எனக்கு மரம் ஏறத்தெரியுமே’’//

இந்த வரிகளுக்கு முன் இருவருக்குமிடையே ஒரு சிறு போட்டி வரும். சுகறாவை ஏதாவது ஒருவகையில் கூசிச் சிறுக்க வைக்க வேண்டும் என மஜிது, தன் வீட்டைப் பற்றி சொல்லுகிறான்,தன் தந்தையின் பணியைப் பற்றி சொல்லுகிறான்.ஆனால் சுகறாவோ எல்லாவற்றுக்கும் பளிப்பு காட்டி விடுகிறாள். இந்த இடம் கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற கதையை நினைவுபடுத்தியது.

பள்ளியில் ஒரு முறை மஜீதுக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி வருகிறது.1+1=?. மிகச்சிரமப்பட்டு ஒரு விடையை யோசிக்கிறான், கொஞ்சம் பெரிய ஒண்ணு.

இரண்டு நதிகள் ஒன்றாகச் சேர்ந்து, பெரிய நதியாக சேரும்போது இரண்டு தனித் தனி ஒன்றுகள் சேர்ந்து பெரிய ஒன்றாகத் தான் வரவேண்டுமல்லவா...


ஆனால் பஷீரின் ஆசிரியர் என்ன அத்தனை சொற்பமானவரா..மஜீதுக்கு நாலைந்து அடிகள் கொடுத்து எல்லாவற்றையும் சேர்த்து ஒரே பெரிய அடியாக நினைத்துக்கொள்ளச் சொல்லிவிடுகிறார். வாழ்க்கையும் இப்படித்தானே!! ஒரு பெரிய கோட்டை பக்கத்தில் வரைந்து ஏற்கனவேயிருக்கும் கோட்டைச் சிரிதாக செய்வது போல் , ஏதாவது ஒரு பெரிய சோகத்தை கொண்டுதானே இன்னொரு சோகத்தை சிறிதாக்கிக் கொள்ளமுடிகிறது.

பொதுவாக கலைஞர்கள் மஜிதாகயிருக்கும்போது..யதார்த்த வாழ்க்கை அவனுடைய ஆசிரியரைப் போல இருக்கிறது...

சுகறாவைக் கரைக்க மஜீது சொல்லும் அந்த வாக்கியம் எவ்வளவு அழகாக எந்த பண்டிதத்தனமும்,மேதாவித்தனமும் இல்லாமல் வெறும் குழந்தையின் குரலாகவே ஒலிக்கிறது.

//நான் ஒண்ணுமே செய்யாம இருந்தாலும்,வாப்பாவும்-உம்மாவும் சும்மா என்னை பறண்டவும்,நுள்ளவும் செய்தாங்க!சும்மா அவுகளுக்கு இது ஒரு சுகம்.இனி நான் மரிச்சுப் போனா அவுங்கா சொல்லுவாங்களா இருக்கும்.அந்த பாவப்பட்ட மஜீது இருந்தான்னா ஒரு நுள்ளாவது குடுக்கலாமென்று//

பாட்டி வீட்டுக்கென நான் கேரளம் பயனிக்கும்போதெல்லாம் எங்கள் வீட்டருகே ஒரு ஆறு ஒடும். , சிறு ஒடைப் போலத் தொடங்கி, சற்று பெரிதாகி,மறுபடியும் சிறிதாகி,மறுபடியும் பெரிதாகி கொஞ்ச தூரத்தில் ஒடையாகி..ஒரிடத்தில் தேங்கி பெரிய ஆறாக மாற்றம் பெற்று..சிற்ச் சில இடங்களில் பரந்த மணலில் நுண்ணமான ஒரு வெள்ளிக்கம்பியெனவோ, வைரக்கம்பியெனவோ மாறி இறுதியில் ஏதாவது ஒரிடத்தில் ஒரு பெரிய நீர்பெருக்குடன் கலக்கும்.

வாழ்க்கையும் , பால்ய கால சகியும் இப்படியே.

விக்ரமாதித்யன் கவிதையொன்று வரும்....

பெண்கள் என் பிரதான பலிபீடம்
நான் ஆடாய் அரிவாளாய்

பலிபீடமாய் மாறி மாறி
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

மஜீதும் கிட்டத்தட்ட அவ்வாறே..கைகூடாவிட்டாலும் கைவிட முடியாத நிலையில் பால்யால காதலின்,ப்ரியத்தின் செறிவு கொஞ்சமும் குறையாத சுகறா..அவ்வளவு வறுமையிலும் தன் மகனின் செழிப்பிற்கு வாடும், கிடைப்- பதில் முக்கால் வாசியை மகனுக்கென பங்கு வைக்கும் ,வறுமையைக் காட்டிலும் மகனின் முக வாட்டத்திற்கு வருந்தும் தாய், அண்ணனை எவ்வகை யிலாவது மகிழ்ச்சிப்படுத்த அவன் அமைக்கும் தோட்டத்திற்கு தன் கவலைகள், ஏக்கங்களை மறைத்து நீருற்றும் சகோதரிகள் என...அவனும் மாறி,மாறி வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

ஆனால் பஷீருடைய இலக்கியத்தில் வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கும்.எந்த அதி உன்னதங்களும் பஷீருடைய மாந்தர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு விதி வழியாகத்தான்.அதனால் அவருடைய கதையில் சுபங்களையெல்லாம் எதிர் பார்க்க இயலாது. எனவே வெளிநாடும் செல்லும் ஒரு அனுக்கமான நண்பனின் பிரிவு, திடீரென்று வரும் நண்பனின் மரணம் குறித்த தகவல், காதலித்தவள் வேறொருவனை கரம் பிடிக்கும்,பிடித்த நிகழ்வு , நள்ளிரவு மழைச் சப்தம்-காலையில் அதன் தடயம் என இவற்றில் ஏதாவதொரு உணர்வைத்தான் பஷீரின் கதைகளின் முடிவில் என்னால் உணர முடிகிறது.

சுகறாவுக்குப் பிறகும் தாய் மற்றும் சகோதரிக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

சற்றே பின்னகர்ந்து மஜீது மட்டும் தன்னுடைய தந்தையை சற்று அனுசரித்து இருந்தானெனில்......


காதல் மோதலில்தான் ஆரம்பிக்கும் என்று எந்த முட்டாள் சொன்னானோ எனக்கு தெரிந்த பெரும்பாலான நல்ல நட்புகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி நட்புகள் எல்லாம் மோதலில்தான் ஆரம்பித்தது. அதில் பெண் தோழிகளும் அடக்கம். யாரை நான் கல்லூரிப் பிரச்சனையின் போது முதலில் அடித்தேனோ அவனும் நானும் தான் கட்டிபிடித்து அழுதோம் கல்லூரி இறுதி வருடத்தின் கடைசி தினத்தில்...

எந்த பெண்ணை நான் காயப்படுத்தினேனோ அவளிடமிருந்துதான் முதல் ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம் என் கைக்கு வந்தது.

மன்னிக்கவும்...

தற்போது என்னிடம் கவிதை

எதுவும் இருப்பில் இல்லாததால்

நீங்களாகவே ஒன்றை கிறுக்கிகொள்ளவும் என் சார்பாக...

என்று எழுதியதைப் படித்துச் சிரித்த அந்த பரிச்சையமில்லாத தோழி இப்போது எங்கே இருக்கிறாளோ..

Be a tower,stand for ever என்று எழுதித் தந்தவள் என்ன செய்துகொண்டிருக்- கிறாளோ..

”இரு இரு உன்னை டீச்சர்கிட்ட சொல்லி என்ன செய்யறேன்னு பாரு” என்று உடைந்த வளையல்களோடு சென்றவள் புகார் செய்ததாக ஒரு முறைகூட அந்த டீச்சர் என்னை அழைத்ததேயில்லை...


வைக்கம் முகம்மது பஷீர் :

நான் இவரைப் பற்றி படித்தது மற்றும் கேள்விப்பட்டது வரையில் இவரை சில வரிகளில் சித்திரமாக்கிவிடலாம்.

தாழ்வரம் சற்றே சரிந்த வீடு..
முற்றத்தில் மங்குஷ்தான் மரம்.
அதன் நிழலில் ஒரு சாய்வு நாற்காலி..
நாற்காலியில் சாய்ந்த ஒர் உருவம்தான் பஷீர்...

ஒரு மழை நாள் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வீட்டின்பின்புறம் சென்றிருக்கிறார் பஷீர்..அப்போது வானில் மின்னல் வெட்டியதில் யாரோ தன்னை படம் பிடிக்கிறார்கள் என்று போஸ் கொடுத்தார் என்று இவரைப் பற்றி ஒரு பகடி மதராசப் பட்டினம் படம் பார்க்கையில் என் நினைவிற்கு வந்தது.இது உண்மையா (அ) இட்டுக்கட்டப்பட்ட பகடியா என்று தெரியவில்லை.


1908 ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி தலையோலப் பரம்பில் பிறந்தார். 10 ம் வகுப்பு ப்டிக்கும்போது வீட்டை விட்டு ஓடியவர்.இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப்போராட்டத்தின் ஒரு பகுதியான உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப்போராட்ட வீரர் எனும் நிலையில் மதராஸ்,கோழிக்கோடு கோட்டயம், கொல்லம் மற்றும் திருவனந்தபுர சிறைகளில் தண்டனைகளை அனுபவித்தார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச்செயல்பட்டார்.அமைப்பின் கொள்கை இதழாக உஜ்ஜீவனம் எனும் வாரப் பத்திரிக்கையும் துவங்கினார்.

பத்தாண்டு காலம் பாரதமெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்கா,அரேபியா போன்ற நாடுகளிலும் சுற்றித்திரிந்தார். இக்காலகட்டங்களில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று கூறலாம்.இந்த காலகட்டத்தில் சில ஆண்டுகள் இமயமலைச் சரிவுகளிலும்,கங்கை நதிக்கரையிலும் இந்துத்துறவியாகவும், இஸ்லாமிய சூபியாகவும் வாழ்ந்தார்.

மனைவி : பாபி பஷீர். மக்கள் : ஷாஹீனா, அனீஸ் பஷீர்.
1994 ஜீலை 5ம் தேதி காலமானார்.

”அம்மே உம்ம காந்தியை ஞான் தொட்டு ” என்று ஒடி வந்த பஷீரை “நான் பஷீரைத் தொட்டேன் தெரியுமா” என்று சுராவிடம் பகிர்ந்ததாக ஜெயமோகன் ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னை மிக கவர்ந்த எழுத்தாளர்களிர் பஷீர் மிகமுக்கியமானவர் என்று இவரைப் பற்றி ”புன்னகைகளின் பெருவெளி” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சீரிய வாசிப்பு பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டிய எழுத்தாளர் பஷீர். இவருடைய மதிலுகள் என்ற நாவல் மம்முட்டி நடித்து திரைப்படமாகவும் வந்துள்ளது.


மேலே உள்ள அவரின் வாழ்க்கை குறிப்பை கண்ணுறும்போதுதான் தெரிகிறது..
அவரும் புரட்சியாளாராக, எவற்றிலும் நிறைவுகொள்ளாதவராக எவ்வளவு தீவிரமாக திரிந்தாரோ அதை விட தீவிரமாக அமைதியாக அமர்ந்து மிகப் பெரும் படைப்புகளைத் தந்துள்ளார். அன்பில் நிறைந்தார் அதுவே பின் படைப்பாகியது.அதுவே அவரை இவ்வளவு காலம் கழிந்த பின்னும் நம்மைத் தொடுகிறது.

குளச்சல் மு. யூசுப்

இந்தக் கதையை மேற்கூறிய படி நான் உள்வாங்குவதற்கு முக்கிய காரணம் இவர்தான்,இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர். பொதுவாக மற்ற துறை -களின் மொழிபெயர்ப்பிற்கும்,இலக்கிய மொழிபெயர்ப்பிற்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. பின்னது சற்று சிரமமானது.சில சமயங்களில் அபாய -கரமானதும் கூட...பஷீரைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் புதிதாக வாசிக்கும் வாசகர்கள் பஷீரை- பஷீராகவே சென்றடைய வேண்டும்.இந்தக் கதையின் எந்த ஒரிடத்திலும் நான் பஷீரை தொலைக்கவேயில்லை. எனவே -தான் நான் இந்தக் கதையில் மீறப்பட்டிருக்கும் சமூகத்தின் நியதியையோ (அ) ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளையோ பற்றி பேசவில்லை.

காரணம் மழைக் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கும் ஆறு அதன் கரையை அதுவாகவே விரிவுபடுத்திக்கொள்கிறது. மனிதனின் முயற்சிகளனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு அதனிடம் சரணடைவதாகவே உள்ளது. வாழ்க்கை, சமூகம் அதைத்தொடர்ந்து வரும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.இதை பஷீர் அறியாதவரா என்ன?...


மு. யூசுப் - மொழிபெயர்ப்பு என்ற அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மேல் அனாசயமாக நடந்து கடந்திருக்கிறார்.

இதே புத்தகத்தைப் பற்றி அருமை நண்பர் திரு.முரளியின் பகிர்வு இங்கே..பால்யகால சகி

சனி, 24 ஜூலை, 2010

பொன்மாலைப் பொழுது ..

வெங்கட் சுவாமிநாதன் :

மகுடேசுவரனின் குரல் மிருதுவானது.பாசாங்குகள் அற்றது.பல ரூபங்களில் பல தொனிகளில் வெளிப்படுவது .

கல்யாண்ஜி :

இவருடைய கவிதைக்குரல் யாருடைய குரலையும் ஞாபகப்படுத்தாத எப்போதாவது கேட்கிற சீரியக்குரல்.

ஞானக்கூத்தன் :

இரத்தத்துடிப்புள்ளவை இவருடைய கவிதைகள்.




மேற்க்கண்ட கூற்றுகளுக்கு முற்றிலும் தகுதியான திரு.மகுடேசுவரன் அவர்கள், தொன்னூறுகளில் கனையாழியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தொடர்ந்து இன்றளவும் இயங்கிவருகிறார். ஏனெனில் கல்யாணத்திற்கு பிறகு கானாமல் போன படைப்பாளிகள் ஏராளமானோர் என்று திரு.சுந்தரராமசாமி ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு.மகுடேசுவரன் என் பக்கத்து ஊர்க்காரர்(திருப்பூர்). இவருடைய “யாரோ ஒருத்தியின் நடனம்” தான் ( 2002 ) நான் முதன் முதலில் படித்தது. (இதற்கு முன்பே “ பூக்கள் பற்றிய தகவல்கள்” “அண்மை “ என்ற இரு கவிதை தொகுதிகளும் வெளிவந்து அதன் மூலம் தமிழ் இலக்கிய சூழலில் பரவலாக அறிப்பட்டிருந்தார்) அப்போதிருந்தே இவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து, அதற்கு முயற்சித்து, ஒரிருமுறை நேரிலும் பார்த்துவிட்டேன். இது நடந்தது 2004-2005 கால கட்டங்களில்.

அப்போதெல்லாம் இலக்கிய ஆளுமைகளை, பிரபலங்களைச் சந்திப்பதில் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவன். எனவே இவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவேயில்லை.

இது எனக்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறிக்கொள்கிறேன். தமிழின் சமீபகாலத்தின் முக்கியக் கவிஞர், திரு.சுஜாதா அவர்களின் செல்லக்கவிஞர் இவருடன் நல்ல நட்பு இருந்திருந்தால் கவிதைப் பற்றிய என்னுடைய பார்வைகளில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனால் அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் திருப்பூர் வலைப்பதிவர் (சேர்தளம்) குழுமம் வரும் ஞாயிறு அன்று (25/7/10) இவருடைய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. http://tiruppur-bloggers.blogspot.com/2010/07/blog-post.html.

மேற்க்கண்ட சந்திப்பில் திருப்பூர் குழுமத்தின் ( சேர்தளம் ) உறுப்பினன் என்ற முறையில் எனக்கும் கிடைக்கும் இந்த வாயப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலிருக்கிறது.
இதைப்பற்றி திரு.பரிசல் அவர்களின் பதிவு : கவிஞருடன் ஒரு சந்திப்பு!

இவரைப் பற்றி எனக்குத் தெரிந்த சில குறிப்புகள் இங்கே :

> இவர் கவிதை மட்டுமல்ல இவரும் , இவருடைய குரலும் மிருதுவானதுதான் என்று திரு.சுப்ரபாரதி மணியன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ”கனவு” கூட்டத்தில் இவர் ஒருமுறை உரையாற்றியது போதுதான் தெரிந்தது.

> மேற்ச்சொன்ன கூற்றில் இவர் உண்மையிலேயே மிருதுவானவர்தானா!!! என்று எனக்கு ஐயம் ஏற்படுத்திய கூட்டம் : இவருடைய ”காமக்கடும் புனல்” புத்தக வெளியீட்டின் போது இருந்த இவருடைய தோற்றம்.ஏனெனில் அதற்கு முன்பு நான் அவரை சந்தித்தபோது அவருக்கு அவ்வளவு பெரிய மீசையில்லை.

இந்தக்கூட்டத்தின் இன்னொரு மறக்கமுடியாத சம்பவம் என்னுடைய இன்றைய ஆதர்சங்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான திரு.யுவன் சந்திரசேகரைச் சந்தித்தது.இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு எழுத திட்டம்.

அ.முத்துலிங்கம் ஒரு முறை பிரபலங்களுக்கு பிடித்த புத்தகம்,அது ஏன் என்ற முறையில் தொகுத்து வெளியிட்ட புத்தகம் “கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.” இது திரு.ஜெயமோகன் அவர்களால் ”மணல் கடிகை” என்ற புத்தகத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையின் தலைப்பாகும். இந்த ”மணல் கடிகை” எழுதியவர் திரு.எம்.கோபால கிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.ஆனால் இந்த புத்தக வெளியீடு நடந்தது மேற்ச்சொன்னக் ”காம கடும்புனல்” புத்தக வெளியீட்டின் போதுதான்.

> இவருடைய “யாரோ ஒருத்தியின் நடனம் “ என்ற தொகுதியில் என்னைக் கவர்ந்த சில கவிதைகள் :



கடைசிவரைத் தொடர்வேன்
என்பது ஐயமே
வளைவுகளிலும் சந்துகளிலும்
புகுந்துசெல்லும் உன்னை
*

இந்த மழையில்
குளிர குளிர நனைகிறேன்
வராமலே போகலாம்
இன்னொரு மழை
*

பொருட்படுத்தாதீர்கள்
தனது அறைச் சாளரத்தை
அகலத் திறந்து வைக்காதவன்
கூறும் அபிப்ராயங்களை
*
அடிவானம் தெரியாத சந்தில்
ஒரு பூச்செடியும்
இல்லாத வீட்டில்
ஒருவன் வசிக்க நேர்ந்தால்
அதைச் சாபம் என்க

*

முல்லையின் அமில மணமும்
மூத்திரத்தின் கார நெடியும்
கலந்த வாசனை
புணர்ச்சியின் வாசனை
அது நிறத்தால் நெருப்பு
குணத்தால் தண்ணீர்.
*

புணர்ந்து வெளியேறியவர்கள்
தாம் புத்தரும் சித்தரும்
*

புணர்ச்சிக்குப் பின்பு
சுருங்குகிறது கனிவு
தடிக்கிறது உத்தரவு

*

சமூக விதி இதுதான்
புணர்ந்து விட்டால்
மணந்துகொள் அல்லது
மணந்து கொண்டு
புணர்ந்துகொள்

*

நல்லறுவை செய்த
நனிமாது நண்பா கேள்
கள்ளக் கலவிக்குத் தோது

*

கள்ளப்புணர்ச்சி ஒன்று
ஊரறிந்துவிட்டது
சந்திப்பின் மறைவிடங்களில்
தேம்பி அழுகிறது
அவர்கள் விட்டுச் சென்ற
அன்பு

*

உறங்கும் குழந்தை
சிணுங்கி எழுந்து
முடித்துவைக்கட்டும்
கருத்தரிப்பில் முடியாத
மலட்டுத் தம்பதியரின்
புணர்ச்சி நாடகத்தை

*

வியாழன், 22 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

நாயொன்றின் மீது
பிரியம்...வீட்டினுள் என்பதால்
உயர்சாதியே தேர்வாகிறது..
முதலில் உணவு, பிறகு
உங்களின் மொழியென பழக்குகிறீர்கள்....
நாயும்  தவழ்கிறது நன்றாகத் தரையில்
கூட நாவில்.....
நாயும் பெரிசாச்சு..
வீட்டுக்கு காவலாச்சு ...
தெருவை மிரட்டலாச்சு...
கதவை நீக்கும் போதே குரைக்க,
நுழைந்த பின் முகர்ந்து பார்க்க,
வால் குழைத்து சினுங்க,
ஒலிக்குறிப்பிற்கேற்ப அமர,ஆர்பரிக்க
தோள்களில் முன்னங்கால்களை வைக்க
என நாயும் பழக்கிக்கொண்டது

தட்டுச்சோற்றுக்கும்,வயிற்றுப்பாட்டுக்கும்...

அவ்வப்போது கண்ணில் இடறியதால்
நீக்கியாகிவிட்டது வாலையும்...
இப்பொழுதும் இறக்கை கட்டுகிறது உங்கள்
பேச்சு நாய்கள் மேலான உங்கள் பிரியம் சுட்டி..

நின்று  முகர்ந்து,வெரித்து
”நாய்கள் ஜாக்கிரதையை”
ஈரமாக்கிவிட்டுப்போகும்
இன்னும் சுயம் திரியாத
நாயொன்று...

வியாழன், 15 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து

என் வீட்டருகே இரண்டு மரம்.
ஒன்று நெட்டைப் பாவாடைப் போட்ட
குட்டைபெண்னென...
எல்லா நிழலையும் இழுத்து இழுத்து
தன் காலடியிலேயே நிறுத்தி வைத்திருக்கும்.


மற்றது குட்டைப் பாவாடைப்போட்ட நெட்டைப்
பெண்னென..
கைக்குட்டையளவு நிழலில் ஒற்றைக் காலையூன்றி
எத்தி் நின்றவாறிருக்கும்...

சனி, 10 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து..
















கனவுகள் கலைந்து போகும்...

பளிச்சென மின்னலாய் வெட்டும்

மறுப்பின் நொடி..

இடிக்கத் தொடங்கும

இல்லாமல் போன இந்நிமிடங்கள்..

சட்டென தொடங்கும் ஞாபகமழை

நனையத்தொடங்கும்

மனம்..

ஈரத்தில் நனைந்த நிமிடங்கள்

வெடவெடக்கும் கடிகாரத்தில்..

நமுத்துப்போய்க் கிடக்கும்

ஆற்றாமைகள்..

தவறிய விரல் மீண்டு வாய்வருவதற்குள்

பிரளயத்தை புரட்டும் குழந்தையென

எல்லாமும் நிகழ்த்திவிட்டு்

மெல்ல திரை விலகும் நேரம்

கனுக்காலிலிருந்து

ஊமைக் கண் சிமிட்டும்...

உன்னை மட்டுமே ஞாபகமூட்டும்

பக்கத்துவீட்டுப் பெண்ணின்

கொலுசொலி..

சனி, 3 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

விரிவின் எல்லைக்கே

சாத்தியப்படும் கவிதையின்

திறப்பு போல

தினமும் உன் இதழ்கள்

மொட்டவிழ்க்கும்

ஒரு புன்னகையை

எனக்கென்று



*********************************


வெள்ளியில் மினுங்கும் மேகம்..

நீலத்தில் நிறையும் வானம்...

அந்தியில் கவிழும் ஏகாந்தம் (அ) துக்கம்...

இரகசியத்தின் இரைச்சலில் துவங்கும் இரவு..

மின்மினிகளாய் இரைந்து கிடக்கும் பூமியின் பொய்கள்...

வயிற்றுப்பாட்டுக்காரனின் வட்டிலாய் நிலா...

சூரியப் பூவிதழ்கள் அவிழும் காலை....

ஒற்றைக் கண்ணில் எல்லாமும் படம் பிடித்து மூலையில்

முடங்கும்...

பிரதிகள் தாவும் நாற்புறமும் இறக்கைகள் இன்றி

இரண்டு கண்களில் வியந்து,

முகரும் பாதைவழி விரையும் நாயாய்

அன்றையத் தேவைகளை இருத்தி நகரத்துவங்கும் வாழ்வு..

நேர்கண்டு இரசிக்க இருக்கிறது மூப்பென

அவ்வப்போது எழும் ஆசைகளையும்

கரையொதுக்கி போகும் புத்திஜீவிதம்...

*************

வெள்ளி, 2 ஜூலை, 2010

இழப்பின் வலி




A place you leave is a place that lives forever.

மேல இருக்கறது இந்தப் படத்தோட ஒரிஜனல் கேப்சன்.ஆனா நான் இந்தப் படத்திறகு வேறொரு கேப்சன் ரொம்பப் பொருத்தமா இருக்குனு நினைக்கிறேன்.

”காதல் என்றால் உயிரையும் தருவேன்.சுதந்திரமென்றால் நான் காதலையே தருவேன்”. சொன்னவருடைய பேரு சட்டுனு ஞாபகத்திறகு வரலை.இந்த கேப்சனுக்கு ரொம்பவே பொருத்தமான படம் தான் “ THE LOST CITY”.

கதை நிகழும் இடம் கீயூபா.புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் பிடல்காஸ்டோரோ அதைத் தக்க வைப்பதற்கான சில கண்டிப்பான நடவடிக்களை மேற்கொள்ளும்போது,அதனால் சிதைவிற்குள்ளாகும் ஒரு அழகான குடும்பத்தை பற்றிய கதையிது.

பொதுவாக நம் உலகத்தில், எல்லாருக்கும் நல்லவனாகவோ,எல்லோருக்கும் நன்மைத் தரக்கூடிய செயல்னோ எவரையும்,எதையும் சொல்ல முடியாது. அதனால்தான் மாபெரும் இலக்கியங்கள, நிகழ்வுகள் அதனூடான மனிதர்களின் அலைகழிவுகள் என அவற்றைப் பற்றி மட்டுமே பேசுகிறதே ஒழிய தீர்வுகளைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாருக்குமான ஒன்றை எவராலும் சொல்ல முடியாது என்பதே உண்மையாகப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் நன்மைக்காக ஒருவனை பலி கொடுக்கலாம்,ஒரு ஊரின் நன்மைக்காக ஒரு குடும்பத்தை பலிகொடுக்கலாம்,ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரையே பலி கொடுக்கலாம் அப்படீனு சொன்னார் காந்தி.

ஆனால் தனியொருமனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் அப்படிங்கிறாரு பாரதியார்.

எதனால் இந்த வித்தியாசம்.என் அபிப்ராயப்படி,முன்னவர் ஆண்மீகத்தின் பாதையில் இருந்தவர்.பின்னவர் இலக்கியத்தின் பாதையில் இருந்தவர்.


பொதுவாக கலை எப்போதுமே பெரிதும் பேசுவது மனிதர்களையும், மனிதத்தையும்,இதற்கிடையில் ஊடாடும் அவர்களின் உணர்வுகளையுமே...

மனிதர்களையும்,அவர்களுடைய உண்ர்வுகளையும் நிராகரிக்கிற எதுவுமே கலையாகாது.

கலில் கிப்ரான் ஒருமுறை தன் காதலியிடம் : கடவுள் திடீரென்று உன் முன்னால் வந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாமே மறந்து போகப் போகுது..கடைசியா 5 வார்த்தைகள் மட்டும் உன்னோட ஞாபகத்தில் இருக்கும்,உனக்கு விருப்பமான வார்த்தைகளைக்கூறு அப்படீன்னு சொன்னா நீ சொல்லும் 5 வார்த்தைகள் என்ன? என்கிறார்.

கலில் கிஃப்ரானின் காதலி : வானம்,காற்று,பூமி..ம்ம் மீதி..அப்படீன்னு யோசிக்கிறப்ப கிப்ரான் டக்னு சொல்றார் நீ மற்றும் நான். ஏன்னா இந்த இரண்டும் இல்லைன்னா மேலே நீ சொன்ன மூன்று வார்த்தைகளுக்கும் அர்த்தமில்லை.

எவ்வளவு உயர்வானதெனினும்,எவ்வளவு பிரம்மாண்டமெனினும் அதை அதை அவ்வாறு உணர ஒரு உயிர் இருக்கும்போது மட்டுமே அது அர்த்தம் பெறுகிறது.

அதுபோலத்தான் நம்மில் ஆன்மா என்ற ஒன்றை இழந்துவிடும்பொழுதில் நம்மைச் சுற்றியுள்ளவற்றுக்கும் நமக்கும் அர்ததமில்லாமல் ஆகிறது.

அப்படிப்பட்ட அந்த ஆன்மாவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்தப் படத்தின் நாயகன் என்னன்னவற்றையெல்லாம் இழக்கிறான்.பெற்றோர்,வீடு,உறவு,தொழில்,நண்பர்கள்,வளர்ந்த இடம் என..தான் நேசித்த பழைமையுடனும்,உயிர்துடிப்பான இசையுடனும் திகழந்த நகரமில்லை,இப்போது தான் வாழ்ந்துகொண்டிருப்பது. தன்னுடைய தனித்துவத்தை இழந்து வரும் அந்த நகரில் நசுங்கிடப்பதைவிட தன்னுள் எல்லா அழகுடன் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையும்,அதனோடு ஒன்றியிருக்கும் தன் ஆன்மாவையும் உயிரோட்டத்துடன் வைத்திருப்பதற்காக அந்த நகரைவிட்டு வெளியேறுவதே சிறந்தது என்ற முடிவிற்கு வந்து அதனை செயல்படுத்துவதே கதைச்சுருக்கும்.

ஆண்டி கார்சியா( Andy García ): இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் நாயகன்.அவருடைய பதினாறு ஆண்டுகளின் கனவாம் இந்தப்படம்.





இனி படத்தில் என்னைக் கவர்ந்த சிலக் காட்சிகள் :

> ஹீரோவோட கிளப்பை அதிகாரிகள் மூட வருவார்கள்.அந்த சமயத்தில் ஹீரோவுக்கும்,அதிகாரிகளுக்கும் நிகழும் உரையாடலின் போது கிளப்பை மூடுவதற்கான காரணங்களில் அவர்கள் கையில் வைத்திருக்கும் சாக்ஸஸ் போனும் ஒரு காரணமாகிறது.(Castro, has declared the saxophone to be an imperialist instrument and forbids its use)

> கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஹீரோ அப்பா-அம்மாவிடம் விடைபெறும் காட்சி.தந்தைக்கும் மகனுக்குமான இடையிலான அந்த காட்சி அவ்வளவு நேர்த்தி.

> நீங்க ரொம்ப வருசமா ஆசை ஆசையா வளர்த்த அல்லது சொந்த மகன்/மகளுக்கு மேல நினைக்கிற ஒன்னை திடீர்னு ஒரு நொடியில் ஒருத்தர் உங்க முன்னாடி வந்து இனிமே இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமில்லே..இனிமே அது எனக்குமட்டுமே சொந்தம்னு சொன்னா உங்களுக்கு எப்படியிருக்கும்.அப்படித்தான் கரும்புத்தோட்டத்தில் தன் மாமாவிடம் ஹீரோவோட சகோதரன் சொல்ற காட்சி..அதுக்கப்பறம் நேரும் மரணம்..அதனால் உண்டாகும் குற்ற உணர்வு...

> அமெரிக்காவில் ஒட்டல் தொடங்கறதப் பத்தி தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வேலையைப் பற்றி அவர் சொல்ற காட்சி...

> சில வருடங்களுக்குப் பிறகு அதே ஓட்டலில் தரையை சுத்தம் செய்திகிட்டிருக்கிறப்போ, அவருடைய காதலி அவரைப் பார்க்க வர்ர அந்த காட்சி..அந்த சமயத்தில் அவங்களுக்குள்ளாற ஏற்படற அந்த உணர்வுகள்.. காதலியாக மட்டும் அறிமுகமானவள் இன்று அரசியலில் முக்கியபுள்ளி, நெடு நாள் இடை வெளி வேற.. அவகிட்ட எப்படி பழையபடி அதே அன்னியோன்னியமா நெருங்கிறது..மறுபடியும் காதலியின் அழைப்பு..மறுபடியும் இவரோட மறுப்பு..எந்த ஒரு பிரச்சனையும் இல்லை..இப்ப நினைச்சாக்கூட தன் காதலியோட புறப்பட்டுப் போய் அவளின் மூலமா ஒரு அதிகாரத்துடன் கூடிய ஆடம்பரமான வாழ்க்கையை வாழமுடியும்,எந்த தடையுமில்லை.ஆனாலும் காதலியைக் காட்டிலும் தான் தானாகவே இருக்கறதுதான் முக்கியம் அப்படீன்னு தன் காதலியின் அழைப்பை மறுபடி ஒருமுறை நிராகரிக்கிற அந்தக் காட்சி...ரொம்ப அபூர்வமான மனிதர்களால் மட்டும்தான் இது முடியும்.

இந்தக் காட்சியைப் பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் இந்தக்கருத்து எனக்கு மிக ப் பிடித்தால அதை அப்படியே இங்கே தருகிறேன-He(ஹீரோ) now realizes that Aurora(ஹீரோயின் பேரு) is Cuba: beautiful, alluring, but ultimately unattainable

> கடைசியா கையில் ஒரு ரோஜாவை வச்சுட்டு அப்படியே ஒவ்வொரு படியா ஹீரோ மேல ஏறரப்ப அந்த காட்சியின் பின்புலத்தில் ஒரு பாட்டுவரும்,அந்த பாட்டு..அதுக்கு அவர் கொடுக்கற அந்தச் சின்ன பேஸ் எக்பிரஸ்னோட கூடிய அந்த மூவ்மெண்ட்... அந்த காட்சிக்காவே படத்தை எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்...


>தனக்குப்பிரியமான அப்பவோட கைக்கடிகாரத்தைக்கூட எடுத்துப்போக அனுமதிக்காத கீயூபாவின் அதிகாரிகளை கோபமாகவும்,வாட்சை ஏக்கமாகவும் பார்க்கிற காட்சி..

மொத்தத்தில் என்னை மிகவும் கவர்ந்த,இம்சித்த மற்றும் சிலவற்றை யோசிக்க வைத்த படங்களில் இதுவுமொன்று.

வியாழன், 24 ஜூன், 2010

Simple but complicated...

ஒரு ஜென் துறவி தினமும் காலையில் எழுந்தவுடன் அழ ஆரம்பித்துவிடுகிறார்.அதுவும் நீண்ட நேரத்திற்கு.பல பேர் எல்லா விதமாகவும் கேட்டுப் பார்த்தும் அவரிடமிருந்து அழுகைக்கான காரணத்தை அறிய முடியவில்லை.

ஒரு நாள் மிக நீண்ட நேரம் அழுதுகொண்டிருக்கிறார்.இந்த முறை அங்கிருந்தவர்கள் அவரை விடுவதாயில்லை. மிகவும் வற்புறுத்தி கேட்டபின் ஒருவாறு அந்தத் துறவி வாய் திறக்கிறார்.இல்லை என் கனவில் நான் தினமும் ஒரு பட்டாம்பூச்சியாக சிறகடித்து எங்கெங்கோ பறக்கிறேன் என்கிறார்.

எல்லோருக்கும் ஆச்சரியம் இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது? கனவுதானே! அதிலும் அழகான கனவு.

அதற்குத் துறவி முதலில் எது கனவு, நான் மனிதனாக இருந்து பட்டாம் பூச்சியாக மாறுகிறேனே அதுவா? அல்லது பட்டாம் பூச்சியாக இருந்து மனிதனாக வாழ்வதாக உணர்கிறேனே இது கனவா?


ஜென் ஒரு அற்புதமான,எளிமையான ஆண்மீக வழி. இதற்கு இப்படித்தான்,இதுதான் என்று வழிமுறையோ கோட்பாடோ கிடையாது. நீங்கள் ஜென்னைத் தழுவ நினைத்தால் உங்களுக்கு ஒரு தேநீர் விருந்து நடக்கும்.

அந்த தேநீரை நீங்கள் எவ்வாறு சுவைக்கவேண்டுமென்பதை ஜென் குரு உங்களுக்கு காட்டுவார்.அந்த தேநீரைப் பருகுவது போல வாழ்கையைத் துளி துளியாக பருகுவதே ஜென்.

ஜென் கதைகள்,கவிதைகள்,தத்துவங்கள் மிகச் சிறியது.பனித்துளிப் போல.ஆனால் அது உள்ளே பொத்தி வைத்திருக்கும் அர்த்தமோ,பனித்துளி பிரதிபலிக்கும் சூரியனைப் போல,பிரபஞ்சத்தைப் போல எதார்த்தத்தில் பிரம்மாண்டம் கொள்ளும்.

ஜென் கருத்து ஒன்று :”ஒரு ஆற்றில் ஒரு முறைதான் கால் வைக்க முடியும்”.

மேலே உள்ளக்கருத்தில் நீங்கள் ஆற்றை ஆறாக வைத்துக்கொண்டாலும் சரி,இல்லை ஆற்றுக்குப் பதிலாக காலம்,வாழ்கை என உங்கள் விரிவிற்கேற்றவாறு மாற்றிக் கொண்டாலும் சரி இந்தக் கருத்து நன்றாகப் பொருந்தும்.



குரு சீடனிடம் : இலை விழுகிறது, இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் : இலை விழுந்தது, இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் : இலை விழும், இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் :போதும்.நீ ஞானம் அடைந்து விட்டாய்.இனி உன் பாதையில் செல்.

ஹைக்கூ என்ற ஒரு கவிதை வடிவம் ஜென்னிலிருந்து வந்ததுதான். முற்றிலும் இயற்கையை மட்டுமே பாடுபொருளாக கொண்டது.இதன் சிறிய வடிவமே இதன் தனி சிறப்பு.

ஒரு ஜென் துறவி தன் வாழ்நாளில குறைந்த பட்சம் ஒரு ஹக்கூ படைப்பதே சாதனையாக கொள்ளப் படுகிறது.

மூன்று,நான்கு என்பது உச்சபச்ச சாதனை.பாஷோ என்ற ஜென் துறவியே அதிக ஹக்கூக்களை எழுதியவர் ஆவார்.

ஒரு பருந்துப் பார்வையில் அவதானிப்பதெனில் சிறிய,எளிய என்பதே பொதுவாக ஜப்பானிற்கு வாழ்வாக இருந்து வந்திருக்கிறது.தொட்டியில் வீட்டினுள் வைத்து வளர்க்கப்படும் போன்சாய் கூட ஜப்பானிலிருந்து வந்ததென என கேள்வி.


ஒரு துறவி ஒரு ஹக்கூ படைத்து அது எவ்வாறு வந்திருக்கிறதென தன் குருவிடம் காட்டுகிறார்.

சில்வண்டின் இரு
சிறகுகளை நீக்கினால் அது
குங்கமச்சிமிழ்.

என்று பொருள்வரும்படி எழுதுகிறார்.ஆனால் குருவோ அந்த ஹைக்கூவை பின் வருமாறு மாற்றுகிறார்.

குங்கமச் சிமிழிற்கு இரு
சிறகுகளை வத்தால்
அது சில்வண்டு.

அதில் ஒரு பிரம்மாண்டமே புரட்டப்பட்டிருக்கிறது.

உண்மையில் நாம் இப்போது வாழும் உலகம் சில்வண்டின் சிறகுகளை நீக்கிக் கொண்டிடுக்கிறது.

செவ்வாய், 22 ஜூன், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

மாவிலைத் தட்டி

திறந்த கதவிடுக்கில்

ஆருயிர் நண்பனாய்

ஆரத்தழுவி நுழைந்த காற்று

இருக்கை,தொலைக்காட்சி,மேசை,

உள் அறை,அடுப்படியென அலைந்து

நிலைத்தது

கவிதைக் குறிப்புகளின்

பக்கங்கள் புரட்டி...

நிமிடங்களில் ஆசுவாசிக்கலாமென

அமருந்தருணம்,அறையெங்கும் நிறைந்தது

புழுக்கம்..

நண்பர்களின் வழியறியுமோ காற்றும்...

*******************************************************

கேள்விக்குறியென

மூப்பில் வளைந்து

கையில் பற்றிய கழியில்

இடறும் ஆச்சரியக்குறி

நெடுக்கச் செல்லும் சாலையை

குறுக்காக கடந்ததை பார்த்தன்

சாட்சியாய் மூவர்...

நான்..அந்த தவிட்டு  நிறக்குருவி

நீங்கள்...