புதன், 1 செப்டம்பர், 2010

மொட்டை மாடியில் நின்று ரசித்த மாலைப் பொழுதுகள்......

வானம் அன்றாடமாய்

மாலை நிகழ்வுகளின் குவியம்..

பறவைகளென

சிறகு கிளைத்த எழுத்துக்கள்

கூடிப் பிரியும் வெளியில்...

சமயங்களில் வார்த்தைகளாகவும்

சமயாசமயங்களில் வரிகளாகவும்...

கவிதை மனதில் கருக்கொள்ளும்

தருணம் நினைவில் அலைமோதும்.

உயரப் பறக்கும் புள்ளினங்களெல்லாம்

கருப்பாய் தெரிவது மாயமோ

மயக்கமோ....

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....


இளைத்த எண்களில் 
விரல் படும்போதிலெல்லாம்
உதிர்ந்த இலையென
ஒட்ட இடம் தேடி அலையும் ப்ரியத்தில்
கனத்த நினைவுகள்..
*
முடிச்சவிழ்ந்த ரகசியகங்கள்
ஒவ்வொன்றும் பூமிக்கு
வருகிறது மழையென்று....
*
ஏற்ற இறக்கத்தில் 
உன் சிரிப்பைப் போலவேயிருக்கிறது
நான் அடிக்கடி கேட்கும் வயலின் இசை
பின்னான சந்திப்புகளில்
நீ சிரிக்கையில் வயலின்
இசைக்கிறதா! வயலின் இசைக்கையில்
 நீ சிரிக்கிறாயா! பூசணிக்காயைச்
சுற்றும் எறும்பென
குழப்பத்தில் வீழும் பிரக்ஞை!

சனி, 14 ஆகஸ்ட், 2010

முதல் அலைபேசியிலிருந்து.......





அரை நாழிகைக்கும் குறைவான
ஒரு ஒலி உயிர்பிக்கலாம்
ஒரு பிரியத்தை,காதலை,நட்பை...
ஒரு முழுப்பேச்சில் இழக்கவும்
நேரிடலாம் 
அதே பிரியத்தை,காதலை,நட்பை..
            
*

நீ..நானென்று முறைவைத்த
அழைப்புகளில் தளும்பிய நாட்கள் போய் 
இப்போது 
நீயா? நானா? என்று  நீள்கிறது வெறுமனே
சில்லறை விசயங்களில்
முரண்பட்டு

      *

இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த 
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை..
                     
   *   

சனி, 7 ஆகஸ்ட், 2010

முடமான நம்பிக்கை!!!

அது நிச்சயம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் விடுப்புத்தினமான ஒரு  சனிக்கிழமையாகத்தானிருக்க வேண்டும்.

நான் நூலகத்திற்கு வந்திருந்தேன். ”இளைய பாரதம்” என்ற பெயரில் நாங்கள் புதிதாகத் தொடங்கியிருந்த கையெழுத்துப்பிரதியின் அன்றைய மாதத்தின் பிரதியை நூலகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அல்லாதோர்களின் பார்வைக்கு வைந்திருந்தேன். இந்தப் பிரதியில் புதிதாக வாசிப்பவர்களின் கருத்துக்களை அறிவதற்காக  சில வெற்றுப்பக்கங்களை இதழின் பின்புறத்தில் இணைத்திருந்தோம்.

நூலகம் திறந்த (9.30) ஒரு மணி நேரம் கழிந்து (10.30) வந்த ஒருவர், எல்லாப் பத்திரிக்கைகளையும் புரட்டியபோது “இளைய பாரதம்” அவரின் பார்வையை இடறியிருக்கவேண்டும். எடுத்து சிரத்தையுடன் (இந்த வார்த்தையை நானே சேர்த்துக்கொண்டேன்) வாசிக்கத்தொடங்கினார்.வாசித்து  முடித்ததும்   வெற்றுப் பக்கத்தை உபயோகமுள்ளதாக்கினார். 

அவர் சென்று சிறிது நேரம் கழிந்தபின் என்ன எழுதியிருக்கிறார் என்ற ஆவல் மேலெழ படித்துப் பார்த்தோம்.ஆம்! அவர் வாசித்துக்கொண்டிருக்கையில் கையெழுத்துப்பிரதியின் முழுமுதல் உரிமையாளர் என்னுடன் இணைந்து கொண்டார். உங்களின் கவனம் முழுவதும் வாசிப்பவரின் மேலேயேயிருந் -ததால் நான் இதை அப்போது உங்களுக்குச் சொல்லவில்லை.

சரி விசயத்திற்கு வருவோம். அவர் அந்த கையெழுத்துப்பிரதியில் இருந்த மூட நம்பிக்கை கட்டுரையைப் பற்றித்தான் கருத்துச் சொல்லியிருந்தார். நிற்க! இந்த இடத்தில் மூடநம்பிக்கை என்று நான் எதைச் சொல்லுகிறேன் என்பதை தெரிந்துகொள்வதற்காக உங்கள் ஆவல் அதிகரிப்பது இயல்புதான். ஒரு விசயத்தை நேரிடியாக சொல்வதைக் காட்டிலும் ஒரு குட்டிக்கதை மூலமாகவோ (அ) சம்பவம் மூலமாகவோ சொல்வதுதான் சிறந்த உத்தி என்று அன்றைய பிரபல இதழ்களின் வாயிலாகவும், சில படங்கள், செய்திகள், நண்பர்கள் ,ஆசிரியர்கள் இத்தனைக்கும் மேலாக என் சுய அனுபவத்தின் வாயிலாகவும் நான் அறிந்திருந்தேன். இத்தனை இத்யாதிகளின் மூலமாக அறிந்த ஒரு விசயம் நிச்சயம் உண்மையாக இருக்கவேண்டும் அவ்வாறு இல்லையெனில் உண்மையை ஒத்திருக்க வேண்டும் தானே. சரி! விடுங்கள்! நாம் மறுபடியும் விசயத்திற்கு வருவோம்.

அந்த மூட நம்பிக்கை பற்றிய கதையைச் சொல்வதற்கு என்னை நீங்கள் அனுமதித்தால்தான்,வெற்றுத்தாளை நிரப்பிய அந்த பரிச்சையமில்லாத  நபரின் கருத்தை நீங்கள் அறிந்துகொள்ள இயலும்.உங்கள் அமைதியையே, ஆமோதிப்பாக கொண்டு கதையைத் துவக்குகிறேன்.

அதற்குமுன் நீங்கள் இரண்டு விசயங்களை உணரவேண்டும்.1) யாரும் வேண்டுமென்றே கதை சொல்வதில்லை,வேண்டும்போது சொல்கிறார்கள்.2) இடைச்செருகல் இல்லாமல் வாழ்க்கையுமாகாது, இலக்கியமுமாகாது . எனவே என் இடைச்செருகலை நீங்கள் பொறுத்துதான் ஆகவேண்டும்.

 அயர்ச்சியின் அறிகுறிகள் வெளிப்படையாகவே உங்கள்முகத்தில் தென்படுவதால் நான் கதைக்கு வருகிறேன்.

கதை இப்படி ஆரம்பிக்கும் : அந்த வீட்டில் ஒரு பிராமண தம்பதிகள் வசித்து வருகின்றனர். பிரமாணம் என்ற பதம் உங்களுக்கு நெருடலாக இருந்தால் தம்பதியர் என்று வைத்துக்கொள்ளுமாறு கோரப்படுகிறீர்கள்.அந்த  தம்பதியரில் கணவனுக்கு மட்டும் மூச்சு சம்பந்தமான ஒரு ரகசியப் பயிற்சித்  தெரியும்.

அதாவது நம் மூக்கில் இரண்டு நாசிகள் இருந்தாலும் ஒரு சமயத்தில் இடது நாசியிலோ (அ) வலது நாசியிலோ தான் காற்று வெளிச்செல்லும்.நீங்கள் உடனே மூக்கில் விரல் வைத்துப் பார்ப்பது தெரிகிறது(இதற்கு நீங்கள் உங்கள் ஆட்காடி விரலைப் பயன்படுத்தவேண்டும்). இதைப் பற்றி இன்னும் நிறைய விளக்கம் வேண்டுமானால் ஏதாவது யோகசானம் பற்றிய புத்தகத்தில் துலாவினார்களானால் கிடைக்கும். நேரத்தைக் கணக்கில் கொண்டு இப்போது நாம் கதைக்கு வருவோம்.

பொதுவாக ஒரு காரியமாக வெளியே செல்லுகையில் காற்று வலது நாசியில் வெளிவந்தால் காரியம் சித்தியாகும். அந்த பிராமணர் தேவையானபோது காற்றை வலது நாசியில்  வெளியேற்றும் பயிற்சியைக் கற்றிருந்தார்.

 மிக சிரமப்பட்டு, வேறுயாருக்கும் தான் கற்றுத் தருவதில்லை என்ற நிபந்தனையுடன் தான், தன் குருவிடமிருந்து அவர் அப்பயிற்சியைக் கற்றுக்கொண்டார். எப்படியோ இதனை மற்ற யாருக்கும் தெரியாமல் இவ்வளவு காலம் பயன்படுத்தி வந்தார்.பலன் பெற்று வந்தாரா இல்லையா என்பது பற்றித் தெரியவில்லை.

வழக்கத்தின் படி ஒரு நாள் வெளியே செல்ல வாசல் வருகையில் அவருடன் அவர் மனைவியும் வந்துவிட்டார். இவர் செல்வது  முக்கியமான காரியமாக இருந்திருக்கும் போலும். இப்போது அவர் நாடியில் கைவைத்துப் பார்க்கிறார்,காற்று இடது நாசியில் வருகிறது. எங்கே நீங்கள் சொல்லுங்கள் ஏற்கனவே நான் முன்பே கூறியது படி காரிய சித்திக்கு எந்த நாசியில் காற்று வரவேண்டும்?

ஆஹா..அப்படித்தான்.சரியாகச்சொன்னீர்கள்! வலது நாசியில்தான்!நீங்கள் கவனமுடன் படித்து வருகீறீர்கள் என்று நினைக்கிறேன்.உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் பத்து பைசா பெறாத இந்த விசயத்தை இப்படி வளைத்து வளைத்து எழுதிக்கொண்டு வருகிறேன்.
 பத்து பைசா என்றா சொன்னேன்.மன்னிக்கவும்! உடனே திருத்திக்கொள்ளு -ங்கள்   பத்து பின்னூட்டம் (அ) பத்து ஓட்டுகள் கூட பெறாத விசயம் என்று.சரி! நான் உங்களை மேலும் சோர்வுக்குள்ளாக்க விரும்பவில்லை,கதைக்குத் திரும்புகிறேன்.


எங்கே விட்டேன்.ஆங்..வலது நாசியில் காற்று வந்தால்தான் காரியம் நடக்கும். ஆனால் பிரமாணருக்கோ இடது நாசியில் காற்று வருகிறது. அவருக்குத்தான் மூச்சுப் பயிற்சித் தெரியுமே,காற்றை வலது நாசிக்கு மாற்றிக்கொண்டால் போச்சு.பிரச்சனை அதுவல்ல மனைவி பக்கத்தில் இருப்பது தான்.பயிற்சியின் போது பார்த்துவிட்டால்.சும்மாவே நோண்டி^2 க் கேட்பவள் இதையும் நோண்டி^2க் கடைசியில் நம் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்-துவிட்டால்.. அய்யோ! அப்புறம் அந்த பயிற்சிக்குண்டான பலனிருக்காது...சரி இவளை எப்படி உள்ளே அனுப்புவது..

தாகமாகயிருக்கிறது என்று தண்ணீர் கேட்டால் நிச்சயம் உள்ளே சென்றுதான் ஆகவேண்டும் (அவருக்கேன் இந்த யோசனையை வந்தது என்று நீங்கள் நினைக்கலாம்!!..ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு யோசனை என்று ஒரு உல்டாதான் நேக்குத் தோன்றது) , அதற்குள் பயிற்சியை முடித்து விடலாம்..சரியென்று தன் மனைவியிடம் தண்ணீர் கேட்டார். மனைவிக்கு குழப்பம்.உள்ளேயிருந்து தானே வருகிறார் வரும்போதே தண்ணீர் அருந்தி விட்டுத்தான் வந்தார்!!..பிறகேன் மறுபடியும் தண்ணீர் கேட்கிறார்..திடீரென்று அவளுக்கொரு யோசனை தோன்றி வாசலில் எட்டிப் பார்த்தாள்..அப்போது அவ்வழியே ஒரு கைம்பெண் வந்துகொண்டிருந்தார். கணவன் மேல் அவளுக்கு சந்தேகம் வந்ததா.. இல்லையா.. என்று தெரியவில்லை.அவளும் உள்ளே சென்று ஒரு தம்ளரில் நீர் கொண்டு வந்தாள்.சீக்கிரமாக வந்துவிட்டதால் கணவனால் பயிற்சியை முடிக்க முடியவில்லை.அதனால் ஒரு குவளை நிரம்ப (சொம்பு என்ற வார்த்தையை விவேக் முதல் பதிவர்கள் வரை குறியீடாக மாற்றிவிட்டதால் குவளை என்ற சொல் சொம்பின் பதிலி ) தண்ணீர் கொண்டு வருமாறு பணிக்கிறார்.

மனைவியின் அந்நேரத்து முகக்கோணலையும், முறைப்பையும், முனக லையும்  சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என் முகவரியைத் தேட ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதால் நான் கதையையே தொடர்கிறேன்.

உள்ளே செனற மனைவி  குவளை நிரம்ப நீர் கொண்டு வரவும் அவர் சுவாசத்தை வலது நாசிக்கு மாற்றும் பயிற்சி முடியவும் நேரம் சரியாகயிருந்தது. வந்த தண்ணீரை வேண்டாம் என்று சொன்னால் நடக்கப் போகும் விபரீதங்களைக் கற்பனை செய்து பார்த்தவர் நீரை வாங்கி ஒரு மிடறு.


இது போலவே மனைவி வாசல் வரும்போதெல்லாம் நீர் கேட்டே (ஏற்கனவே வெற்றி பெற்ற யுக்தி) சமாளித்திருக்கிறார்.ஆனால் இவர் நீர் கேட்கும்போதெல்லாம் வாசலை எட்டிப் பார்த்த மனைவிக்கு வேறு^2 விசயங்கள் கண்ணில் தென்பட்டிருக்கிறது.


 வழக்கத்தின் தொடர்ச்சியில் ஒரு முறை பிராமணர் வெளியில் செல்லும் போது மனைவியும் வாசல் வந்திருக்கிறார். இந்த தடவை பிராமணர் சற்று முன்னதாகவே மூச்சைப் பரிசோதித்துவிட்டார். வலது நாசியில்தான் வெளி யேறிக்கொண்டிருந்தது. எனவே மனைவிடயிடம் விடைப் பெற்றுக் கொண்டு வாசல் இறங்க, அதற்குள் மனைவியிடமிருந்து ஒரு அபாயக்குரல் அவரை நிற்கச்சொல்லி. கணவர் நின்று,திகைக்க, விடு^2 வென்று உள்ளே சென்று திரும்பிய மனைவியின் கையில் குவளை தழும்ப நீர்.ஆச்சரியத்துடன் இந்த முறை கணவர் வாசலைப் பார்க்கையில் தலையில் விறகுடன் ஒரு மூதாட்டி அவரை கடந்து சென்றிருக்கிறார்.”சரிதான்” மனதிற்குள் சொல்லி,வாயில் ஒரு நமுட்டுச் சிரிப்பை வைத்து வந்த தண்ணீரை வாங்கி ஒரு மிடறு..

ஆக வெளியில் செல்ல வாசல் இறங்குகையில் எதிரில் கைம்பெண், தலை விறகுச்சுமை, பூனை, எருமை போன்ற இத்யாதிகள் வரும்போது நீர் வாங்கி அருந்திச் செல்லும் வழக்கம் இவ்வாறுதான் நிலைபெற்றது. எனவே அது வெறும் மூட நம்பிக்கையே! அதை விட்டொழிப்போம் அறிவியல் தளத்தில் சிந்தித்து தெளிவு பெறுவோம்! செயலாற்றுவோம்!! என்று அந்தக் கட்டுரை முடிந்திருந்தது..

உங்களைப் போலவே, படித்தவுடன் ம்ஹிம்..இதுக்குத்தான் இந்த அலட்டலா..அட அப்படியா...உஸ் அப்பா...அட ராமா..இது நாலுவரில சொல்லியிருக்கப்படாதோ...கொய்யால இவ்வளவு நேரம் கவனமாப் படிச்சிட்டு வந்த எங்களை கேனயனாக்கிட்ட பாத்தியா- அப்படீன்னு மேலே நூலகத்தில் இந்தக் கட்டுரையைப் படிச்சவரும் பேசாம புலம்பிட்டு போயிருந்தார்னா இந்த பதிவுக்கான அவசியமோ , அதையும் நீங்க கொட்ட படிக்க வேண்டிய அவசியமோ நேர்ந்திருக்காது....

ஆனால் அவர் அன்று எழுதிவைத்துவிட்டுப்போன அந்த கருத்து ( பதிவுப் பாஷையில் பின்னூட்டம் ) பெவிக்கால் போன்று மனசில் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவர் பதிந்திருந்தது இதுதான் :

”அந்த பிராமணர் மேற்க்கொண்ட அந்த சுவாசப் பயிற்சியை எப்படி செய்வது என்று கொஞ்சம் விளக்கிச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்”- சோ & சோ ..அப்ப அனானிமஸ் அவ்வளவு புழக்கத்தில் இல்லை போலும்.



உங்களைப் போலத்தான் நானும்,இளைய பாரதத்தின் உரிமையாளரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசாமல் சின்னதாய்  ஒரு சிரிப்பை மட்டும் பறிமாறிக்கொண்டோம். ஒன்று மட்டும் உறுதிசெய்துகொண்டேன். அந்த மாதிரியான கட்டுரைகளை எழுதுவதில்லை அப்படியே எழுதினாலும் கருத்துச் சொல்லும் பக்கத்தைச் சேர்ப்பதில்லை.....நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்???..

வெள்ளி, 30 ஜூலை, 2010

கொஞ்சம் பெரிய ஒண்ணு

ஈரானுக்கு மஜீத் மஜ்டி- ன்னா இந்தியாவிற்கு பஷீர். இரண்டுபேருடைய கால கட்டங்கள் , வயது, கலாச்சாரம், வெளிப்பாட்டின் ஊடகம் இவைகளில் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் இரண்டுபேரும் இந்த உலகத்தை, வாழ்க்- கையை - அதன் வியப்பை, ஏமாற்றத்தை, பரிசை, திருப்பத்தை, கற்றுத்தரும் பாடத்தை, தன்னைச் சுற்றியுள்ளவர்களை, தன்னுடைய சுழலை என எல்லா- வற்றையும் பார்ப்பது குழந்தைகளின் வழியாகத்தான். குழந்தைகளின் வழி அவர்கள் சித்தரித்துக் காட்டும் உலகிற்கு ஈடு இணை ஏதுமில்லை.


எதனால் என்று தெரியவில்லை.நிகழ்காலம் என்னதான் இன்பமாக இருந்தாலும், கடந்த காலம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாவிடினும் மனமென்னவோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாய்ந்துகொள்வது அந்த நினைவுகளில்தான்.

பஷீரின் ”பால்யகால சகியை”ப் படிக்கையில் ஒரு டைம் மெஷினில் ( Time machine ) ஏறி என்னுடைய பால்யத்தை மறுபடியும் ஒருமுறை சென்று பார்த்து -விட்டு வந்தது போல் இருக்கிறது. இத்தனைக்கும் பாலியம் தொடர்பான பகுதிகள் இரண்டு மூன்று தான் இருக்கும்.இருப்பினும் அந்த நடையின் தொனி தொடும் தூரம் அத்தகையது. மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் ஒரு சிறு துளையி -டுவதைப் போன்றது அவருடைய நடை.போகிற போக்கில் மாட்டின் மூக்கில் மூக்குப் பொடியை தூவி விட்டுச்செல்லும் சிறுவனின் குறும்பைப் போன்ற நடை பஷீருடையது.


சுகறா,மஜீத்..பால்யகாலம் தொட்டே மிக அனுக்கமான நண்பர்கள். ஆனால் இதில் ஆர்ச்சயம் என்னவென்றால் அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த வைரீகளாக இருந்தார்களென்பதுதான்.

குழந்தைகளின் மனவோட்டத்தை, குறும்புத்தனங்களை,உடல்மொழியை மற்றும் முக்கியமாக அவர்களுடைய பரிபாஷையை அழகாகத் தந்தவர்களில் என்னளவில் என்னால் சுட்ட இயலுவது இருவரைத்தான்.ஒருவர் பஷீர், இன்னொருவர் சுரா.

பொதுவாக பாலியங்களில் நாம் பயன்படுத்தும் சில சொல்லாடல்களையும் அது சுட்டும் பொருள்களையும் நினைத்துப் பார்த்தால் மிக வேடிக்கையாக இருக்கும். சில சமயம் நம்முடைய அந்த பாலியச் சொற்களுக்கு அர்த்தமே இருக்காது.

// மஜீது வெற்றிக்களிப்புடன் அர்த்தமில்லாத ஒரு சத்தம் கொடுத்தான்,ஜீக் ஜிகு! ஜீக் ஜிகு! // பஷீரின் பெரும்பாலான கதைகளில் இந்த மாதிரி குழந்தைகளின் வெற்றிக்களிப்பு சில அர்த்தமில்லாத சொற்களைத் தான் கொண்டிருக்கும்.

// ஆகாயமும் பூமியும் அறியும்படியாக அவன் கம்பீரமாக அறிவித்தான் “எனக்கு மரம் ஏறத்தெரியுமே’’//

இந்த வரிகளுக்கு முன் இருவருக்குமிடையே ஒரு சிறு போட்டி வரும். சுகறாவை ஏதாவது ஒருவகையில் கூசிச் சிறுக்க வைக்க வேண்டும் என மஜிது, தன் வீட்டைப் பற்றி சொல்லுகிறான்,தன் தந்தையின் பணியைப் பற்றி சொல்லுகிறான்.ஆனால் சுகறாவோ எல்லாவற்றுக்கும் பளிப்பு காட்டி விடுகிறாள். இந்த இடம் கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற கதையை நினைவுபடுத்தியது.

பள்ளியில் ஒரு முறை மஜீதுக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி வருகிறது.1+1=?. மிகச்சிரமப்பட்டு ஒரு விடையை யோசிக்கிறான், கொஞ்சம் பெரிய ஒண்ணு.

இரண்டு நதிகள் ஒன்றாகச் சேர்ந்து, பெரிய நதியாக சேரும்போது இரண்டு தனித் தனி ஒன்றுகள் சேர்ந்து பெரிய ஒன்றாகத் தான் வரவேண்டுமல்லவா...


ஆனால் பஷீரின் ஆசிரியர் என்ன அத்தனை சொற்பமானவரா..மஜீதுக்கு நாலைந்து அடிகள் கொடுத்து எல்லாவற்றையும் சேர்த்து ஒரே பெரிய அடியாக நினைத்துக்கொள்ளச் சொல்லிவிடுகிறார். வாழ்க்கையும் இப்படித்தானே!! ஒரு பெரிய கோட்டை பக்கத்தில் வரைந்து ஏற்கனவேயிருக்கும் கோட்டைச் சிரிதாக செய்வது போல் , ஏதாவது ஒரு பெரிய சோகத்தை கொண்டுதானே இன்னொரு சோகத்தை சிறிதாக்கிக் கொள்ளமுடிகிறது.

பொதுவாக கலைஞர்கள் மஜிதாகயிருக்கும்போது..யதார்த்த வாழ்க்கை அவனுடைய ஆசிரியரைப் போல இருக்கிறது...

சுகறாவைக் கரைக்க மஜீது சொல்லும் அந்த வாக்கியம் எவ்வளவு அழகாக எந்த பண்டிதத்தனமும்,மேதாவித்தனமும் இல்லாமல் வெறும் குழந்தையின் குரலாகவே ஒலிக்கிறது.

//நான் ஒண்ணுமே செய்யாம இருந்தாலும்,வாப்பாவும்-உம்மாவும் சும்மா என்னை பறண்டவும்,நுள்ளவும் செய்தாங்க!சும்மா அவுகளுக்கு இது ஒரு சுகம்.இனி நான் மரிச்சுப் போனா அவுங்கா சொல்லுவாங்களா இருக்கும்.அந்த பாவப்பட்ட மஜீது இருந்தான்னா ஒரு நுள்ளாவது குடுக்கலாமென்று//

பாட்டி வீட்டுக்கென நான் கேரளம் பயனிக்கும்போதெல்லாம் எங்கள் வீட்டருகே ஒரு ஆறு ஒடும். , சிறு ஒடைப் போலத் தொடங்கி, சற்று பெரிதாகி,மறுபடியும் சிறிதாகி,மறுபடியும் பெரிதாகி கொஞ்ச தூரத்தில் ஒடையாகி..ஒரிடத்தில் தேங்கி பெரிய ஆறாக மாற்றம் பெற்று..சிற்ச் சில இடங்களில் பரந்த மணலில் நுண்ணமான ஒரு வெள்ளிக்கம்பியெனவோ, வைரக்கம்பியெனவோ மாறி இறுதியில் ஏதாவது ஒரிடத்தில் ஒரு பெரிய நீர்பெருக்குடன் கலக்கும்.

வாழ்க்கையும் , பால்ய கால சகியும் இப்படியே.

விக்ரமாதித்யன் கவிதையொன்று வரும்....

பெண்கள் என் பிரதான பலிபீடம்
நான் ஆடாய் அரிவாளாய்

பலிபீடமாய் மாறி மாறி
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

மஜீதும் கிட்டத்தட்ட அவ்வாறே..கைகூடாவிட்டாலும் கைவிட முடியாத நிலையில் பால்யால காதலின்,ப்ரியத்தின் செறிவு கொஞ்சமும் குறையாத சுகறா..அவ்வளவு வறுமையிலும் தன் மகனின் செழிப்பிற்கு வாடும், கிடைப்- பதில் முக்கால் வாசியை மகனுக்கென பங்கு வைக்கும் ,வறுமையைக் காட்டிலும் மகனின் முக வாட்டத்திற்கு வருந்தும் தாய், அண்ணனை எவ்வகை யிலாவது மகிழ்ச்சிப்படுத்த அவன் அமைக்கும் தோட்டத்திற்கு தன் கவலைகள், ஏக்கங்களை மறைத்து நீருற்றும் சகோதரிகள் என...அவனும் மாறி,மாறி வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

ஆனால் பஷீருடைய இலக்கியத்தில் வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கும்.எந்த அதி உன்னதங்களும் பஷீருடைய மாந்தர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு விதி வழியாகத்தான்.அதனால் அவருடைய கதையில் சுபங்களையெல்லாம் எதிர் பார்க்க இயலாது. எனவே வெளிநாடும் செல்லும் ஒரு அனுக்கமான நண்பனின் பிரிவு, திடீரென்று வரும் நண்பனின் மரணம் குறித்த தகவல், காதலித்தவள் வேறொருவனை கரம் பிடிக்கும்,பிடித்த நிகழ்வு , நள்ளிரவு மழைச் சப்தம்-காலையில் அதன் தடயம் என இவற்றில் ஏதாவதொரு உணர்வைத்தான் பஷீரின் கதைகளின் முடிவில் என்னால் உணர முடிகிறது.

சுகறாவுக்குப் பிறகும் தாய் மற்றும் சகோதரிக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

சற்றே பின்னகர்ந்து மஜீது மட்டும் தன்னுடைய தந்தையை சற்று அனுசரித்து இருந்தானெனில்......


காதல் மோதலில்தான் ஆரம்பிக்கும் என்று எந்த முட்டாள் சொன்னானோ எனக்கு தெரிந்த பெரும்பாலான நல்ல நட்புகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி நட்புகள் எல்லாம் மோதலில்தான் ஆரம்பித்தது. அதில் பெண் தோழிகளும் அடக்கம். யாரை நான் கல்லூரிப் பிரச்சனையின் போது முதலில் அடித்தேனோ அவனும் நானும் தான் கட்டிபிடித்து அழுதோம் கல்லூரி இறுதி வருடத்தின் கடைசி தினத்தில்...

எந்த பெண்ணை நான் காயப்படுத்தினேனோ அவளிடமிருந்துதான் முதல் ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம் என் கைக்கு வந்தது.

மன்னிக்கவும்...

தற்போது என்னிடம் கவிதை

எதுவும் இருப்பில் இல்லாததால்

நீங்களாகவே ஒன்றை கிறுக்கிகொள்ளவும் என் சார்பாக...

என்று எழுதியதைப் படித்துச் சிரித்த அந்த பரிச்சையமில்லாத தோழி இப்போது எங்கே இருக்கிறாளோ..

Be a tower,stand for ever என்று எழுதித் தந்தவள் என்ன செய்துகொண்டிருக்- கிறாளோ..

”இரு இரு உன்னை டீச்சர்கிட்ட சொல்லி என்ன செய்யறேன்னு பாரு” என்று உடைந்த வளையல்களோடு சென்றவள் புகார் செய்ததாக ஒரு முறைகூட அந்த டீச்சர் என்னை அழைத்ததேயில்லை...


வைக்கம் முகம்மது பஷீர் :

நான் இவரைப் பற்றி படித்தது மற்றும் கேள்விப்பட்டது வரையில் இவரை சில வரிகளில் சித்திரமாக்கிவிடலாம்.

தாழ்வரம் சற்றே சரிந்த வீடு..
முற்றத்தில் மங்குஷ்தான் மரம்.
அதன் நிழலில் ஒரு சாய்வு நாற்காலி..
நாற்காலியில் சாய்ந்த ஒர் உருவம்தான் பஷீர்...

ஒரு மழை நாள் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வீட்டின்பின்புறம் சென்றிருக்கிறார் பஷீர்..அப்போது வானில் மின்னல் வெட்டியதில் யாரோ தன்னை படம் பிடிக்கிறார்கள் என்று போஸ் கொடுத்தார் என்று இவரைப் பற்றி ஒரு பகடி மதராசப் பட்டினம் படம் பார்க்கையில் என் நினைவிற்கு வந்தது.இது உண்மையா (அ) இட்டுக்கட்டப்பட்ட பகடியா என்று தெரியவில்லை.


1908 ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி தலையோலப் பரம்பில் பிறந்தார். 10 ம் வகுப்பு ப்டிக்கும்போது வீட்டை விட்டு ஓடியவர்.இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப்போராட்டத்தின் ஒரு பகுதியான உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப்போராட்ட வீரர் எனும் நிலையில் மதராஸ்,கோழிக்கோடு கோட்டயம், கொல்லம் மற்றும் திருவனந்தபுர சிறைகளில் தண்டனைகளை அனுபவித்தார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச்செயல்பட்டார்.அமைப்பின் கொள்கை இதழாக உஜ்ஜீவனம் எனும் வாரப் பத்திரிக்கையும் துவங்கினார்.

பத்தாண்டு காலம் பாரதமெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்கா,அரேபியா போன்ற நாடுகளிலும் சுற்றித்திரிந்தார். இக்காலகட்டங்களில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று கூறலாம்.இந்த காலகட்டத்தில் சில ஆண்டுகள் இமயமலைச் சரிவுகளிலும்,கங்கை நதிக்கரையிலும் இந்துத்துறவியாகவும், இஸ்லாமிய சூபியாகவும் வாழ்ந்தார்.

மனைவி : பாபி பஷீர். மக்கள் : ஷாஹீனா, அனீஸ் பஷீர்.
1994 ஜீலை 5ம் தேதி காலமானார்.

”அம்மே உம்ம காந்தியை ஞான் தொட்டு ” என்று ஒடி வந்த பஷீரை “நான் பஷீரைத் தொட்டேன் தெரியுமா” என்று சுராவிடம் பகிர்ந்ததாக ஜெயமோகன் ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னை மிக கவர்ந்த எழுத்தாளர்களிர் பஷீர் மிகமுக்கியமானவர் என்று இவரைப் பற்றி ”புன்னகைகளின் பெருவெளி” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சீரிய வாசிப்பு பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டிய எழுத்தாளர் பஷீர். இவருடைய மதிலுகள் என்ற நாவல் மம்முட்டி நடித்து திரைப்படமாகவும் வந்துள்ளது.


மேலே உள்ள அவரின் வாழ்க்கை குறிப்பை கண்ணுறும்போதுதான் தெரிகிறது..
அவரும் புரட்சியாளாராக, எவற்றிலும் நிறைவுகொள்ளாதவராக எவ்வளவு தீவிரமாக திரிந்தாரோ அதை விட தீவிரமாக அமைதியாக அமர்ந்து மிகப் பெரும் படைப்புகளைத் தந்துள்ளார். அன்பில் நிறைந்தார் அதுவே பின் படைப்பாகியது.அதுவே அவரை இவ்வளவு காலம் கழிந்த பின்னும் நம்மைத் தொடுகிறது.

குளச்சல் மு. யூசுப்

இந்தக் கதையை மேற்கூறிய படி நான் உள்வாங்குவதற்கு முக்கிய காரணம் இவர்தான்,இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர். பொதுவாக மற்ற துறை -களின் மொழிபெயர்ப்பிற்கும்,இலக்கிய மொழிபெயர்ப்பிற்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. பின்னது சற்று சிரமமானது.சில சமயங்களில் அபாய -கரமானதும் கூட...பஷீரைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் புதிதாக வாசிக்கும் வாசகர்கள் பஷீரை- பஷீராகவே சென்றடைய வேண்டும்.இந்தக் கதையின் எந்த ஒரிடத்திலும் நான் பஷீரை தொலைக்கவேயில்லை. எனவே -தான் நான் இந்தக் கதையில் மீறப்பட்டிருக்கும் சமூகத்தின் நியதியையோ (அ) ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளையோ பற்றி பேசவில்லை.

காரணம் மழைக் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கும் ஆறு அதன் கரையை அதுவாகவே விரிவுபடுத்திக்கொள்கிறது. மனிதனின் முயற்சிகளனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு அதனிடம் சரணடைவதாகவே உள்ளது. வாழ்க்கை, சமூகம் அதைத்தொடர்ந்து வரும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.இதை பஷீர் அறியாதவரா என்ன?...


மு. யூசுப் - மொழிபெயர்ப்பு என்ற அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மேல் அனாசயமாக நடந்து கடந்திருக்கிறார்.

இதே புத்தகத்தைப் பற்றி அருமை நண்பர் திரு.முரளியின் பகிர்வு இங்கே..பால்யகால சகி

சனி, 24 ஜூலை, 2010

பொன்மாலைப் பொழுது ..

வெங்கட் சுவாமிநாதன் :

மகுடேசுவரனின் குரல் மிருதுவானது.பாசாங்குகள் அற்றது.பல ரூபங்களில் பல தொனிகளில் வெளிப்படுவது .

கல்யாண்ஜி :

இவருடைய கவிதைக்குரல் யாருடைய குரலையும் ஞாபகப்படுத்தாத எப்போதாவது கேட்கிற சீரியக்குரல்.

ஞானக்கூத்தன் :

இரத்தத்துடிப்புள்ளவை இவருடைய கவிதைகள்.




மேற்க்கண்ட கூற்றுகளுக்கு முற்றிலும் தகுதியான திரு.மகுடேசுவரன் அவர்கள், தொன்னூறுகளில் கனையாழியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தொடர்ந்து இன்றளவும் இயங்கிவருகிறார். ஏனெனில் கல்யாணத்திற்கு பிறகு கானாமல் போன படைப்பாளிகள் ஏராளமானோர் என்று திரு.சுந்தரராமசாமி ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு.மகுடேசுவரன் என் பக்கத்து ஊர்க்காரர்(திருப்பூர்). இவருடைய “யாரோ ஒருத்தியின் நடனம்” தான் ( 2002 ) நான் முதன் முதலில் படித்தது. (இதற்கு முன்பே “ பூக்கள் பற்றிய தகவல்கள்” “அண்மை “ என்ற இரு கவிதை தொகுதிகளும் வெளிவந்து அதன் மூலம் தமிழ் இலக்கிய சூழலில் பரவலாக அறிப்பட்டிருந்தார்) அப்போதிருந்தே இவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து, அதற்கு முயற்சித்து, ஒரிருமுறை நேரிலும் பார்த்துவிட்டேன். இது நடந்தது 2004-2005 கால கட்டங்களில்.

அப்போதெல்லாம் இலக்கிய ஆளுமைகளை, பிரபலங்களைச் சந்திப்பதில் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவன். எனவே இவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவேயில்லை.

இது எனக்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறிக்கொள்கிறேன். தமிழின் சமீபகாலத்தின் முக்கியக் கவிஞர், திரு.சுஜாதா அவர்களின் செல்லக்கவிஞர் இவருடன் நல்ல நட்பு இருந்திருந்தால் கவிதைப் பற்றிய என்னுடைய பார்வைகளில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனால் அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் திருப்பூர் வலைப்பதிவர் (சேர்தளம்) குழுமம் வரும் ஞாயிறு அன்று (25/7/10) இவருடைய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. http://tiruppur-bloggers.blogspot.com/2010/07/blog-post.html.

மேற்க்கண்ட சந்திப்பில் திருப்பூர் குழுமத்தின் ( சேர்தளம் ) உறுப்பினன் என்ற முறையில் எனக்கும் கிடைக்கும் இந்த வாயப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலிருக்கிறது.
இதைப்பற்றி திரு.பரிசல் அவர்களின் பதிவு : கவிஞருடன் ஒரு சந்திப்பு!

இவரைப் பற்றி எனக்குத் தெரிந்த சில குறிப்புகள் இங்கே :

> இவர் கவிதை மட்டுமல்ல இவரும் , இவருடைய குரலும் மிருதுவானதுதான் என்று திரு.சுப்ரபாரதி மணியன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ”கனவு” கூட்டத்தில் இவர் ஒருமுறை உரையாற்றியது போதுதான் தெரிந்தது.

> மேற்ச்சொன்ன கூற்றில் இவர் உண்மையிலேயே மிருதுவானவர்தானா!!! என்று எனக்கு ஐயம் ஏற்படுத்திய கூட்டம் : இவருடைய ”காமக்கடும் புனல்” புத்தக வெளியீட்டின் போது இருந்த இவருடைய தோற்றம்.ஏனெனில் அதற்கு முன்பு நான் அவரை சந்தித்தபோது அவருக்கு அவ்வளவு பெரிய மீசையில்லை.

இந்தக்கூட்டத்தின் இன்னொரு மறக்கமுடியாத சம்பவம் என்னுடைய இன்றைய ஆதர்சங்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான திரு.யுவன் சந்திரசேகரைச் சந்தித்தது.இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு எழுத திட்டம்.

அ.முத்துலிங்கம் ஒரு முறை பிரபலங்களுக்கு பிடித்த புத்தகம்,அது ஏன் என்ற முறையில் தொகுத்து வெளியிட்ட புத்தகம் “கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.” இது திரு.ஜெயமோகன் அவர்களால் ”மணல் கடிகை” என்ற புத்தகத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையின் தலைப்பாகும். இந்த ”மணல் கடிகை” எழுதியவர் திரு.எம்.கோபால கிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.ஆனால் இந்த புத்தக வெளியீடு நடந்தது மேற்ச்சொன்னக் ”காம கடும்புனல்” புத்தக வெளியீட்டின் போதுதான்.

> இவருடைய “யாரோ ஒருத்தியின் நடனம் “ என்ற தொகுதியில் என்னைக் கவர்ந்த சில கவிதைகள் :



கடைசிவரைத் தொடர்வேன்
என்பது ஐயமே
வளைவுகளிலும் சந்துகளிலும்
புகுந்துசெல்லும் உன்னை
*

இந்த மழையில்
குளிர குளிர நனைகிறேன்
வராமலே போகலாம்
இன்னொரு மழை
*

பொருட்படுத்தாதீர்கள்
தனது அறைச் சாளரத்தை
அகலத் திறந்து வைக்காதவன்
கூறும் அபிப்ராயங்களை
*
அடிவானம் தெரியாத சந்தில்
ஒரு பூச்செடியும்
இல்லாத வீட்டில்
ஒருவன் வசிக்க நேர்ந்தால்
அதைச் சாபம் என்க

*

முல்லையின் அமில மணமும்
மூத்திரத்தின் கார நெடியும்
கலந்த வாசனை
புணர்ச்சியின் வாசனை
அது நிறத்தால் நெருப்பு
குணத்தால் தண்ணீர்.
*

புணர்ந்து வெளியேறியவர்கள்
தாம் புத்தரும் சித்தரும்
*

புணர்ச்சிக்குப் பின்பு
சுருங்குகிறது கனிவு
தடிக்கிறது உத்தரவு

*

சமூக விதி இதுதான்
புணர்ந்து விட்டால்
மணந்துகொள் அல்லது
மணந்து கொண்டு
புணர்ந்துகொள்

*

நல்லறுவை செய்த
நனிமாது நண்பா கேள்
கள்ளக் கலவிக்குத் தோது

*

கள்ளப்புணர்ச்சி ஒன்று
ஊரறிந்துவிட்டது
சந்திப்பின் மறைவிடங்களில்
தேம்பி அழுகிறது
அவர்கள் விட்டுச் சென்ற
அன்பு

*

உறங்கும் குழந்தை
சிணுங்கி எழுந்து
முடித்துவைக்கட்டும்
கருத்தரிப்பில் முடியாத
மலட்டுத் தம்பதியரின்
புணர்ச்சி நாடகத்தை

*

வியாழன், 22 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

நாயொன்றின் மீது
பிரியம்...வீட்டினுள் என்பதால்
உயர்சாதியே தேர்வாகிறது..
முதலில் உணவு, பிறகு
உங்களின் மொழியென பழக்குகிறீர்கள்....
நாயும்  தவழ்கிறது நன்றாகத் தரையில்
கூட நாவில்.....
நாயும் பெரிசாச்சு..
வீட்டுக்கு காவலாச்சு ...
தெருவை மிரட்டலாச்சு...
கதவை நீக்கும் போதே குரைக்க,
நுழைந்த பின் முகர்ந்து பார்க்க,
வால் குழைத்து சினுங்க,
ஒலிக்குறிப்பிற்கேற்ப அமர,ஆர்பரிக்க
தோள்களில் முன்னங்கால்களை வைக்க
என நாயும் பழக்கிக்கொண்டது

தட்டுச்சோற்றுக்கும்,வயிற்றுப்பாட்டுக்கும்...

அவ்வப்போது கண்ணில் இடறியதால்
நீக்கியாகிவிட்டது வாலையும்...
இப்பொழுதும் இறக்கை கட்டுகிறது உங்கள்
பேச்சு நாய்கள் மேலான உங்கள் பிரியம் சுட்டி..

நின்று  முகர்ந்து,வெரித்து
”நாய்கள் ஜாக்கிரதையை”
ஈரமாக்கிவிட்டுப்போகும்
இன்னும் சுயம் திரியாத
நாயொன்று...