வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தேசாந்திரியுடன் ஒரு மாலை



வாசிப்பின் கைப்பிடித்து நடந்ததில் கற்றுக்கொண்டது, கொண்டிருப்பது நிறைய ஆயினும் வாசிக்க இன்னும் இருக்கிறது என்ற எண்ணமே சமயங்களில் உற்சாகமாகவும், பதட்டமாகவுமிருக்கிறது. பாலியங்களில் பற்றி எரிந்து மத்திமம் துவங்குவதற்கு முன்பே அணைந்த நெஞ்சின் கங்குகளில், இன்னும் அணையாமல் காட்டுத் தீ போல அவ்வப்போது பற்றிக்கொள்வது வாசிப்பும் அதனொட்டி வரும் தேடலும்தான்.வாசிப்பில் திறக்கும் தருணங்களைப் போல அலாதியானது வேறெதுவுமில்லை. இது மட்டுமே என்னை காதல் முதலான விசமங்கள் தீண்டாமல் பள்ளி காலம் தொட்டு இன்று வரையிலும் கவசமாயிருந்து காத்துக்கொண்டிருக்கிறது.

வாசிப்பின் படிப்படியான கட்டங்களிலும் அதன் வளர்ச்சியிலும் எனை ஆகர்ஸித்தவர்கள் நிறைய..அவர்களில் ஒருவரும் முக்கியாமானவரும் எஸ்.ரா. இவர் எனக்கு விகடன் தேசாந்திரி தொடர்கள் மூலமாகத்தான் அறிமுகம். ஆனால் படித்த சில நாட்களிலேயே நினைவில் நன்றாக பதிந்துவிட்டார். அந்த கால கட்டங்களிலிருந்து சமீபம் வரையில் அதிகமும், மகிழ்வுமாக படித்தது அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளுமே.

நியூட்டன் முன்னால் விழுந்த ஆப்பிள் போல, சில நண்பர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. தங்களிடமிருக்கும் படித்த புத்தகங்களை ஒரிடத்தில் பகிர்ந்து முறைப்படுத்தினால் ஒரு நல்ல நூலகம் கிட்டுவதுடன், எப்போதும் ஒரு புத்தகம் என்பதற்கு வாய்ப்பும், வசதியும் எளிதாகுமென்றார்கள். வழக்கம் போலவே முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒசி என்றால் எனக்கு ஒன்னு..எங்க அண்ணனுக்கு ஒன்று என்று வங்கிக்காசளார் கை புழங்கும் பணம் போல, நூலகத்தை கைப்பற்றிக் கொண்டேன். வாய்ப்பு நேரும் போது வாசிக்க வேண்டிய புத்தங்கள் என்று என்னிடம் எப்போதும் இருக்கும் பட்டியலில் இருந்த பெரும்பாலான புத்தங்கங்ள் இங்கிருந்தே எனக்கு கிடைத்துவருகிறது. (இது பற்றி நல்லொரு அறிமுகம் இங்கே

முதலிரண்டுப் புத்தகளுக்குப் பிறகு ஆரம்பித்தது எஸ்.ராவின் நாவல் வரிசை. நெடுங்குருதி, உப பாண்டவம், துயில் மற்றும் யாமம் என என்னை முழுமையாக உள்வாங்கிக்கொண்டது எஸ்.ராவின் நாவல் ஆளுமையே. வாசித்த இந்த நான்கு நாவலும் அதனதன் சாரத்தில் நிச்சயம் தீவிர வாசிப்பார்வமுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டியவை. கட்டுரைகளிளோ..சிறுகதைகளிளோ காணப்படும் எஸ்.ரா அல்ல நாவலில். அவர் எழுத்தில் தவறாமல் தொடர்ந்து வரும் காந்தலைப்போல அவரும் நம்முடனே வந்து கொண்டிருப்பார்.

உப பாண்டவம்: என்னை மிக அதிகம் கவர்ந்த நாவல் உப பாண்டவமே. மகாபாரதம் என்ற ஒரு இலக்கியம் போதும். சமுத்திரம் பார்ப்புதும் பாரதம் படிப்பதும் நிச்சயம் வேறுவேறு அனுபமல்ல. உப பாண்டவம் ஒரு ஒடம். அது மகாபாரத்தின் சில முக்கியத் தீவுகளை எளிதான வார்த்தைகளில் ஆழ்ந்த புரிதலில் நமக்கு அறிமுகப்படுத்தும். பாரதத்தை இலக்கியம் சார்ந்து அணுக உப பாண்டவம் நுழைவாயில். எனக்குத்தெரிந்து துரியோதனின் சகோதரர்கள் நூறு பேர்களின் பெயர்களையும் இதில்தான் நான் பார்த்தேன். ஆழ்ந்த புரிதலும், வாசிப்புமட்டுமல்ல,இரண்டும் இயைந்த மனவிரிவும், கடும் உழைப்புமிருந்தால் மட்டுமே உபபாண்டவம் மாதிரியான ஒரு இலக்கியம் சாத்தியப்படும். ஏனெனில் எண்ணிக்கையற்று பல தலைமுறைகளில் பிறவித்தொடர்பு போல வாய்வழியாக செவிவழியாக தொடர்ந்து வரும் பாரதத்தில் முற்றிலும் புதிய இடங்களை தொட்டுணரச்செய்வது அத்தனைக்கத்தனை எளிய காரியமல்ல.

நெடுங்குருதி- விளையாட்டுப் பருவத்தில் நாம் ஆசையாக அள்ளித்தின்ற மண்ணை, தலைமுடியிழுத்து முரட்டுத்தனமாக அழுத்திப்பிடித்து இந்த வயதில் திணிப்பதுபோல மூச்சு முட்டுகிறது அவர் மொழி விரியும் இந்நாவலின் காட்சிகளில். மூர்ககம்,பிடிவாதம் மட்டுமே ஒரு வாழ்க்கையாக விரிந்து கிடக்கிறது இந்நாவல். புதைகுழி போல மனிதர்களை உள்ளிழுத்து அதன் சுவடே தெரியாமல் விரிந்து கிடக்கும் வீதியும், அதனூடே நுழையும் அனல்காற்றின் மூச்சும் நம்மை திணறடிக்காமல் இருந்தால் நிச்சயம் நம் அனுபவ சேகாரத்தில் விட்டுப்போன ஒரு பகுதியிருக்கிறது

துயில்- நோய்மை,குணம் என விரியும் நாவல் பேசுவது உடல் நோய்மை அதன் குணம் பற்றிமட்டுமல்ல. நோய்மையென்றே அறியப்படாத ஏராள விசயங்களும் அதன் விளைவுகளின் உக்கிரங்களும். இரண்டு புள்ளிகள் மீது லாவகமாக மொழியிழுத்துவரும் அனுபவங்களின் உக்கிரங்களை எந்த விருப்பு, வெறுப்புமின்றி சன்னல் வழி காட்சியாய் விரித்துகொண்டே போகும். நம்மால் எளிதாக கடந்து வர முடியாத விசயங்களில் சிக்க வைத்துவிட்டு தள்ளி நின்று கொள்ளும் மொழி இவருடையது.

யாமம்- வாசனைத்திரவியத்தின் பெயர்.எல்லோர் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் வியாப்பித்திருக்கும் ஒரு வெற்றிடம் போன்றது இந்த யாமம். இந்நாவலை படிக்கையில் இருள் ஒரு துளியாய் ஆகும் ஒரு காட்சி ஒயாமல் மனதில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இப்போதும் கூட யாமம் என்ற நாவல் என்னளவில் ஒரு துளி இருளின் படிமாகவே என்னுள் தங்கியிருக்கிறது. இதை என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.இதில் யாமம் ஒரு ஊடு பா..மொழி நெய்ததை புரிந்துகொள்ள முடியாமல அலைமோதிக் கொண்டிருக்கிறேன். ஜெ.மோ மீபொருண்மை என்று இந்நாவல் பற்றி ஒரு பெரிய கட்டுரையை எழுதுகிறார். அனேக விசயங்களில் விமலாதித்த மாமல்லனிடமிருந்து நான் மாறுபட்டாலும் அவர் சொன்னதுபோல ஜெ.மோ கட்டுரையை வாசிப்பதைக் காட்டிலும் யாமம் நாவல் வாசித்தது எளிதாகவேயிருந்தது.

தீவிர எழுத்தாளர்கள் ஒரு காலத்தில் உக்கிரமாக தொடங்கி அதே உக்கிரத்தோடே கைவிடப்படும் சிறு பத்திரிக்கை பற்றி எஸ்.ரா '' சிறு பத்திரிக்கை நடத்தாவன் முழுமையான எழுத்தாளராக முடியாது என்று ஒரு தொல்நம்பிக்கை தமிழ் இலக்கியத்தில் எப்போதும் உண்டு'' இதன் படி தன் முன்னோடிகள் வழி எஸ்.ரா அட்சரம் என்ற இதழை ஆரம்பித்து சுமார் 5 ஆண்டுகாலம் தமிழுக்கும், தீவிர இலக்கியத்திற்கும் தன்னால் இயன்ற பங்களிப்பை அளித்துள்ளார். இதற்கு முன்னரே இவர் கோணங்கியோடு சேர்ந்து ''கல்குதிரை'' என்ற என்ற இதழையும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். அனேகமாக தமிழ் இலக்கிய உலகில் நானறிந்த வரையில் கோண்ங்கியோடு அதிக நெருக்கமுள்ளவர் எஸ்.ரா. என்றே அறிகிறேன். நிறைய இடங்களில் கோணங்கியோடு கழிந்த பொழுதுகளை இவர் பகிர்ந்துள்ளார்.வாழ்வின் உக்கிரத்தருணங்களில் வெடிச்சிரிப்புகள் வரவழைக்க கூடியதுமானது இருவரும் இணைந்திருந்த நாட்கள்.

தமிழ் இலக்கிய உலகில் தேசாந்திரி என்ற சொல் இவருக்கே நன்கு பொருந்தும்போலும். அவ்வள்வு பயணங்கள் பகிர்தல்கள். ஜெ.மோ.வின் பயணமெல்லாம் பெரும்பாலும் ஒரு தீவிர நோக்கம் கொண்டதாகவே இருக்கும். ஆனால் எஸ்.ராவுக்கோ பயணம் மட்டுமே தீவிர நோக்கமாக இருக்கும் போல.
கவிதை தவிர இலக்கியத்தின் அனைத்து பங்களிப்புகள் சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படம், திரைப்பட நூல், குழந்தைகள் நூல், நாடகத்தொகுப்பு, நேர்காணல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு, தொகை நூல் என்று கால மாற்றத்திற்கேற்ப தற்போது இணையத்திலும் செயல்பட்டு மிக பரவலான கவனம் பெற்றவர். இவருடைய பரவலான பிரபலத்திற்கும், புகழுக்கும் மற்றொரு முக்கிய காரணமாக நான் அவதானிப்பது விமர்சனம் என்ற ஒரு துறையை கவனமாக யாரும் கவனிக்கா வண்ணம் இவர் தவிர்த்து வருவதும் கூட என்பது என் அவதானிப்பு

மேற்கண்ட என் சிறு குறிப்புகள் கண்ணைக் கட்டிக்கொண்டு கையால் எதையும் தொட்டுணர்வது போலவே. ஆனால் கையால் தொட்டுண்ர்வதை காதுக்கருகில் ஒருவர் நின்றுகொண்டு சொன்னால் இன்னும் எளிதாக உள்வாங்கலமல்லவா..ஆம் சேர்தளம் நண்பர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வை நான் அவ்வாறே உணர்கிறேன். வாய்ப்பிருக்கும் அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை இனிதாக்க வேண்டுமென சேர்தளம் நண்பர்கள் சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.


2 கருத்துகள்:

அன்பேசிவம் சொன்னது…

சிவா இப்போதான் பார்க்கிறேன். கலக்கலா எழுதியிருக்கீங்க....
இதையெல்லாம் குறிப்பாக வருபவர்களுக்கு கொடுத்திருக்கலாம்.

இன்னும் சரியாக திட்டமிட்டிருக்கலாம், நிகழ்ச்சியை என்று தோன்றுகிறது.

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி முர்ளீ.இப்போது கூட படித்துவிட்டு கருத்துச்சொன்னதுக்கு.அது என் தவறுதான்.நீங்கள் பதிவிட்ட அன்றே நான் பதிவிட்டிருக்க வேண்டும்.அலுவல் காரணமாக விட்டுவிட்டேன். பராவயில்லை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளலாம்